Pages

Sunday, 28 February 2021

சூரிய குடும்பத்தில் எல்லா கோள்களும் ஒன்று ஒன்றாக கீழ் விழுந்தால் எங்குபோய் விழும்?


ஏற்கனவே விழுந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது தெரியுமா ?

[பொறுப்புத் துறப்பு : இது அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்போருக்கு மட்டுமானது . அறிஞர்கள் மன்னிக்கவும் :)]

நாம் இதுவரையிலும் அறிந்திருப்பதை விட , நாம் நம்மை (சூரியக் குடும்பத்தை)பற்றி அறியாத அதிர்ச்சிச் செய்திகள் சிலவற்றை இங்கே காணுவோம் ;

அதிர்ச்சி 1 :

நிலையாய் இருக்கும் சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் , ஒரே வட்டத்தளத்தில் கீழ்ப்படத்தில் உள்ளது போலப் பயணிப்பதாகத்தான் நமக்குப் பாடம் கற்றுத் தரப்பட்டிருக்கிறது

ஆனால் உண்மையில் அதுபோல இல்லை . ஒவ்வொரு கோளும் , ஒவ்வொரு தனி அளவு, நீள் வட்டக் கோணப் பாதைகளில் உயர்ந்தோ, தாழ்ந்தோதான் சூரியனைச் சுற்றுகிறது என்பது தான் நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டியதாகும் .கீழ்ப்படம் காண்க


அதிர்ச்சி 2 :

கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு , சூரியனையும் சுற்றிவருவதாகத்தான் நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது

ஆனால்.,, கூடுதலாக .,

எங்கோ விழுந்துகொண்டு (அ) பக்கவாட்டில் (அ) எதை நோக்கியோப் பயணித்துக் கொண்டிருக்கும் சூரியனைத் தொடர்ந்து விடாமல் விரட்டிக்கொண்டு அதன் குடும்பக் கோளகளும் விழுந்துகொண்டோ (அ) பக்கவாட்டிலோ (அ) பயணித்துக் கொண்டோதான் இருக்கின்றன .. என்பது தான் நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டியதாகும் .

அந்த வேகம் இன்னும் கணக்கிடப்படவில்லை .

 

இச்செயலுக்கு இன்னும் இறுதியாகப் பெயரிடப்படவில்லை . இது வோர்ட்டெக்ஸ் (VORTEX) நிகழ்வைப் போலிருப்பதால் , இப்போதைக்கு இதைவோர்ட்டெக்ஸ் நிகழ்வு என்றே அழைக்கிறார்கள் ..


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.துரைஞன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


தெற்கு கொரியா மற்றும் வடக்கு கொரியா இடையே என்ன பிரச்சினை ?


ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சனை என்ற வரலாற்றை இங்கே பார்க்கலாம்

ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு,1945-கொரியா விடுதலை பெற்றது.

அதன் பின்னர் வட பகுதி கொரியாவில் சோவியத் நாடும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது. 1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போரில் 25 லட்சம் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவானது.

ஆனால், போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அதனால் அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சனைகள் இருந்து வருகிறது

கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கா பின்பற்றும் முதலாளித்துவ கொள்கையைத் தென் கொரியா ஏற்றுக்கொண்டது.

1980களுக்கு பிறகு ராணுவ கட்டமைப்பின் கவனம் செலுத்திய வட கொரிய அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தியது. இது அந்த பிராந்திய நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கு இணையாக தென் கொரியாவும் அமெரிக்காவின் உதவியுடன் தனது ராணுவத்தை பலப்படுத்தியதுடன், தொழிற்சாலைகள் மீது அதிக கவனம் செலுத்தியது.

1996-ம் ஆண்டு தற்காலிக கொரியப் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்த வட கொரியா ஆயிரக்கணக்கான படைகளை எல்லைக்கு அனுப்பியது. தங்கள் பகுதிக்கு வட கொரியா அனுப்பிய பல நீர்மூழ்கிக் கப்பல்களைத் தென் கொரியா அழித்தது.

இந்தநிலையில் 2000-ம் ஆண்டு வட கொரிய தலைவர் மற்றும் தென் கொரிய அதிபர் இடையிலான வரலாற்றுப்பூர்வ உச்சி மாநாடு வட கொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொலைத் தொடர்பு அலுவலகம் திறக்கப்பட்டது. கொரியப் போரில் பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான வட கொரிய கைதிகளைத் தென் கொரியா விடுவித்தது.

ஆனால், இந்த அமைதி அதிக காலம் நீடிக்கவில்லை. 2002ல் தென் கொரிய மற்றும் வட கொரிய ராணுவ கப்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 34 பேர் இறந்தனர்.

வட கொரியா யுரேனியம் சார்ந்த அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் கூறி, அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களைத் தென் கொரியாவும் ஜப்பானும் நிறுத்தின.

2003-ம் ஆண்டு கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாமல் வைத்திருக்க 1992 ஆம் ஆண்டு தென் கொரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து வட கொரியா விலகியது.

தனது பாதுகாப்புக்காக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக 2005-ம் ஆண்டு முதல் முறையாக வட கொரியா ஒப்புக்கொண்டது.

வட கொரியா தங்கள் நாட்டு கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியது.

2014ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னை விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரிய செயற்பாட்டாளர்கள், வட கொரியா நோக்கி பறக்க விட்டதால் இரு நாடுகள் இடையே எல்லையில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

2015-ம் ஆண்டு எல்லை அருகே நடந்த தென் கொரியா அமெரிக்க ராணுவ ஒத்திகையின் போது, வட கொரிய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தக்குதலுக்கு பின்னர் எல்லைப்பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான ஒலிபெருக்கி பிரச்சாரத்தைத் தென் கொரியா நிறுத்தியது.

தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த வடகொரியா, தாங்கள் தயாரித்துள்ள ஏவுகணை தென் கொரியாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் தாக்கும் வல்லமை கொண்டது என அறிவித்தது.

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வட கொரியா தனது அணியை அனுப்பி வைத்தது.

கொரிய போரிலிருந்து இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வந்த பகைமை கடந்த 2018-ல் தணிந்தது. சமாதான கிராமமான பன்முன்ஜோமில் 2018 ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் இடையில் உச்சிமாநாடு நடைபெற்றது.

அணு ஆயுத ஒழிப்பு, அமைதியைக் கட்டமைத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீரமைத்தல் ஆகியவற்றை இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாகச் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக இரு கொரிய நாடுகள் இடையே பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தனது தொடர்புகளை வட கொரியா துண்டித்துள்ளது.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ஜீவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!



      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 26 February 2021

ஆணவம் / அகம்பாவம் என்ற சொல்லின் பொருள்.

 ஆணவம் /  அகம்பாவம் என்ற சொல்லின் பொருள்.

ஆணவம் தமிழ்ச்சொல் தான். ஏண், ஏணாப்பு என்ற தமிழ்ச்சொற்களே ஆணவம் என்ற சொல்லின் மூலமாகும். ஆணவம் என்ற சொல் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

ஏண் (=கருவப்பேச்சு) + அமை + அம் = ஏணமம் >>> ஆணவம் = கருவப்பேச்சு அமைந்தது = செருக்கு.

ஏணாப்பு (=செருக்கு) + அம் = ஏணாப்பம் >>> ஆணவம் = செருக்கு.

எகர / ஏகார உயிர்கள் அகர / ஆகாரமாக மாறும் என்று பல காட்டுகளில் கண்டுள்ளோம்.

அகம்பாவம் என்ற சொல்லும் செருக்கினைக் குறிக்கும் இன்னொரு தமிழ்ச்சொல் தான். இச்சொல் தோன்றிய முறையினைக் காணலாம்.

அகை (=அறு, இல்லாகு) + பம்மு (=தாழ், பணி, அடங்கு) + அம் = அகைப்பம்மம் >>> அகம்பாவம் = அடக்கம் இன்மை = செருக்கு.





இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய

 தோழர் திரு. பொன் சரவணன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!



     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


தமிழின் சிறப்பும் , தமிழன்னையின் சிறப்பும்.

 

உலகில் தோன்றிய மொழிகளிலேயே முதன்மை மொழி,

சிறந்த மொழி,

நம் மொழி

அதுவே

தமிழ் மொழி

நான் பொதுவாக தமிழ் மொழியை ஒரு "மர்மமான மொழி" எனக் கூறுவேன்.

ஏனென்றால் இந்த மொழியைப் பற்றி நீங்கள் புறநானூற்றில் ஆராய்ந்தால் அது தொல்காப்பியத்தைக் கைகாட்டும்.

தொல்காப்பியத்தை ஆராய்ந்தால் அது அகத்தியத்தை கைகாட்டும்..

இப்படி இந்த மொழியைப் பற்றி ஆராய ஆராய இதன் தரவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

தோன்றிய இடம் தெரியவில்லை.

பயணிக்கும் காலமோ கணக்கில் இல்லை.

நீங்கள் ஒன்றைப் படித்தால் அந்த நூலில் அந்தப் புலவர் கூறியதைப்போல.. எனக் கூறிக்கொண்டே பட்டியல் நீளும்.

உலகிலேயே ஒரு மொழியை அன்னையாக வடிவமைப்பது என்பது எங்கும் நடைபெறாத ஒன்று.

ஆனால் அதற்கும் மேலாக அந்த அன்னைக்கே ஒரு கோவில் அமைக்கப்பட்டிருப்பது தமிழ் மொழிக்கே உள்ள தனித்துவம்

தமிழ் மொழியின் ஆரம்ப கால எழுத்துக்கள், அதாவது ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து இளைஞனாவதைப் போல தமிழின் இன்றைய இளமைக்குக் காரணமான அன்றைய ஆரம்ப கால எழுத்துக்கள் இன்றும் உலகளவில் தொடர்ந்து கிடைக்கப் பெறுகின்றன.

