Pages

Saturday, 18 January 2020

உலகின் முதல் உயிருள்ள இயந்திர தவளை !!!!'-

`உலகின் முதல் உயிருள்ள 

இயந்திர தவளை !!!!'- 

தவளை செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட `ஜெனோபாட்'


தவளைகளிலிருந்து ஸ்டெம்செல்களைப் பயன்படுத்தி, உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகம் (Vermont) மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் (Tufts) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெனோபஸ் லேவிஸ் (Xenopus laevis) என்ற தவளையினத்தின் ஸ்டெம் செல்களைக் கொண்டு உருவாக்கியதால், இவற்றுக்கு 'ஜெனோபாட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள், ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான (0.04 அங்குலங்கள்) அகலம் கொண்டவை. இந்த அளவு, மனித உடல்களுக்குள் பயணிக்கப் போதுமானது. இவற்றால் நடக்கவும் நீந்தவும் முடியும். பல வாரங்கள் உணவு இல்லாமல் உயிர்வாழ முடியும்.


ஸ்டெம்செல் என்பது...
ஸ்டெம்செல்கள், நம் உடலில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு செல்கள். ஸ்டெம்செல்களுக்கு நம் உடலில் பல்வேறு வகை செல்களாக மாறி வளர்ச்சியடையும் ஆற்றல் உள்ளவை. நம் உடலின் பழுதுபார்க்கும் அமைப்பாகச் செயல்படுவதும் இந்த ஸ்டெம் செல்களே.

ஆராய்ச்சியாளர்கள், தவளையின் கருக்களிலிருந்து உயிருள்ள ஸ்டெம்செல்களை எடுத்து, அவற்றைப் பதப்படுத்தி, ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் உதவி கொண்டு அவற்றை குறிப்பிட்ட வடிவங்களாக மாற்றியமைத்தனர். பின்னர், இந்த செல்கள் அவற்றின் வேலைகளை சுயமாக செய்யத் தொடங்கின. இந்த ஜெனோபாட்டுகளுக்கு சுயமாகத் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் திறன் உண்டு. விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை வெட்டியபோது, ​​அது தானாகவே குணமடைந்து நகர்ந்தது.

இந்த 'உயிரியல் இயந்திரம்' எஃகு மற்றும் பிளாஸ்டிக்கால் உருவான, வழக்கமான ரோபோக்களால் செய்ய முடியாத விஷயங்களையும் செய்யும். வழக்கமான ரோபோக்களைப் போலில்லாமல் உயிரியல் இயந்திரங்களாக, ஜெனோபாட்டுகள் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மனித ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானவை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தம்செய்வதற்கும், பெருங்கடல்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேகரிப்பதற்கும், மனித உடல்களுக்குள் மருந்துகளை எடுத்துச்செல்வதற்கும் ஜெனோபாட்டுகள் பயன்படுத்தப்படலாம். ஊட்டச்சத்துகள் இல்லாமலே, பல வாரங்களுக்கு ஜெனோபாட்டுகள் நீர்ச்சூழலில் வாழ முடியும். இதனால் அவை உடலின் உள்ளே மருந்தை எடுத்துச்செல்ல ஏற்றவை. மேலும், மனித உடல் பற்றி அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெனோபாட்டுகள் உதவக்கூடும், மனித வாழ்வின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கதவுகளை இது திறக்கக்கூடும்.



ஸ்டெம்செல் என்றால் என்ன ???
மனித உடலிலுள்ள உள்ள சுமார் 1 லட்சம் கோடி கலம்.
Cellகளில் , ஒரு வகை தான் ஸ்டெம்செல் , இவ்வகையான அணுக்கள் பல செல் உயிரிகள் அனைத்திலும் உண்டு.

ஸ்டெம் செல்லின் பிரத்தியேகமான இரண்டு
குணங்கள்.....
1. தன்னைத்தானே
புதுப்பித்துக்கொண்டு (Self renewal),
ஒரே பண்புடைய மற்றொரு அணுவை
தானே உருவாக்கிக்கொள்ளும்
திறன்.
2. உடலின் உள்ள எல்லா வகையான
(210 வகை) அணுக்களாகவும்
தன்னை உருமாற்றிக்கொள்ளும்
திறன்.
உடலின் எந்த ஒரு செல்லுக்கு,
தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு,
உடலின் 210 விதமான அணுக்களாகவும்
தேவையான தருணத்தில், தன்னை
உருமாற்றிக்கொள்ளும் திறன்
இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம்
செல் என்கிறது உயிர்அறிவியல்.
இது தமிழில் குறுத்தணுக்கள் அல்லது
பலுக்கல் என்னும் கலைச்சொல்லால்
அழைக்கப்படுகிறது.

ஸ்டெம் செல் எத்தனை வகைப்படும்?
அவை யாவை?
இயற்கையான ஸ்டெம் செல்கள்
அடிப்படையில் இரு வகைப்படும். அவை,
1. சிசு ஸ்டெம் செல்கள் (Embryonic Stem
cells, ESC) (சிசுக்களில் இருப்பவை)
2. திசு ஸ்டெம் செல்கள் (Tissue stem
cells/Adult stem cells) (உடலின் சில
வகையான திசுக்களில் இருப்பவை)
இயற்கையான அப்படீன்னு சொன்னாலே
செயற்கையான ஒன்று இருக்க வாய்ப்பு
இருக்குமில்லையா? ஸ்டெம் செல்களிலும்
அது உண்டு .
செயற்கை ஸ்டெம் செல்கள் என்ற ஒரு வகை
ஸ்டெம் செல்களும் உண்டு. அவை,
தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் அல்லது
இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம்
செல்க ள் (Induced pluripotent stem cells, iPS cells).

அதாவது,
உடலின் சில வகை (தோல், ரோமம்)
அணுக்களை மரபணுவியல்
தொழில்நுட்பத்தின் மூலம், சில வகையான
மரபணக்களைக் கொண்டு ஸ்டெம்
செல்லாக மாறத் தூண்டப்பட்டு, மனிதனால்
செயற்கையாக உருவாக்கப்படும் ஸ்டெம்
செல்களே தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள்
எனப்படுகிறது.
இவை மூன்றையும் தவிர்த்து, ஒரு
புதுவகையான ஸ்டெம் செல் உள்ளது. அவை,
புற்றுநோய் ஸ்டெம் செல்கள் (Cancer stem
cells) எனப்படுகின்ற ன.
புற்றுநோய் ஸ்டெம் செல்கள்:
உடலில் ஏற்படும் எல்லா வகையான புற்று
நோய்களுமே, சிகிச்சைக்குப்பின் மீண்டும்
வளர்ந்துவிடுகின்றன. கடந்த 15
ஆண்டுகளில் நடத்தப்பட்ட புற்றுநோய்
ஆய்வில், சில புற்று நோய்களில் உள்ள ஒரு
குறிப்பிட்ட வகை அணுக்கள், ஸ்டெம்
செல்களின் பிரத்தியேக குணங்களான,
தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும்
மற்றும் புற்றுநோயின் எல்லா வகையான
செல்களையும் உருவாக்கும் தன்மையுடனும்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புற்றுநோயிலுள்ள இவ்வகை அணுக்கள் திசு
ஸ்டெம் செல்களிலிருந்து, மரபணு
சேதங்களால் (mutation) பாதிப்படைந்து, புற்று
நோய் அணுக்களாக மாறியிருக்கக் கூடும்,
என்ற யூகத்தினடிப்படையில், இவ்வகை
அனுக்களை புற்றுநோய் ஸ்டெம் செல்கள்
என்று புற்றுநோயியல் அறிஞர்கள்
கூறுகின்றனர்.

புற்றுநோயிலுள்ள, திசு ஸ்டெம்
செல்களிலிருந்து, மரபணு சேதங்களால்
(mutation) பாதிப்படைந்து, அதனால்
புற்றுநோய் அணுக்களாக மாறி,
பொதுவான புற்றுநோய் அணுக்களை
தாக்கும் தன்மையுள்ள, சிகிச்சையின்
கதிர்வீச்சு மற்றும் வேதியல்
மருந்துகளிலிருந்து தன்னைக்
காத்துக்கொள்ளும் திறனைப் பெற்று,
புற்றுநோய்க்கு அழியா வரம் அளிக்கும்
இவ்வகையான அணுக்களை புற்றுநோய்
ஸ்டெம் செல்கள் என்கிறார்கள்
புற்றுநோயியல் ஆய்வாளர்கள்.




                    தமிழால் இணைவோம் !!!
                     அறிவால் உயர்வோம் !!!
                            தமிழ் வாழ்க !!!
              அறிவியலின் தேடல் தொடரும்.
                         வலியே  " வலிமை "
                    - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment