Pages

Wednesday, 10 October 2018

குளிர் ஏற்படும்போது நமது உடல் நடுங்குவது ஏன்?

குளிர் ஏற்படும் போது நமது உடல் நடுங்குவது ஏன்?


 இனி மழை நாட்கள்,  பிறகு அதைத் தொடர்ந்து குளிர் நாட்கள் என சீசன் மாறப்போகிறது. 


மழையோ, குளிரோ எதுவாக இருந்தாலும் நம் உடல் ஓரளவு தான் தாங்கிக் கொள்கிறது. அதிகமானால் நம்மையும் மீறி உடல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது.

 அதிலும்,   குழந்தைகள், முதியவர்கள்,  உடல் நலம் குன்றியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  

இரண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். 


இந்த நடுக்கம் எப்படி, எதனால் ஏற்படுகிறது? பார்ப்போம். 


நம் உடலில்,  மூளையின்,  ஒரு அங்கமாக 'ஹைப்போதலாமஸ்' ஆனது, மூளையின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ளது. 

இந்த ஹைப்போதலாமஸ் - இல் உள்ள உஷ்ண  சீரமைப்பு  மையம் தான்,  நம் உடலின் உஷ்ண நிலையைக் கண்காணிக்கிறது. 

நம் உடலில் முக்கிய அங்கம் வகிக்கும் தண்டுவடமும், சருமமும் தான் உடலின் வெப்ப நிலையைப் பற்றி ஹைப்போதலாமஸுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்களுக்கு, வெப்பமானியை அக்குளில் வைத்தால்,  36.5 டிகிரி செல்சியஸ் என்றும், நாவின் கீழ் வைத்தால் 36.7 டிகிரி செல்சியஸ் இருக்கும் இதன் சராசரிதான் நமது உடலின் வெப்பநிலை (Body temperature )


நம் உடலில் வெப்பம் அதிகமாகி விட்டாலோ, குளிர் அதிகமாகி விட்டாலோ, ஹைப்போதலாமஸிற்குத் தகவல் சென்றடைந்த உடன், சம்பந்தப்பட்ட   நரம்பணுக்கள்  துரிதமாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றன. 

இந்த மாற்றத்தினை அறிந்து கொண்ட உஷ்ண சீரமைப்பு மையமானது, தன் சேவையை உடனே தொடங்கி விடுகிறது. உஷ்ணம் அதிகமானால் அதைக் குறைக்கவும், உஷ்ணம் குறைந்தால் அதை அதிகப்படுத்தவும் செய்கிறது. 


சூடு அதிகமாக இருக்கும்பொழுது , ஹைப்போதலாமஸ் ஆனது நம் தசைகளை இறுக்கவும், விரிவடையவும் ஆணை இடுகிறது. அதனால்,  தசை நார்கள் சுருங்கி விரிவடைந்து, அதிகப்படியான வெப்பத்தை, வியர்வையாக வெளியேற்றி விடுகிறது. 


உடலின் வெப்பநிலை  மிகவும்  குறைந்து விட்டால்,  ஹைப்போதலாமஸ் ஆனது  நடுக்கம் கொடுக்கும்படி,  தசைகளுக்கு ஆணையிடுகிறது. 

 உடனே உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கி விடுகிறது. இந்த நடுக்கத்தின் பொழுது, சருமத்தின் துளைகள் சுருங்கவும் ஆணையைப் பெறுவதால்,  குளிர் நேரத்தில் உஷ்ணத்தினை  வெளியே விடாமல் பாதுகாக்கிறது. 


உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்த நடுக்கம் உண்டாகிறதல்லவா? அப்பொழுது ஸ்வெட்டரும்,  போர்வையும் தரும் வெப்பத்தை நம்மால் பெற முடிகிறது. நமக்கு அதிக உஷ்ணத்தினால் வியர்வை உண்டாவதும், அதிக குளிரினால் நடுக்கம் உண்டாவதும், நம் உடலை சீரான வெப்ப நிலையில் வைப்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாறுதல்களால், நம் அவய அங்கங்களான,  மூளை,  தண்டுவடம்,  இதயம், கல்லீரல்,  கணையம்,  சிறுநீரகம் மற்றும் செரிமான உறுப்புகள் யாவையுமே சீரான வெப்ப நிலையில் ஒழுங்காகச் செயல்படுகின்றன. 


உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் பாலூட்டிகள் , பறவைகள், வெப்ப ரத்தப் பிராணிகள் எனவும், அப்படி வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியாத முதலை, ஆமை,  தவளை போன்றவை குளிர் ரத்தப் பிராணிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 


நம் மூளையானது, ஒரு வினாடிக்கு பல மில்லியன் ஆணைகளை நம் அங்கங்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு அருமையான, அற்புதமான ஒரு அங்கத்தை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறார். நம் உடலை எத்தனை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது? யோசித்துப் பாருங்கள்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment