மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் அனைவருமே அந்தந்த காலகட்டத்தில் வலிமையுடைய அரசுகளாக இருந்தனர். மூவேந்தர்கள் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ் நிலங்களிலும் பிரம்மாண்டமான கோயில்கள் உள்ளன. கொங்கு மண்டலத்திலும் தனித்துவமான கோயில்கள் உள்ளன.
பேரரசன் ராசேந்திர சோழனின் ஆட்சி சோழ பேரரசுக்கு மட்டுமல்லாமல் ஒப்பீட்டளவில் அனைத்து தமிழ் அரச மரபுகளைப் பார்க்கிலும் தனித்துவம் மிக்க பொற்கால ஆட்சியாக இருந்தது.
உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோயிலும் அவருடைய மகன் ராசேந்திர சோழனால் எழுப்பப்பட்ட கங்கைகொண்ட சோழீசுவரமும் அதன் பெருமை மிகு கட்டுமானங்கள்.
ஐரோப்பிய பேரரசன் அலெக்சாந்தர் மங்கோலிய நாடோடிகளின் ஒருங்கிணைத்த பேரரசன் செங்கிஸ்கான் ஆகியோரை விடவும் பெரிய நிலப்பரப்பை ஆண்டது சோழர் மரபு.
பட உரிமம் : தமிழ் தேசிய பேரியக்கத்தின் இணையதளம்
ராஜேந்திரச் சோழனின் கப்பற்படை, அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கப்பல் படையாக இருந்தது. கடற்படையின் மூலம் மலேசிய தீபகற்கம், இந்தோனேசியத் தீவுகள் உட்பட கிழக்காசிய நாடுகளின் பெரும்பகுதியை ராஜேந்திரச் சோழன் கைப்பற்றினார்.
அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் (அப்பொழுது இந்தியா என்ற ஒரு நாடு உருவாகியிருக்கவில்லை)ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை . ராஜேந்திர சோழனுக்கு முன்பாக, ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று மாலத்தீவை வென்றிருக்கிறான். ஈழ மண்டலப் படையெடுப்பையும் நடத்தியிருக்கிறான்.
ஆனால், ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனேசியப் பகுதி) வென்றான். கடாரத்திற்கு (தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி) பல கப்பல்களை அனுப்பி ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ தேசத்திற்கு கொண்டுவரப்பட்டன.
ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகள் கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களைக் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன்னாட்டோடு இணைத்து ஆட்சி செய்யவில்லை. மாற்றாக செல்வங்களைச் சேர்ப்பது, வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன.(அதாவது இப்பொழுது இந்தியாவில் தொழில் பாதுகாப்பு படை வணிகர்களின் நலனுக்காக செயல்படுவது போல் அப்பொழுதே கடல் கடந்து பயணம் செய்யும் வணிகர்களுக்கு கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க சோழப் பேரரசு ஒருவிதமான கமாண்டோ படை வைத்திருந்தது)
அந்த காலகட்டத்தில் ஐகோலே ஐநூற்றுவர், மணிநகரம் ஆகிய வணிகக் குழுவினரின் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்த வெற்றிகளின் மூலம் அந்தந்த நாட்டு மன்னர்கள் இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினர். 1017-18ல் நடந்த ஈழப் போரில் வெற்றிபெற்ற ராஜேந்திரச் சோழன், ஈழ நாட்டு மன்னர்களின் முடியையும் பாண்டிய மன்னர்கள் கொடுத்துவைத்திருந்த இந்திர முடியையும் கைப்பற்றினார் (ஆதாரம் : கரந்தைச் செப்பேடுகள்)
புகழ் மிக்க சேர மரபு :
சேர மரபிலும் பெரும் சாதனைகள் புரிந்த மன்னர்கள் இருக்கின்றனர்.
உதியன் சேரலாதன், தமிழ்நாடு முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து ஆட்சி செய்த பேரரசன், இவர் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டார். இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார்.
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக்குட கடல் குளிக்கும்
(புறநானூறு: 2: 9-10)
கூகுள் எனக்கு இன்னொரு சேரமன்னர் நெடுஞ்சேரலாதன் இமயமும் குமரியும் இருபக்கமும் எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தார். தமிழர்களை இழிவுபடுத்திய கனகவிசயனுக்கு பாடம் கற்பிக்க பெரும்படையுடன் வடநாடு சென்று ஆரிய அரசர்களை வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக இமயமலை மீது தன் அரசின் அடையாளமாகிய வில்லினைப் பொறித்தார் என்பது வரலாறு.
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து
(2ஆம் பத்து-பதிகம்:4)
மேலும் கடம்பர் என அழைக்கப்பட்ட கடல் கொள்ளையர்களை எதிர்த்து கடல்மேல் போர்புரிந்து வென்றுள்ளார்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன
(அகநானூறு, 347:2-4)
இன்னும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன சேர மரபின் பெருமைகள்.
சிகரம் தொட்ட பாண்டிய மரபினர் :
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியர் தலைநகரான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம் கடற்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது.
வால்மீகி இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிதது என்றும் முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் உள்ளது.
வால்மீகி ராமாயணத்தில் ராவணனின் விமானம் பாண்டிய தேசங்களுக்கு மேலாக பறந்த பொழுது அந்த தேசங்களில் வளமை பொங்கி வழிந்ததாக வர்ணனை செய்கிறது.
மெகஸ்தனிஸ், தாலமி,,பிளினி, நிகோலஸ் தமாஸ்கஸ், யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்பில் பாண்டியர்களின் படைமாட்சி மற்றும் கிரேக்கம் சீனத்துடன் அவர்கள் கொண்டுள்ள வணிக அரசியல் உறவுகளையும் விவரித்தனர்.
இதிலிருந்து தமிழ் தேசத்தை ஆண்ட அனைத்து தரப்பினருமே இந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் புகழ் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
ஆனால் சோழர்கள் ஏறக்குறைய கிழக்காசிய நாடுகள் முழுவதையும் படையெடுத்து வென்றதாலும் மற்ற அரசு மரபுகளை விட சற்று கூடுதலான தனித் தன்மை கொண்டிருந்தாலும் அவர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். மற்றபடி மொழி அடிப்படையில் அனைவரும் ஒரே இனம் தான். தமிழ் நாட்டின் எந்த பகுதியில் பிறந்தாலும் அது பெருமைக்குரியதே. எனவே வட்டார வாதம் பேசுவது போன்ற கேள்விகளில் பொருள் இல்லை. மொழி வழியில் நாமெல்லாம் தமிழினம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது தமிழ்நாடு என்று வழங்கப்பட்டு வந்தது சங்க காலத்திலிருந்தே….
இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து” - புறநானூறு-19
(இதில் தமிழ் தலை என்பது தமிழர்கள் என்ற பொருளில் தானே தவிர தமிழ் மொழி என்றல்ல)
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், தமிழரின் போர்த்திறத்தை அறியாது இகழ்ந்த ஆரிய மன்னர்களைப் பற்றிக் கூறுகிறார்:
"செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்அறியாது மலைந்த ஆரிய மன்னர்"
(இக்கூற்றில் உள்ள “தமிழ்” என்ற சொல், தமிழர்களின் ஆற்றல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.)
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக் கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று சிவபெருமா னைப் புகழ்ந்துரைத்தார். எனவே இந்த இடத்திலும் தமிழர்கள் என்ற மொழி வழி இனம் உறுதிப்படுத்தப்படுகிறது.
தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கும் போது,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்”
என்றார் பனம்பாரனார்.
(வேங்கட மலையிலிருந்து குமரி முனை வரை தமிழர் தாயகம் என்கிறார் அவர். கிழக்கிலும் மேற்கி லும் கடலே எல்லை.)
அகநானூற்றில் 227 ஆம் பாடல் மிகத் தெளிவாக“தமிழகம்” என்று கூறுகிறது.
“தமிழகப் படுத்த விமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநாளி ருக்கை”
சிலப்பதிகாரத்தில் இன்னொரு இடத்தில் இளங்கோவடிகள்,
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி”
என்கிறார்.இளங்கோவடிகள் தமிழகம் என்று ஒற்றை அலகில் அடையாளப் படுத்தியபோது சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று மூன்று நாடுகள் மூன்று ஆட்சிகள் தமிழகத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ்நாடு என்ற நாடு இல்லை என்ற பிதற்றல்கள் பொய்யாகின்றன.
எனவே அனைத்து தமிழ் அரச மரபுகளும் தமிழினம் என்று மொழி வழியில் தான் அடையாளப்படுத்தப் பட்டுள்ள வட்டார வாதம் வேண்டாம்.
தமிழ்நாட்டில் நாம் எங்கு பிறந்திருந்தாலும் அங்கே ஒரு அரசு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புகழ்மிக்க ஒரு ஆட்சியை நடத்தியது என்பது மட்டும் உறுதி. இங்கு பிறக்கவில்லை அங்கு பிறக்கவில்லை என்ற வருத்தம் தேவையற்றது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பிறந்தாலும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பிறந்தாலும் ஒரு பெருமைமிக்க இனத்தில் பிறந்தோம் என்பதே போதுமானது. வெறுமனே பழம்பெருமை களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டிருக்காமல் முற்போக்கு சிந்தனைகளின் அடிப்படையில் நடை போடுவது நல்லது. அதுமட்டுமின்றி "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலகியல் வாதம் பேசிய இனம் தமிழினம்.