தமிழ் என்ற வார்த்தைக்கே அழகு, இனிமை, இயற்கை என பல பொருள்கள் உள.

"தமிழ்" என்ற வார்த்தையில் வரும் 'ழ' கரத்தைப் போல எந்த ஒரு மொழியிலும் நாவை மடக்கி இனிமையாக ஒலிக்கும் எழுத்துக்கள் ஏதுமில்லை.

நீங்கள் பிற மொழிகளில் ஒரு பொருளைக் குறிக்க எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்?

1,2,3,… இப்படி விரல் விட்டு எண்ணிடலாம்.

ஆனால் தமிழ் மொழியிலோ "யானை" என்ற ஒரு பொருளை மட்டும் 44 சொற்கள் வழங்குகின்றன.

இத்தகைய மொழியை தமிழ்விடு தூது,

இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்

என்று புகழ்கிறது.

ஒரே எழுத்தைக் கொண்டு பொருள் தருவது மிகக் கடினம்.

ஆங்கிலம் போன்ற பிற‌மொழிகளில் A என்ற ஒரு எழுத்துக்கு மட்டுமே ஒரு சில பொருள்கள் உள்ளன.

ஆனால் தமிழிலோ 42 எழுத்துக்கள் தனித்து நின்றே பொருள் தருவன.

தமிழ் எழுத்துக்களிலேயே மிகப்பழமையான எழுத்து முறைகளுள் ஒன்று வட்டெழுத்து.

இது இன்றும் பல கோவில்களின் சுவர்களிலும் பாறைகளிலும் காணப்படும்

இதில் சுவாரசியம் என்னவென்றால் மொழியின் ஆரம்ப காலத்திலேயே தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து வழங்கப்பட்டுள்ளது.

இதை அரச்சலூர் கல்வெட்டில் காணலாம்.

இப்படி இதன் சிறப்புகள் எண்ணிலடங்காதவையாக உள்ளது நமக்குப் பெருமை.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.அருண் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Tuesday, 23 February 2021

மொழி உருவான வரலாறும் , மனித இனம் பேசும் ஆற்றலை பெற்ற வரலாறும்.

மொழி உருவான வரலாறும் , மனித இனம் பேசும் ஆற்றலை பெற்ற வரலாறும்.

மனிதனின் பேச்சுத்திறமை பிறந்தவுடனே கிடைத்துவிடுகிறதே! அழுகையும் ஒரு வகை பேச்சுதானே!!

வளர்ந்தவுடன் அதை கட்டமைத்து முறைப்படுத்தி மொழியெனக் கொள்கிறோம் அவ்வளவே. எல்லாமே பேச்சுதான்!

உணர்ச்சிகளின் வெளிப்பாடே பேச்சாகும். அந்த வகையில் அனைத்து உணர்வு வெளிபாடுமே பேச்சுக்கள் என்றே கருதவும்.

முறைப்படுத்தக் கற்றது எப்போது என்று நீங்கள் கேட்ட கேள்வியை மாற்றிக்கொண்டு ஆதிமனிதனின் வாழ்விற்குள் செல்வோம்!

முதலில் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் பேச வேண்டிய தேவை என்ன?

கருத்து அல்லது உணர்வுப் பரிமாற்றம் என்ற ஒரே காரணிதான் பேசுவதற்கான அடிப்படைத் தேவை அல்லவா?

ஆம்! ஆதிமனிதன் இனக்குழுக்களாக வாழ்ந்தது உண்மையெனில் அவர்களுக்குள் தொடர்பு அவசியமாகிறது. அந்தத் தொடர்பைத் தருவது சைகை மற்றும் பேச்சு என்ற செயல்கள் மட்டுமே. இது தவிர கண்கள் மற்றும் முகபாவனைகள் முலமும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறலாம் (இன்றும் கூடத் தொடர்கிறது). ஆனால், எந்தக் காலத்திலும் வெகு சில குறிப்பிட்ட காரணங்களைத் தவிர உயிர்வாழ்தல்வாழ்க்கைத் தகவமைப்புஉயிர் பிழைத்தல் போன்ற அடிப்படைத் தேவைகளை கண்களின் மூலம் (பார்வையால்) பேசிக்கொள்ளுதல் நடைமுறையில் சாத்தியமல்ல.

ஆகவே கருத்துப் பரிமாற்றத்திற்கு மனிதனுக்கு கருவிகள் வேண்டும் அல்லவா? (கீழே கூறப்பட்டுள்ளது போன்று தான் மொழியின் தேவையும் வளர்ச்சியும் இந்த உலகில் நடைபெற்று இருக்க வேண்டும் என்பது என் அனுமானமேயன்றி; இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம்!)

இங்கே மொழியை ஓசையெனக் கொள்வோம். மொழியின் படிமளர்ச்சியானது இவ்வாறே நிகழ்ந்திருக்க வேண்டும்.

  1. சைகை
  2. ஓசை
  3. குறியீடு
  4. எழுத்து
  5. மொழி - இலக்கணத்துடன் கூடியது (இன்றைய பயன்பாடு)
  1. சைகை மொழி:
    1. முதலில் சைகைகள் தான் சாத்தியம். ஒரு பிறக்கும் போதே மனிதன் அழுதான் என்றாலும் அது அவன் நினைவற்று குழந்தையாய் இருக்கையில் நடந்ததால் அவனால் அதனைக் கற்க முடியாது. ஆகவே வளர வளர அவன் அவனுடைய நாவைப் பயன்படுத்தத் தேவைகள் மிகக்குறைவே! ஏனெனில் நாக்கை ஆட்டியோ நீட்டியோ வளைத்தோ ஒரு செய்தியைச் சொல்வதை விட வெளிப்புறத்தில் பிறருக்கு எளிதில் தெரியும் கை, கால்கள் மூலம் செய்தியைச் சொல்லக் கற்பது தான் மிகவும் இலகு. ஆகவே ஆதி மனிதன் ஒரு கருத்தை மற்றவருக்குச் சொல்ல, சைகைகளைத் தான் முதலில் பழகி இருக்க வேண்டும் என்பது என் முடிவு. மேலும் இரண்டாம் வளர்ச்சியாகிய ஓசையினால் சிறிது தூரம் மட்டுமே தகவல் தொடர்பானது சாத்தியம். (ஒளியின் வேகம் ஒலியைவிட பன்மடங்கு அதிகம்). ஓசை கேட்காவிட்டாலும் சைகைகளை வெகுதூரத்திலும் இருந்து புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
  2. ஓசை:
    1. அடுத்த படிமளர்ச்சியாக ஓசைதான் இருந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும். மனிதன் சிறிது சிறிதாக ஓசைகளை எழுப்பக் கற்றிருப்பான். ஏனெனில் உடல் உறுப்புகளின் வேலையைக் கணக்கில் கொண்டோமானால், சைகை முறையை விட ஓசை எழுப்புதல் மிக எளிது. (எத்துனை உறுப்புகள் தசைகள் அசைந்து ஒரு வார்த்தையை விளக்க வேண்டியிருக்கும். அதனால் இது எளிது என்று அறிவு வளர்ந்ததால் தெளிதிருப்பான் மனிதன்) அதுவும் உடனடியாக கருத்துப் பரிமாற்றம் நிகழுமே. ஏனெனில் ஒரு யானை வருகிறது என்பதை யானை போன்று சத்தமிட்டுக்காட்டுதலை விட, யானை போன்ற உருவத்தை வைத்துக்கொண்டு அதன்படி நடந்து காட்டுகையில் வந்த யானை அவனையும் இவனையும் அடித்துத் தூக்கி எறிந்திருக்கும் அல்லவா? அதே போல் தான் சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளுக்கும். இந்த ஓசை வகை கருத்துப்பரிமாற்றம் குறைந்த தூரத்திற்கே பயன்பட்டாலும் சிறப்பான பயனளித்து இருக்கும். ஆனாலும் இந்த நிலையிலும் சைகை முறையும் தேவையாகும். இரண்டும் சேர்ந்தே மனிதனின் கருத்துப் பரிமாற்றத்தை அந்த அடுத்த கட்டத்திற்கு வளர்வதற்கான படிப்படையாகும்.

3. குறியீடு: (இது மிகவும் முக்கியம்; மொழியின் அளப்பரிய மாற்றமே இது தான்)

மேலே குறிப்பிட்ட இரு படங்களில் நீங்கள் காண்பது தமிழ் மொழியின் வளர்ச்சியாகும். (காலக்கணக்கு பொய்யாக இருக்க 99% வாய்ப்புகள் உள்ளது) ஆனால் இந்தப்படத்தில் முதலில் பழைய காலத்தில் பாருங்கள் எழுத்துக்கள் குறியீடாகவே இருக்கின்றன. படிப்படியாக அவை வளர்ச்சியடைந்து எழுத்துக்களாக கட்டமைப்பைப் பெறுகின்றன.

    1. அடுத்தது, குறியீடுகள். உதாரணமாக, ஒரு மனிதக் குழு அன்றைய உணவை வேட்டையாடவோ அல்லது தேடவோ செல்கையில், ஒருவர் சென்று தேடிமுடித்த பக்கம் அடுத்தவரும் தேடவேண்டாம் அல்லவா? நேர விரையம், மனித ஆற்றல் விரையம் இவற்றை கட்டமைப்பதில் இவர்கள் நம்மைவிட வல்லவர்கள்; பன்மடங்கு வல்லவர்கள். ஏனெனில் அவர்களுக்கு ஒரு நாள் வாழ்வானது சூரியன் மறையும் வரைதான். அதற்குள்ளே எல்லாமே முடித்துவிட வேண்டும். திசைகள் கூட சூரியனை வைத்துத்தான். ஒரு வேலை சூரியன் மறைந்து விட்டால், வீடு தேடி அலைய மாட்டார்கள். ஒரு பாதுகாப்பான இடம் தேடி அங்கிருந்து காலைவிடிந்த பிறகே வீடு வருவர். அப்படியிருக்கும் பட்சத்தில், அவர்கள் கால விரையம் ஆவதையே முதலில் தவிர்ப்பர். ஆகையால் தாங்கள் சென்று வந்த இடங்களில் சில அடையாளங்களை ஏற்படுத்துவர். அவை எப்படி மற்றவருக்குப் புரியும் வண்ணம் இவ்வாறு அடையாளம் இருந்தால் அது இவன் சென்று வந்தது, அவ்வாறு இருந்தால் அது அவன் சென்று வந்தது என்று வேட்டைக்குக் கிளம்பும் முன்னரே அவர்கள் ஒன்று கூடி ஒரு முறையை வகுத்திருப்பர் அல்லவா?
      1. ஆயினும் இப்படி முன்னமே திட்டமிடும் வழக்கம் எப்படி வந்தது? முதன் முதலில் இவ்வகையில் அடையாளமிடும் வழக்கம் தேவைப்பட்டதும், அவர்கள் செல்லும் வழிகளில் இருக்கும் செடி கொடிகளில் கிள்ளுவது, வெட்டுவது, உடைத்து வைப்பது என்று அடையாளமிட்டு இருப்பர். அதிலும் குழப்பங்கள் நேரும் அல்லவா? அதனால் பிறகாலத்தில் அவர்கள் தங்களது ஆயுதங்களால் குறியிடும் வழக்கம் வளர்ந்திருக்கும். அந்தக் குறியீடுகளை உறுதி செய்ய அவரவர்க்கென்று தனித்தனி குறியிடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேட்டைக்கு முன்னமே அதனை ஒன்றாகக் கூடி முடிவு எடுத்து இருப்பர். (நான் குறிப்பிட்டதிலேயே இந்த கூற்று தமிழர்களாகிய நமக்கு மிக மிக முக்கியக் குறிப்பாகும். ஏனெனில் மொழிகளைப் பற்றிய எனது ஆய்வில் தமிழ் தான் முதன்மை மற்றும் பழமை மொழி என்று நிறுவ இதுவும் ஒரு கருதுகோள்! இறுதி பத்தியில் இதனை விளக்குகிறேன்.)

(இதுவும் நம் தமிழ் தான் ஏதோ ஒன்றல்ல)

    1. அவர்கள் ஏன் கூடி விவாதிக்க வேண்டும்? என்றால் ஒருவருடையதைப் போன்றே மற்றொருவருடையதும் இருக்க வேண்டாம் அல்லவா? அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதிலும் பெருங்குழப்பமெல்லாம் வருவதில்லை என்றாலும் சிலர் சிறந்த வேட்டையாடுதலினால் பெருமை கிடைக்கும். அப்போது மற்றவருடைய அடையாளங்களுடன் ஒத்துப்போகையில் யார் அந்த வீரச் செயலைச் செய்தது என்று குழப்பம் நேரும். அதனால் ஒவ்வொருவருக்கும் தனித்த அடையாளம் வேண்டும் என்ற கோட்பாடும் தேவையும் ஏற்பட்டிருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
    2. அடுத்து மரங்களில் இடப்பட்ட அடையாளங்கள் அழிவுக்கு ஆட்பட்டிருக்கலாம், அதனால் கற்களை அடுக்குதல், அவற்றில் அடையாளம் பொறித்தல் அல்லது அவர்களுடைய அடையாள கற்களையே அடுக்குதல் என்று வளர்ந்திருப்பர். இவ்வாறாக குறியீடு வரைந்து அதனை அடுத்தவருக்குப் தகவல் தெரிவிப்பது மிக மிக இன்றியமையாத வளர்ச்சியாகும்.
    3. மேலும் வேட்டையாடுதல் மட்டுமல்ல, எல்லாவகை தொழிநுட்பமும் இங்கிருந்தே வளர்ந்தது எனலாம். திசைகளைக் காட்ட, விவசாயம் செய்ய, ஆறுகளைக் குறியிட, இயற்கை அழிவுகள் மற்றும் விளங்குகள் நடமாடும் பகுதிகள், எவ்வகை விளங்குகள் நடமாடும் இடம் என்று கூடக் குறியிடக் கற்று வளர்ந்திருப்பர். இவ்வகையில் நாம் (மனித இனம்) இன்றும் இருப்பதைக் காணலாம். குறியீடுகள் இன்றி மனித வாழ்வே இல்லை எனலாம். அந்தளவிற்கு நம்மோடும் வாழ்வோடும் கலந்தவை இந்தக் குறியீட்டுப் பழக்கம்.
    4. மேலும் மேற்சொன்ன இரு வகை (சைகை மற்றும் ஓசை) கருத்துப் பறிமாற்றத்திலும் யாருக்குச் சொல்ல வேண்டுமோ அந்த நபர் எதிரிலேயே இருக்க வேண்டிய கட்டாயமுள்ளது. தேவைப்பட்டவர் எதிரில் இல்லையெனில் தகவல் பரிமாற்றமே சாத்தியமில்லை. ஆனால் இந்த வகையில் வரைந்து வைத்துவிட்டால் காலத்திற்கும் இருந்து கருத்தை அடுத்தவருக்கும் வழங்கும். அடுத்தவர் எதிரிலேயெ இருக்கவேண்டிய அவசியம் இல்லவே இல்லை. அதனால் மனிதகுலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பே இந்த 'குறியீடுகள்' தான். நெருப்பிற்கு அடுத்து இதைத்தான் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு என்று கருதுகிறேன்.
    5. இந்தக் குறியீடுகள் தான் பிற்காலத்தில் எழுத்துக்களாகப் பரிணமித்தன என்பதில் எனக்கேதும் ஐயமில்லை. உலகெங்கும் நடைபெற்ற அகழ்வாய்வு முடிவுகளில் முதலில் குறியீடுகள் பயபடுத்தப்பட்டு பிறகு அவையே எழுத்துக்களாக பயன்படுத்தப்பட்டதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. எளிதான ஆதாரம் சீன மொழியே ஓவிய எழுத்துக்கள் தான். அதாவது சித்திர எழுத்துக்கள்!!

