சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்த பொழுது மதுரையில் எரிகல் விழுந்தது என தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா? உண்மையெனில் மேலதிக தகவல்கள் எங்கு கிடைக்கும்?
இது ஒரு அறி வினா. அதாவது ஒரு பொருளைப் பற்றி தான் அறிந்திருந்து அது பிறருக்குத் தெரியுமா என அறிவதற்காகக் கேட்கப்படும் கேள்வி. இவ்வாறான கேள்விகளிற்குப் பதில் சொல்லும் போது கூடிய கவனம் தேவை. முடிந்தளவிற்கு முயற்சிக்கின்றேன். முதலில் விண்கல் விழுந்து ஒரிடம் எரியுமா? எனப் பார்ப்போம். விண்கல்லானது எரிந்து விழும்போது, அது எரி கல் (Meteorite) எனவும் அழைக்கப்படும். இத்தகைய கற்கள் பெருமளவிற்கு விழும்போது பூமியினை அடைவதற்கிடையில் முற்றாக எரிந்துவிடும். சில விண்கற்கள் பூமியில் விழுந்து சேதங்களை ஏற்படுத்தியதுமுண்டு. அவ்வாறான சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.
- 1954-ம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஆன் ஹோட்ஜல் என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு விழுந்த எரிகல்லால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டது. எரிகல் பூமியில் விழுந்தற்கான முதல் சான்றாக இந்த நிகழ்வு கருதப்பட்டது.
- 2008-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பல எரிகற்கள் விழுந்து வெடித்தன.
- 2013-ம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் எரிகல் ஒன்று வெடித்து சிதறியது. இதன் தாக்கத்தால் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எனவே எரிகற்கள் விழுந்து சிறிய சேதங்கள் ஏற்படுவதற்கான சான்றுகள் உண்டு { தொன்மா/ டைனோசர்களை அழித்த பெரும் விண்கல், 1490 சீனாவில் ஷான்சி மகாணத்தில் பொழிந்த எரிகல்லினால் ஏற்பட்ட பெரு அழிவுகள் பற்றிய செய்திகளுமுண்டு}.
இப்போது சிலப்பதிகாரத்திற்கு வருவோம். பொதுப் புத்தியிலுள்ள செய்தி என்னவெனில் கண்ணகி மதுரையினை முற்றாக எரித்தாள் என்பதே. முதலில் மதுரை முற்றாக எரிக்கப்படவில்லை.
மதுரை முற்றாக எரிந்ததா?
மொத்த மதுரையும் எரிந்து போயிருந்தால், எப்படி மறு நாளே, நெடுஞ்செழியன் மன்னனின் தம்பியான வெற்றிவேற் செழியன் முடி சூடியிருப்பான்? மொத்த மதுரையும் எரிந்திருந்தால் அடுத்த நாளே முடிசூட்டு விழா நடைபெற்றிருக்காது. எனவே மதுரை முற்றாக எரியவில்லை. அடுத்ததாக, ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எரியுமா? அவரின் உள்ளம் வேண்டுமானால் எரியலாம்.
அவ்வாறாயின் என்னதான் நடந்தது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு உத்தியினைக் கையாளுவார். அதாவது கதையில் பின்னே வரும் நிகழ்வுகளை முன்னரேயே நிமித்தங்களாகக் காட்டிவிடும் ஒரு நாடக உத்திமுறையே அதுவாகும். அந்த வகையில் விண்கல் விழப்போகும் நிகழ்வும் காட்டப்படுகின்றது. கோவலன் கொலையுறுவதற்கு முந்திய நாள் இரவில் பாண்டியன் தேவியானவள் கொடுமையான கனவொன்றைக் கண்டாள். அக் கனவில் `பகலில் விண்மீன்கள் எரிந்து விழுந்தன. எட்டுத்திக்கும்அதிர்ந்தன`. இங்ஙனம் அவள் கண்ட கனவினைத் தனது தோழியிடம் கூறினாள்.
`கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம் ` : (வழக்குரை காதை : 1-8)
கருப்பம் = அறிகுறி
எனவே விண்கல் விழப்போவதனை இளங்கோ அடிகள் முற்கூட்டியே காட்டிவிட்டார். இப்போது விண்கல் விழுந்ததற்கான பாடலைப் பார்ப்போம்.
`மாலை எரி அங்கி வானவன் தான்தோன்றி,
மாபெரும் பத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள்
பாய்எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர்
ஏவல் உடையேனால், யார் பிழைப்பார்?`
:வஞ்சின மாலை :50
வானத்து எரிகல் விழுந்து, மதுரையின் மிகச் சிறிய பகுதியே எரிந்தது. அவ்வாறு இடம்பெற்ற நிகழ்வு மீது கண்ணகியின் அறச் சீற்றத்தினை ஏற்றிவிடும் இன்னொரு நாடக உத்தியினையும் இங்கு காணலாம். அந்த நாடக உத்தியே எரிகல் வானவனிற்கு உருவம் கொடுத்ததும், மதுராபதி தெய்வத்துடன் கண்ணகியின் பேச்சு என்பனவற்றையும் கொள்ளலாம்.
இறுதியாக, கீழுள்ள பாடல் வரிகளையும் பார்த்துவிடுவோம்.
`இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து`,
`இடது முலையினை கையால் திருகி எறிதல்` என்பதும் ஒரு நாடக உத்தியேயாகும். அதாவது பொதுவாக பெண்களின் இயலாமையினை வெளிப்படுத்தும் ஒரு முறையாக பெண்ணானவள் தனது முலையினை பிடுங்கி எறியும்/ இழக்கும்ஒரு முறை உலகளாவியரீதியில் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆண்களிடம் பெண்கள் தமது தலைமைத்துவத்தினை இழந்ததனை கிரேக்க இலக்கியங்களில் ஒற்றை முலைப் பெண் தெய்வமாகக் காட்டப்பட்டுள்ளதனைக் கூறலாம் {Goddess of the Amazons} .
அதே போன்று மதுரை மீனாட்சியின் மூன்று முலைகளில் ஒன்று சிவனைக் கண்டதும் மறைந்து போன புராணக்கதையும் கூட; பெண் தெய்வ வழிபாடு ஆணாதிக்கத்திடம் பறிபோன ஒரு குறியீடே. இவ்வாறான ஒரு நிகழ்வாகவே கண்ணகி முலையினைத் திருகி எறிந்ததனையும் கொள்ள வேண்டும்.
முடிவாக, மதுரையின் ஒரு பகுதியே எரிந்தது. அதுவும் விண்கல் விழுந்ததாலேயே எரிந்தது. அந்த விண்கல் விழுந்ததனை கண்ணகியின் ஆற்றாமையினை மீது ஏற்றும் ஒரு உத்தியே மிகுதி. ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எல்லாம் எரியாது.
இந்த பதிவுகளை தொகுத்த திரு.வி.இ.குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
No comments:
Post a Comment