Pages

Wednesday, 31 January 2018

ஜான் கால்ஸ்வொர்த்தி மறைந்த தினம் - சனவரி 31

உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜான் கால்ஸ்வொர்த்தி மறைந்த தினம் - சனவரி 31:


இங்கிலாந்து நாட்டில் பார்க்ஃபீல்ட் டில் கிங்ஸ்டன் ஹில் என்ற இடத்தில் பிறந்தார் (1867). தந்தை ஒரு வழக்கறிஞர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஹாரோ பள்ளியில் பயின்றார். ஆக்ஸ்போர்ட் நியூ காலேஜில் சட்டம் பயின்றார்.

இலக்கியத்தின் மீதான ஆர்வத்தில் சார்லஸ் டிக்கன்ஸ், கஸ்டேவ் ஃபிளாபெர்ட், ஹெர்மன் மெல் வெல்லி, லியோ டால்ஸ்டாய், எமிலி ஜோலா உள்ளிட்ட பலரது படைப்புகளை வாசித்தார். சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி னார்.

28-வது வயதில் பொழுதுபோக்காக எழுதத் தொடங்கினார். 1897-ல் ‘ஃபிரம் தி ஃபோர் வின்ட்ஸ்’ என்ற தலைப்பில் முதல் சிறுகதைத் தொகுப்பை ஜான் சின்ஜான் என்ற புனைபெயரில் வெளியிட்டார். அடுத்த ஆண்டே ‘ஜோஸலின்’ என்ற நாவலை வெளியிட்டார்.

1904-ல் ‘ஐலான்ட் பாரிசீஸ்’ என்ற நாவல் இவரது சொந்தப் பெயரிலேயே வெளிவந்தது. 1906-ல் வெளிவந்த மிகப் பெரிய நாவலான ‘ஃபோர்சைட் சாகா’ இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. இதன் தொடர்களாக ‘ஏ மாடர்ன் காமடி’ மற்றும் ‘என்ட் ஆஃப் தி சாப்டர்’ நாவல்களை எழுதினார்.

இவரது ‘மென் ஆஃப் பிராபர்ட்டி’ நாவல், தான் பிறந்த உயர் நடுத் தர வர்க்கத்தைச் சாடி எழுதப்பட்டது. இவரது நாடகங்கள் அரசியல் விழிப்புணர்வு, வறுமை, நலிவுற்ற பிரிவினர், சட்டம், நீதியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், பெண்களுக்கு வாக்குரிமை, சிறை அமைப் பின் மோசமான நிலவரம் ஆகியவற்றைக் குறித்து இருந்தன.

அதே ஆண்டு வெளியான ‘சில்வர் பாக்ஸ்’ நாவலும் வரவேற்பைப் பெற்றது. இவரது மிகவும் புகழ்பெற்ற ‘ஜஸ்டிஸ்’ நாடகம் சிறை அமைப்பிலும் தனிமைச் சிறைத் தண்டனை முறையிலும் சீர்திருத்தங்கள் ஏற்பட வழிவகுத்தது. முதலாம் உலகப் போரில் காயம்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவினார்.

தன் நாட்டுக்கு ஆதரவாகப் பல பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘ஷெல்ஃப்’ மற்றும் ‘அனதர் ஷெல்ஃப்’ என வெளியிடப்பட்டன. ‘கன்ட்ரி ஹவுஸ்’, ‘பாட்ரிஷியன்’, ‘ஃப்ரீலான்ட்ஸ்’ மற்றும் சிறுகதைத் தொகுப்பான ‘ஃபை டேல்ஸ்’, ‘எஸ்கேப்’, ‘தி ஒயிட் மங்கி’, ‘தி சில்வர் ஸ்பூன்’, ‘தி ஸ்வான் சாங்’, ‘மெய்ட் இன் வெயிட்டிங்’ உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

போர் குறித்து இவரது கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி மாப்’ நாடகமாக அரங்கேறியது. 1920-ல் இவர் எழுதிய ‘தி ஸ்கின் கேம்’ நாடகத்தைத் தழுவி 1931-ல் ஆல்ஃபிரெட் ஹிட் காக் திரைப்படம் தயாரித்தார். இவரது பல படைப்புகள் திரைப்படங் களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டன.

எழுத்தாளர்களுக்கான ‘பென்’ என்ற சர்வதேச அமைப்பை 1921-ல் நிறுவினார். ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ கவுரவம் பெற்றார். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரப் பட்டங்கள் வழங்கின. 1932-ல் நோபல் பரிசு பெற்றார்.

20 நாவல்கள், 27 நாடகங்கள், மூன்று கவிதைத் தொகுப்புகள், 173 சிறுகதைகள், 5 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் 700 கடிதங்கள் எழுதியுள்ளார். இறுதிவரை ஆங்கில இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜான் கால்ஸ்வொர்த்தி 1933-ம் ஆண்டு 66-வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a Comment