4. எழுத்துக்கள்: அடுத்து குறியீடுகளுக்கு ஓசைகள் தேவைப்பட்டோ அல்லது இயற்கையாக சத்தமிட்டுக்கொண்டோ குறியீட்டை வரைந்திருக்கலாம். உதாரணமாக, சிங்கத்தின் குறியீட்டைக் குறிக்கையில், அதனைப்போன்ற சத்தமெழுப்பியபடியே வரைந்திருக்கலாம். (இன்றும் நாம் துவக்க வகுப்புகளில், படிக்கையில் அதனைச் சத்தமாகப் படிப்பதும்உயிரெழுத்துக்களை குழந்தைகள் எழுதுகையில் சொல்லிக்கொண்டே எழுத சொல்வதும் இவ்வகை பண்புக் கடத்தலே!) அவ்வாறே ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஒரு சத்தமிடும் வழக்கம் தோன்றியிருக்கலாம். அதனால் அவை எழுத்துக்களாக பரிணமித்த போதும் இந்தச் சத்தமிடுதல் அவர்களுக்கு தொடர்ந்த பழக்கமாக தொற்றிக்கொண்டு இருக்க வேண்டும். இப்படித் தான் எழுத்துக்களை ஓசைகளுடன் நாம் உண்டாக்கினோம். இந்த நிலையே நல்ல பரிணாமம் பெற்ற மற்றும் புதிய கற்காலத்தில் வாழும் மனிதர்களாக நாம் இருந்திருப்போம். குறைந்தது இந்த நிலையை மனித இனம் அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும்.

உங்கள் கேள்விக்கு இதுவே பதில்: பேச்சுத்திறனைப் பெற்றது எந்தக் காலத்தில் என்று யாராலும் ஊகிக்க முடியவே முடியாது. ஏனெனில் இது பரிணாம வளர்ச்சி!

    1. சில உடற்க்கூறுகளை வைத்து சில விஞ்ஞானிகள் குத்துமதிப்பாக ஒரு காலக்கணக்கை வெளியிடுவர். அதாவது மனித உடலியலை ஆராய்ந்து தொண்டையில் ஓசையை ஏற்படுத்தும் குறுத்தெலும்பின் வளர்ச்சி எங்கிருந்து நமக்குக்கிடைக்கின்றது என்ற ஆய்வுதான் அது. அதன் தொடக்கமே மனிதன் பேசக்கற்றது என்று அளவெடுத்து விடுவர். (அவர்களுக்கு ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டும் அல்லவா?) ஆனால் அது நம்முடைய குரங்கிற்கு முன்னமே பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய குரங்காகவே இல்லாத ஒரு உயிரினத்தின் குரல்வலையிலிருந்து பரிணாம மாற்றம் பெற்றிருக்கும். மேலும் இவ்வகையில் எல்லா விலங்குகளுமே சத்தமிடுகின்றன. (மரங்களும் கூட) அதனால் அதனை (நான் என் கொள்கையின் படி) கருதுகோளாகக் கொள்ள முடியவில்லை.

மேலே நீங்கள் காண்பது, 'கியூனிபார்ம்' என்ற உலகில் முதல் பழமையான நாகரீகம் என அறியப்பட்ட சுமேரியர்களின் குறியீட்டு முறையாகும். இவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பலகை போன்ற அமைப்புகளில் குச்சிகள் மற்றும் ஆயுதங்களால் குறியீடுகளை இட்டு (அழுந்துவதால் விழும் பள்ளங்கள்) அந்தக் களிமண்களை சுட்டுக் கடினமாக்கி எழுத்துருக்களை உருவாக்கினர். (இவர்கள் தமிழர்கள் என்றால் நம்புவீர்களா? ஆம்! நம் தமிழர்கள் தான். என்னால் தர்க்க முறையில் நிரூபிக்க முடியும்.)

5. இலக்கணம்: இவ்வகையில் தோன்றிய எழுத்துக்களை முறைப்படுத்தும் தேவை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆம்!! தேவைதான். ஒவ்வொருவரும் தங்களின் கைபோன போக்கில் வரைந்துவிட்டுச் சென்றால் மூன்று தலைமுறைக்கு அடுத்து வரும் தலைமுறையும் அப்படியே எழுதும் என்று சொல்ல முடியுமா? கட்டளையிடவும் தான் முடியுமா? அதனால் ஒரு மொழியாக வகுத்து அதற்கான வடிவங்களுக்கு முறைமைகள் கொடுத்து, அதற்கடுத்து வரையறை வகுத்து, அவை இலக்கணங்களாக உருவெடுக்க இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருக்கும். இது இரண்டு வரிகளில் கூறுவதால் நமக்குப் பெரிதாக இந்த வார்த்தைகளின் ஆழம் விளங்குவதில்லை. ஆனால் ஒரு ஆதிமனிதனுக்கு அல்லது முதாதையர்களுக்கு எவ்வளவு வேலை மற்றும் கடினம் என்பது சொல்லிமாளாது. (விளக்கம் முக்கியக் குறிப்பில் காணவும்) ஆனால் தனக்கு அடுத்த தலைமுறைக்கானது என மெனக்கெட்டு இதனைச் செவ்வனே செய்துள்ளனர். உண்மையில் கடவுள் என்றால் அது அவர்கள் தான்!!! அதனால் இந்த வகை உதவியும் சேர்த்து நல்ல வாழ்வியலைத் தந்தமைக்காக முன்னோரையே கடவுளாக வழிபடும் வழக்கம் உலகிலேயே தமிழ் இனத்திற்கு மட்டும் உண்டு!! (ஏன் தமிழினம்? இறுதி பத்தியில் காண்க!!!)

முக்கியக் குறிப்புகள்:

மேற்குறிப்பிட்ட இறுதிபத்தி இதுதான்.

வேட்டையாடும் முன்னமோ அல்லது ஒரு செயலைக் கூட்டாகச் சேர்ந்து செய்கையில் அவரவர்க்குத் தனித்தனிக் குறியீடுகள் தேவைப்பட்டது அங்கீகாரம் என்ற காரணத்தினாலோ அல்லது அந்தச் செய்லை யார் செய்தனர் என்பது அனைவரும் அறிந்துகொள்ள மட்டுமே. ஆனால் அந்த செயல்களை அவர்கள் எப்படி செய்தனர். அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன? இதே சூழல் பிற்காலத்தில் நேர்கையில் எவரேனும் குறியீடுகளைக் கொண்டு அச்செயலை செவ்வனே செய்துமுடிக்க எல்லாச் செயல்களுக்குமே குறியிடும் பழக்கம் வளர்ந்திருக்க வேண்டும். இதுவே கல்வெட்டுப் பழக்கமாக வளர்ந்துள்ளது. குறியீடுகள் தனித்தனி அடையாளங்களாக இருந்தது போய், அனைவருக்குமான செய்தியாக பரிணாம மாற்றம் பெற்றது இவ்வாறு தான். ஆனால் இந்தக் குறியீடு இவனது தான், இவனால் தான் இவ்வாறு எழுத வேண்டும் விதிப்பது யார்? அது தான் நான் குறிப்பிட்டது போல ஒரு செயலைச் செய்யப்போகும் முன் அதற்கான திட்டமிடுதலுக்கே தனிக்கூட்டம் ஒன்றை அவர்கள் நடத்தியிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்திலேயே இன்னார்க்கு இந்தக் குறியீடு என்று முடிபு செய்து அனைவரும் அதனை ஏற்றிருக்க வேண்டும். நாளடைவில் குறியீடுகளை தீர்மானிக்க ஒன்று கூடும் வழக்கம் வந்து, அவர்கள் ஒரு குழுவாகவே மாறியிருக்க வேண்டும்.

