Pages

Sunday, 27 June 2021

சோழ மன்னர் மற்றும் சேர மன்னர்களின் சிறப்பு

 மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் அனைவருமே அந்தந்த காலகட்டத்தில் வலிமையுடைய அரசுகளாக இருந்தனர். மூவேந்தர்கள் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ் நிலங்களிலும் பிரம்மாண்டமான கோயில்கள் உள்ளன. கொங்கு மண்டலத்திலும் தனித்துவமான கோயில்கள் உள்ளன.

பேரரசன் ராசேந்திர சோழனின் ஆட்சி சோழ பேரரசுக்கு மட்டுமல்லாமல் ஒப்பீட்டளவில் அனைத்து தமிழ் அரச மரபுகளைப் பார்க்கிலும் தனித்துவம் மிக்க பொற்கால ஆட்சியாக இருந்தது.

உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோயிலும் அவருடைய மகன் ராசேந்திர சோழனால் எழுப்பப்பட்ட கங்கைகொண்ட சோழீசுவரமும் அதன் பெருமை மிகு கட்டுமானங்கள்.

ஐரோப்பிய பேரரசன் அலெக்சாந்தர் மங்கோலிய நாடோடிகளின் ஒருங்கிணைத்த பேரரசன் செங்கிஸ்கான் ஆகியோரை விடவும் பெரிய நிலப்பரப்பை ஆண்டது சோழர் மரபு.

பட உரிமம் : தமிழ் தேசிய பேரியக்கத்தின் இணையதளம்

ராஜேந்திரச் சோழனின் கப்பற்படை, அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கப்பல் படையாக இருந்தது. கடற்படையின் மூலம் மலேசிய தீபகற்கம், இந்தோனேசியத் தீவுகள் உட்பட கிழக்காசிய நாடுகளின் பெரும்பகுதியை ராஜேந்திரச் சோழன் கைப்பற்றினார்.

அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் (அப்பொழுது இந்தியா என்ற ஒரு நாடு உருவாகியிருக்கவில்லை)ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை . ராஜேந்திர சோழனுக்கு முன்பாக, ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று மாலத்தீவை வென்றிருக்கிறான். ஈழ மண்டலப் படையெடுப்பையும் நடத்தியிருக்கிறான்.

ஆனால், ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனேசியப் பகுதி) வென்றான். கடாரத்திற்கு (தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி) பல கப்பல்களை அனுப்பி ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ தேசத்திற்கு கொண்டுவரப்பட்டன.

ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகள் கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களைக் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன்னாட்டோடு இணைத்து ஆட்சி செய்யவில்லை. மாற்றாக செல்வங்களைச் சேர்ப்பது, வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன.(அதாவது இப்பொழுது இந்தியாவில் தொழில் பாதுகாப்பு படை வணிகர்களின் நலனுக்காக செயல்படுவது போல் அப்பொழுதே கடல் கடந்து பயணம் செய்யும் வணிகர்களுக்கு கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க சோழப் பேரரசு ஒருவிதமான கமாண்டோ படை வைத்திருந்தது)

அந்த காலகட்டத்தில் ஐகோலே ஐநூற்றுவர், மணிநகரம் ஆகிய வணிகக் குழுவினரின் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்த வெற்றிகளின் மூலம் அந்தந்த நாட்டு மன்னர்கள் இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினர். 1017-18ல் நடந்த ஈழப் போரில் வெற்றிபெற்ற ராஜேந்திரச் சோழன், ஈழ நாட்டு மன்னர்களின் முடியையும் பாண்டிய மன்னர்கள் கொடுத்துவைத்திருந்த இந்திர முடியையும் கைப்பற்றினார் (ஆதாரம் : கரந்தைச் செப்பேடுகள்)

புகழ் மிக்க சேர மரபு :

சேர மரபிலும் பெரும் சாதனைகள் புரிந்த மன்னர்கள் இருக்கின்றனர்.

உதியன் சேரலாதன், தமிழ்நாடு முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து ஆட்சி செய்த பேரரசன், இவர் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டார். இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார்.

நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக்குட கடல் குளிக்கும்

(புறநானூறு: 2: 9-10)

கூகுள் எனக்கு இன்னொரு சேரமன்னர் நெடுஞ்சேரலாதன் இமயமும் குமரியும் இருபக்கமும் எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தார். தமிழர்களை இழிவுபடுத்திய கனகவிசயனுக்கு பாடம் கற்பிக்க பெரும்படையுடன் வடநாடு சென்று ஆரிய அரசர்களை வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக இமயமலை மீது தன் அரசின் அடையாளமாகிய வில்லினைப் பொறித்தார் என்பது வரலாறு.

அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து

(2ஆம் பத்து-பதிகம்:4)

மேலும் கடம்பர் என அழைக்கப்பட்ட கடல் கொள்ளையர்களை எதிர்த்து கடல்மேல் போர்புரிந்து வென்றுள்ளார்

சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன

(அகநானூறு, 347:2-4)

இன்னும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன சேர மரபின் பெருமைகள்.

சிகரம் தொட்ட பாண்டிய மரபினர் :

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியர் தலைநகரான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம் கடற்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிதது என்றும் முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் உள்ளது.

வால்மீகி ராமாயணத்தில் ராவணனின் விமானம் பாண்டிய தேசங்களுக்கு மேலாக பறந்த பொழுது அந்த தேசங்களில் வளமை பொங்கி வழிந்ததாக வர்ணனை செய்கிறது.

மெகஸ்தனிஸ், தாலமி,,பிளினி, நிகோலஸ் தமாஸ்கஸ், யுவான் சுவாங் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்பில் பாண்டியர்களின் படைமாட்சி மற்றும் கிரேக்கம் சீனத்துடன் அவர்கள் கொண்டுள்ள வணிக அரசியல் உறவுகளையும் விவரித்தனர்.

இதிலிருந்து தமிழ் தேசத்தை ஆண்ட அனைத்து தரப்பினருமே இந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் புகழ் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

ஆனால் சோழர்கள் ஏறக்குறைய கிழக்காசிய நாடுகள் முழுவதையும் படையெடுத்து வென்றதாலும் மற்ற அரசு மரபுகளை விட சற்று கூடுதலான தனித் தன்மை கொண்டிருந்தாலும் அவர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். மற்றபடி மொழி அடிப்படையில் அனைவரும் ஒரே இனம் தான். தமிழ் நாட்டின் எந்த பகுதியில் பிறந்தாலும் அது பெருமைக்குரியதே. எனவே வட்டார வாதம் பேசுவது போன்ற கேள்விகளில் பொருள் இல்லை. மொழி வழியில் நாமெல்லாம் தமிழினம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது தமிழ்நாடு என்று வழங்கப்பட்டு வந்தது சங்க காலத்திலிருந்தே….

இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து” - புறநானூறு-19

(இதில் தமிழ் தலை என்பது தமிழர்கள் என்ற பொருளில் தானே தவிர தமிழ் மொழி என்றல்ல)

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், தமிழரின் போர்த்திறத்தை அறியாது இகழ்ந்த ஆரிய மன்னர்களைப் பற்றிக் கூறுகிறார்:

"செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்அறியாது மலைந்த ஆரிய மன்னர்"

(இக்கூற்றில் உள்ள “தமிழ்” என்ற சொல், தமிழர்களின் ஆற்றல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.)

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக் கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று சிவபெருமா னைப் புகழ்ந்துரைத்தார். எனவே இந்த இடத்திலும் தமிழர்கள் என்ற மொழி வழி இனம் உறுதிப்படுத்தப்படுகிறது.

தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கும் போது,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்”

என்றார் பனம்பாரனார்.

(வேங்கட மலையிலிருந்து குமரி முனை வரை தமிழர் தாயகம் என்கிறார் அவர். கிழக்கிலும் மேற்கி லும் கடலே எல்லை.)

அகநானூற்றில் 227 ஆம் பாடல் மிகத் தெளிவாக“தமிழகம்” என்று கூறுகிறது.

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநாளி ருக்கை”

சிலப்பதிகாரத்தில் இன்னொரு இடத்தில் இளங்கோவடிகள்,

இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி”

என்கிறார்.இளங்கோவடிகள் தமிழகம் என்று ஒற்றை அலகில் அடையாளப் படுத்தியபோது சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று மூன்று நாடுகள் மூன்று ஆட்சிகள் தமிழகத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ்நாடு என்ற நாடு இல்லை என்ற பிதற்றல்கள் பொய்யாகின்றன.

எனவே அனைத்து தமிழ் அரச மரபுகளும் தமிழினம் என்று மொழி வழியில் தான் அடையாளப்படுத்தப் பட்டுள்ள வட்டார வாதம் வேண்டாம்.

தமிழ்நாட்டில் நாம் எங்கு பிறந்திருந்தாலும் அங்கே ஒரு அரசு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புகழ்மிக்க ஒரு ஆட்சியை நடத்தியது என்பது மட்டும் உறுதி. இங்கு பிறக்கவில்லை அங்கு பிறக்கவில்லை என்ற வருத்தம் தேவையற்றது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பிறந்தாலும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பிறந்தாலும் ஒரு பெருமைமிக்க இனத்தில் பிறந்தோம் என்பதே போதுமானது. வெறுமனே பழம்பெருமை களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டிருக்காமல் முற்போக்கு சிந்தனைகளின் அடிப்படையில் நடை போடுவது நல்லது. அதுமட்டுமின்றி "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலகியல் வாதம் பேசிய இனம் தமிழினம்.

Wednesday, 16 June 2021

மனிதப் பரிணாமத்திற்கான அவசியமும் , விளக்கமும்.

 இந்த பேரண்டம் (Universe) தோன்றுவதற்கான அவசியம் என்ன?

இந்த பேரண்டத்தின் ஒரு துகளாக சூரியன் தோன்றுவதற்கான அவசியம் என்ன?

அந்த துகளினும் சிறு துகள்களாக நமது பூமி மற்றும் பிற கோள்கள், நிலா ஆகியவை தோன்றுவதற்கான அவசியம் என்ன?

பேரண்டத்தின் ஒரு சிறு துகளான பூமியில், கண்ணுக்குப் புலப்படாத ஒரு செல் உயிரி முதல் பிரம்மாண்டமான நீலத்திமிங்கிலம் வரை பல்வேறு உயிர்கள் தோன்றுவதற்கான அவசியம் என்ன?

வெறும் கல்லும், மண்ணும், கடல் நீரும் சூழ்ந்த கோளமாக மட்டுமே இந்த பூமி இருந்து இருக்கலாமே? ஏன் உயிர்கள் தோன்றின?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்து விட்டால், மனிதப் பரிணாமத்திற்கான அவசியம் என்ன என்பது உங்களுக்கு விளங்கி விடும்.

ஆனால், இந்த பேரண்டத்தின் முன் மனிதர்கள் எனப்படும் அற்பப் பிறவிகளான நமக்கு இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துக் கொள்ள நமது ஒட்டு மொத்த மனிதகுலத்தின் ஆயுளும் போதப் போவது இல்லை.

சரி, இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன்.

உயிர்கள் வாழ்வதற்கான மிகச் சரியான, துல்லியமான சூழல் பூமியில் மட்டுமே நிலவியதால் தான் பூமியில் உயிர்கள் தோன்றி உயிர்க்கோளம் ஆகியது. இந்த விதமான, துல்லியமான சூழல் மற்றக் கோள்களில் இல்லாததால், அந்தக் கோள்களில் எல்லாம் உயிர்கள் தோன்றி வாழ்வதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

சரி, அது என்ன துல்லியமான சூழல் என்று பார்த்து விடுவோம். பூமி சூரியனில் இருந்து மிக நெருக்கத்திலோ அல்லது வெகுத்தொலைவிலோ இல்லை. மிகவும் சரியான தொலைவில் உள்ளது. இதனால் பூமியில் அதிக வெப்பமோ, அதிகக் குளிர்ச்சியோ இல்லை. இதனால், உயிர்கள் வாழ்வதற்கான சரியான தட்பவெப்பம் நிலவுகிறது. 12 மணி நேரம் பகலும், 12 மணி நேரம் இரவும் என ஒரு நாள் சரியான விகிதத்தில் உள்ளது. அதிக நேரம் ஒளியும் இல்லை, அதிக நேரம் இருளும் இல்லை.

குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவநிலைகளும் மிகச் சரியான விகிதத்தில் உள்ளது. எனவே ஆண்டு முழுவதும் குளிர் மட்டுமே நிலவுவதோ, மழை மட்டுமே பொழிவதோ, சூரியவெப்பம் மட்டுமே வாட்டுவதோ இல்லை. இப்படிப்பட்ட கலவையான சூழல் உயிர்கள் தோன்றுவதற்கும், உயிர்கள் வாழ்வதற்கும் மட்டும் உதவவில்லை. உயிர்களின் பரிணாம வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியுள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.

உயிர்கள் தோன்றிய உடன் அவை ஒரே இடத்தில் நிலை கொள்ளவில்லை. உணவுத் தேடி அவை, இடம் விட்டு இடம் செல்ல நேர்ந்தது. காற்று, மழை, புயல், கோடை வெப்பம், கடும் பனி போன்ற இயற்கை இடர்களை சமாளிக்க வெவ்வேறு வாழிடங்களைத் தேடி ஓட நேர்ந்தது. இப்படி ஏற்பட்ட வெவ்வேறு சூழ்நிலைகளின் தாக்கத்தால் அந்த உயிரிகளின் மரபணுக்களில் மாற்றம் நிகழ்ந்தன. அந்த மரபணு மாற்றங்கள் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டன.

இப்படி வெவ்வேறு வாழிடங்களில், வெவ்வேறு கால நிலைகளில், வெவ்வேறு பருவ நிலைகளில், வெவ்வேறு இயற்கை சூழலில் வாழ்வதற்காக உயிரிகள் சில கூடுதல் திறன்களை பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்றன.

எனவே எந்த ஒரு உயிரிக்கும் மனிதன் உட்பட, இந்த உலகில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சி அவசியம்.

காலம் காலமாய் மரங்களையே வாழ்விடமாகக் கொண்ட நம் மூதாதைய குரங்கினங்களுக்குத் தொடர்ந்து மரங்களில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவை மரங்களை விட்டுக் கீழிறங்கி குகைகளுக்குள் தஞ்சம் அடைந்து இருக்கலாம். அப்படி குகைகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்ததால் மரத்தில் வாழ்வதற்குரிய சில பண்புகளை இழந்து, சில புதிய பண்புகளைப் பெற்று மனிதனாகப் பரிணாம வளர்ச்சியடைந்து இருக்கலாம். இப்படி குரங்கிலிருந்து தோன்றிய மனித இனத்திற்கு, மீண்டும் மரத்திலேறி வாழ வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் தரையிலேயே வாழத் துவங்கியதால் அதற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள பரிணாம வளர்ச்சி அவசியமானது. புரிந்ததா?

பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள கீழே உள்ள எனது பதிலைப் பார்க்கவும்!

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான். ஏன் ஏனைய மிருகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை?

விளக்குவதற்கு கடினமான கேள்வி. எளிமையாக விளக்க முயல்கிறேன்.

பரிணாம வளர்ச்சியைப் (Evolution) பற்றி புரிந்துக் கொள்வதற்கு முன் உயிர்கள் எப்படித் தோன்றின என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். உயிர்கள் எப்படித் தோன்றின என்றுப் புரிந்துக் கொள்வதற்கு முன் இந்த பூமி எப்படித் தோன்றியது எனத் தெரிந்துக் கொள்ள வேண்டும். எனவே பூமியின் தோற்றத்தில் இருந்து துவங்குகிறேன்.

இந்த அண்டம் (Universe) செயல்படத் துவங்கிய உடன், வெற்று வெளியில் (Space) மிதந்து கொண்டிருந்த பல அணுத்துகள்கள் (Atomic particles) ஒன்றிணைந்து பிரம்மாண்ட உருவம் கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதால் பெருவெடிப்பு (Big bang theory) நிகழ்ந்தது. அந்த பெருவெடிப்பில் வெடித்துச் சிதறிய ஒரு துண்டுத் தீக்கோளம் தான் சூரியன். சூரியன் ஒரு தீக்கோளமாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள பல வாயுக்கள். பெருவெடிப்பின் போது பல அணுத்துகள்கள் ஒன்றிணைந்தது தான், அந்த வாயுக்கள் உருவாகக் காரணம்.

பெருவெடிப்பின் காரணமாக ஒரு விசைத் (Force) தோன்றியது. அந்த விசை சூரியனை ஒரு அச்சில் (Axis) நிறுத்தி சுழலச் செய்தது. இப்படியாக சூரியன் பல நூறு கோடி ஆண்டுகளாக சுழன்று கொண்டேயிருந்தது. அந்த சுழற்சியின் காரணமாக சூரியனில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அந்த வெடிப்பில் பலத் துண்டுக் கோளங்கள் சிதறியது. அந்தத் துண்டுக் கோளங்களை சூரியன் தனது விசையின் மூலம் ஒரு அச்சில் நிறுத்தி தன்னைத் தானே சுழல செய்தும், தன்னையும் சுற்றி வரச் செய்தது. அந்தத் துண்டுக் கோளங்கள் தான் நம் சூரியக் குடும்பத்தின் கோள்கள் மற்றும் நிலா.

இப்படி சூரியனிலிருந்து வெடித்து சிதறியத் துண்டுக் கோளமான நமது பூமியும் ஆரம்பத்தில் சூரியன் போலவே கனன்றுக் கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக அதன் வெளிப்புறப்பகுதி குளிரத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட குளிர்ச்சியின் காரணமாக நமது பூமியை சுற்றி இருந்த வாயுக்கள் குளிரத் துவங்கி மழையாகப் பொழியத் துவங்கியது. இந்த மழை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பொழிந்துத் தள்ளியது. இந்த மழை நமது பூமியின் மேற்பரப்பில் இருந்த பள்ளங்களை நிரப்பத் துவங்கியது. அது தான் கடல். ஆம், உயிர் தோன்றுவதற்கான மூலமான நீர் வந்து விட்டது. இனி தான் சுவாரசியமே!

நம் பூமியின் மேற்பரப்பில் இருந்த கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய அணுக்கள் நீருடன் வேதிவினை (Chemical reaction) புரிந்து ஒரு செல் உயிரிகள் தோன்றியிருக்கலாம். பின்னர் அவை காலப்போக்கில் பல செல் உயிரியாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம். அந்த பல செல் உயிரிகள் நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, ஊர்வன, பறப்பன, தாவரங்கள் எனப் பல உயிரிகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம். இந்தப் பரிணாம வளர்ச்சி பல கோடி ஆண்டுகளாக நடைபெற்றிருக்கலாம்.

சரி, இந்த பரிணாம வளர்ச்சி இப்படித்தான் நடந்திருக்கலாம் என்பதற்கு நம் முன் இருக்கும் சில சான்றுகளைப் பார்க்கலாம். விலாங்கு மீன், கடல் பாம்புகள், முதலைகள் போன்ற நீர் வாழிகள் எதோ ஒரு இயற்கை சீற்றத்தினால் நீரைவிட்டு நிலத்திற்கு வந்து இன்றைய ஊர்வன இனமாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம்.

அடுத்ததாக இருக்கும் இன்னொரு சான்று வெளவால்கள். வௌவால்கள் பறவைகளுக்கும், பாலூட்டிகளுக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினமாக இருக்கலாம். ஏனெனில் பறக்கும் திறனுடைய ஒரே பாலூட்டி வௌவால்கள் மட்டும் தான். நாம் அறிந்தேயிராத ஏதோ ஒரு பறவையினம் தான் இன்றைக்கு நாம் பார்க்கும் வௌவாலாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வு என்பதால் இதற்கான சான்றுகள் நம்மிடம் இல்லை. இருக்கும் சான்றுகளை வைத்து புரிந்து கொள்ள வேண்டியது தான்.

அடுத்தது வாத்தலகி எனப்படும் பிளாடிபஸ் (Platypus), பரிணாம வளர்ச்சிக்கு நம் முன் இருக்கும் இன்னொரு சான்று. இந்த விலங்கிற்கு வாத்தைப் போன்ற அலகு இருப்பதால் அதற்கு வாத்தலகி என்று நம் தமிழ் ஆர்வலர்கள் பெயரிட்டு விட்டனர் போல. எப்படி இருந்தாலும் அது அதற்கு பொருத்தமான பெயர் தான். இது நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய விலங்கு. ஆனால் இது பெரும்பாலும் நீரில் தான் இருக்கும். கரையில் வளை தோண்டி அதனுள் கூடு கட்டி வாழும் ஒரு விசித்திரப் பிறவி. வளையிலிருந்து நீருக்கு செல்லும் வகையில் வளையின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கும். எனவே வளை விட்டால் நீர், நீரிலிருந்து வளை என்று மட்டுமே இதன் வாழ்க்கை இருக்கும். எப்போதும் கரையிலிருக்கும் வளையைத் தாண்டி இது நிலத்திற்கு செல்வதேயில்லை.

இதன் இந்த வாழ்க்கை முறையே, இந்த விலங்கு ஆரம்பத்தில், நிலத்தில் வாழ்ந்து பின்னர் ஏதோ ஒரு இயற்கைப் பேரிடர் காரணத்தால் நீரிலியே வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டு, பரிணாம வளர்ச்சியடைந்து, நீரில் வாழ்வதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கலாம்.

இதன் உடலில் வாத்தை போன்ற ரோமங்கள் உள்ளன. இந்த ரோமங்கள் அதன் உடலில் நீர் புகாமல் காத்து உதவுகின்றன, வாத்துகளுக்கு அதன் ரோமங்கள் உதவுவது போல். இந்த விலங்கின் மிக முக்கியமான அம்சம் எதுவெனில் இது முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு விலங்குகளில் ஒன்றாகும். அந்த மற்றொரு விலங்கு எக்னிடா (Echnida) எனப்படும், முள்ளம்பன்றி போல் தனது முதுகில் முட்களை உடைய ஒரு வகை எறும்புத்தின்னி ஆகும்.

சரி நாம் வாத்தலகியின் பக்கம் வருவோம். வாத்தலகிகளுக்கு வாத்தைப் போலவே அலகுகள் உள்ளன. வாத்தைப் போலவே கரையோரங்களில் கூடு கட்டி முட்டையிடுகின்றன. வாத்தைப் போலவே பெரும்பாலான நேரத்தை நீரிலியே கழிக்கின்றன. வாத்தைப் போலவே நீந்துவதற்கு வசதியாக அதன் பாதங்களில் சவ்வுகள் உள்ளன. எனவே வாத்துகளே வாத்தலகிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து கூடுதலாக பால் சுரப்பிகளைப் பெற்று பாலூட்டியாக மாறி இருக்கலாம்.

வெறுமனே மரபணு மாற்றம் மட்டுமே பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதில்லை. புறக் காரணிகளான சுற்றுச் சூழலும் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி பரிணாம வளர்ச்சிக்குத் துணை புரியலாம். இதற்கான சான்றுகளை விளக்குகிறேன்.

சாதாரணமான காடுகளில் வசிக்கும் கரடிகள் ஏதோவொரு இயற்கைப் பேரிடர் காரணமாக பனி சூழ் கண்டமான தென் துருவத்தில் வாழ நேர்ந்து போலார் கரடிகளாக பரிணாம வளர்ச்சியடைந்து இருக்கலாம். பனிப் பிரதேசங்களில் வாழும் பனிமான் (Reindeer), முன்னொரு காலத்தில் வாழ்ந்த மம்மூத் (Mammoth) எனப்படும் பனியானை போன்ற விலங்குகள் தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சியின் மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கலாம்.

இந்த விளக்கங்களின் மூலம் உங்களுக்கு பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் இப்போது உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்.

எந்த ஒரு புதிய உயிரினம் தோன்றுவதற்கும் அதனுடைய மூதாதைய (Ancestor) உயிரினத்தில் ஏற்படும் மரபணு மாற்றத்தின் காரணமாக நிகழும் பரிணாம வளர்ச்சியே காரணமாகும். அந்த வகையில் மனிதனின் மூதாதைய உயிரினம் என்று குரங்கை சொல்வதற்குக் காரணம், அதன் உருவ அமைப்பும், மரபணு தொகுப்பும் மனித இனத்துடன் ஒத்துப் போவது தான் காரணம். சிம்பன்சி குரங்குகளின் மரபணு தொகுப்பும் மனிதனின் மரபணு தொகுப்பும் 99% ஒத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடித்து அறிவித்துள்ளனர். சிம்பன்சி குரங்குகள் மற்றும் மனிதர்களின் மரபணு தொகுப்புக்கிடையே காணப்படும் அந்த 1 சதவீத வித்தியாசத்தில் தான் அவை குரங்குகளாகவும், நாம் மனிதர்களாகவும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறோம். உலகில் வேறு எந்த உயிரினத்தோடும் மனிதர்களின் மரபணு தொகுப்பும், உடல் உருவ அமைப்பும், குரங்குகளின் மரபணு தொகுப்பும், உடல் உருவ அமைப்பும் ஒத்துப் போகும் அளவிற்கு இல்லை. எனவே தான் குரங்குகள் நம் மூதாதையர், நாம் குரங்கில் இருந்து தோன்றியுள்ளோம். வேறு எந்த உயிரினத்தில் இருந்தும் தோன்றவில்லை. சந்தேகம் தீர்ந்ததா?

பின்குறிப்பு: யாரும் அண்டம் எப்படித் தோன்றியது? அணுக்கள் எப்படித் தோன்றியது? போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம். அதற்கான பதில் மனித குலத்தில் இல்லை. அதற்கு விடை காண முயற்சித்தால் மொத்த மனித குலத்தின் ஆயுளும் பத்தாது. அது நம் மனிதனின் கற்பனா சக்திக்கும், சிந்தனா சக்திக்கும் அப்பாற்பட்டவை. அதற்கு கடவுள் என்று பெயர் சூட்டிக் கொள்வது உங்கள் விருப்பம்.

இவ்வளவு பொறுமையாகவும், முழுமையாகவும் படித்ததற்கு எனது மனமார்ந்த நன்றி!

அந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ரூபன் துரை ராஜ் மிக்க நன்றி !!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..