ஆம்! ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல மனித ஆற்றல் விரையம், கால விரையம் இவைகளில் அவர்கள் கில்லாடிகள். வேட்டையாடி உணவைச் சேகரிப்போர் எல்லொரும் உட்கார்ந்து குறியீடுகளுக்கென பேசி ஒவ்வொருமுறையும் காலத்தை வீணடித்திருக்க மாட்டார்கள் (இவ்வகையில் நேரம் வீணாவதை வழிவழியாக உணர்ந்துதான்). ஆதலின் அவர்களில் சிலர் வேட்டையாடுதலில் முன்னணியில் அல்லது சிறந்து செயல்படுவோர் தவிர, மற்றவர் முன்னரே முடிவு செய்தோ அல்லது இதற்கென தனியாகக் கூடியோ குறியீடுகளை முறைப்படுத்தியிருப்பர்.

இந்த முறையில் தான், ஒரு மனிதனுக்கு, ஒரு ஊருக்கு என தனித்தனிக் குறியீடும், அதுவே எழுத்தாக மாறும் போது தனித்தனிப் பெயராகவும் மாற்றமடைந்தது (பரிணாம வளர்ச்சிய்டைந்தது). அதே போல் தனித்தனி நாடாகவும், அந்த தலைவனுக்கான குறியீடு அவனது கொடிகளிலும் வரைந்துகொள்ளும் வழக்கமும் ஏற்பட்டு, இதுவே நாளடைவில் அந்த அரசின் முத்திரையாகவும் வளர்ச்சியடைந்தது. மனிதனின் அனைத்து வளர்ச்சி நிலைகளுமே இந்தக் குறியீட்டின், அதாவது எழுத்து மற்றும் மொழியின் வளர்ச்சியிலேயே அறிந்துகொள்ளலாம். (இதனாலேயே தாய்மொழி நமது மரபணுவுடன் தொடர்புகொண்டது எனலாம். அதனால் மனித இனத்திற்கு தாய்மொழி மீது அதிகப் பற்று. மொழியறிவு ஏன் அவசியம் என்பதை உணருங்கள்; வாழ்வியலை உணரலாம்!)

இந்தக் குழு அமைக்கும் முறை அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் தொடர்ந்து வந்திருக்கும். குறியீடுகள் எழுத்துகளாக பரிணமித்தற்கே இந்தக் குழு தான் அடிப்படையாக இருக்க முடியும். இங்கே உற்று நோக்கினால், ஒருவன் விதித்த குறியீடு அடுத்தவன் ஏன் ஏற்க வேண்டும்? அதை அவன் எப்படித் தெரிந்துகொள்வான்? அதனால் தான் இந்தக் குழுவில் தொடர்ந்து சிலர் நேரம் செலவிட்டு, ஆய்வுகள் செய்து, குறியீடுகளை முறைப்படுத்தினர். எழுத்துக்களாகப் பரிணமித்த போதும் அவற்றை இக்குழுவே முறைப்படுத்தியிருக்க வேண்டும். இப்படித் தொடர்ந்த உழைப்பால் இதனை அவர்கள் நன்கு கற்றறிந்து இதில் புலமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் சொன்னதையே மற்றவரும் ஏற்றிருக்க வேண்டும். இவர்களே புலவர்கள் என்றழைக்கப்பட்டனர்.

ஆக இந்தக் குழுதான் புதிதாக உருவாக்கம் பெறும் குறியீடுகள் மற்றும் எழுத்துக்களை அங்கீகரிக்கும் நிலை வந்திருக்கும். அந்தக் குழுதான் இலக்கணத்தையும் உருவாக்கி எழுத்தை மொழியாக்கி வளர்த்திருக்க வேண்டும். இதுதான் தமிழர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததற்கான காரணம். ஏனெனில் ஆதிமனிதனாக வாழ்ந்த போதே இவர்கள் இதனை தொடர்ந்து வந்திருக்கின்றனர்; அதனால் தான். தமிழ்ச் சங்களில் அடுத்தவரின் படைப்புக்கள் சரிபார்க்கப்படுவதற்காக அரங்கேற்றம் செய்யப்பட்டன. ஏனெனில் இந்தக் குழு அங்கீகரித்ததை மட்டுமே அனைவரும் ஏற்கும் வழக்கம் தான் நம் மரபணுவிலேயே இருக்கின்றதே!!!

உலகிலேயே ஒரேயொரு மக்கள் கூட்டம் தன் மொழிக்கென தனிச் சங்கம் வைத்தது தமிழ் தான் என்றால் தமிழின் தொன்மையைக் கணக்கிடுங்கள் பார்ப்போம்! இது போல் மற்ற மொழிகளில் இல்லை! ஏனெனில் தமிழிலிருந்து கடன் வாங்கிக் கட்டமைக்கப்பட்டதால் அவற்றிற்கு குழுவின் தேவையில்லை. தேவையேயில்லை!!!



இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.சீனிவாசன் பன்னீர்செல்வம் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..