தமிழில் ஒவ்வொருவரின் பெயருக்கும் முன்னால் அவர்களை மரியாதையாக அழைக்கும் வண்ணம் ஒரு அடை மொழிச் சொல் வழங்கப்படும். இவ்வழக்கமானது நம்மொழியில் காலங்காலமாக வழங்கபட்டு வந்த முறை.. ஆனால் தற்காலத்தில் அம்முறையானது அருகிவருவது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். ஒருசில சொற்களைத்தவிர ( திரு , திருமதி, செல்வன்) ஏனைய அனைத்தும் வழக்கிழந்து போய்விட்டன.. எனவே அவற்றினை மீண்டும் நாம் வழக்கிற்கு கொண்டுவந்து நம்மொழியிற்குப் புத்துயிர் ஊட்டுதல் வேண்டும். அந்த கருத்தினையே கருவாகக் கொண்டு இக்கட்டுரையானது வரையப்பட்டிருக்கிறது. இது போன்ற சொற்களை நாம் இக்கட்டுரையில் பார்த்து வாசித்துவிட்டுப் போனால் அழகல்ல; மாறாக இங்கு நீங்கள் காணும் இச்சொற்களை எம் அன்றாட வாழ்வில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து பயன்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
இனி அச்சொற்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக காண்போம்! அச்சொற்கள் மூன்று வகைப்படும்:
- பதவிநிலை அடைச்சொற்கள்
- மதிப்படைச் சொற்கள்
- பின்னடைச் சொற்கள்
1)முதலில் பதவிநிலை அடைச்சொற்களைப் பற்றிப் பார்ப்போமாக:-
- The honorable – மேதகு
- His excellency – மாண்புமிகு
- His worship – வணங்குதகை/வணக்கத்துக்குரிய
- His majesty - மாட்சிமிகு
- Reverent – அருட்டிரு
- Rt. reverent – பேரருட்டிரு
- His highness – மேன்மை மிகு
- His holiness – தவத்திரு
- இறந்தவர் பெயர்க்குமுன் – நினைவிலுரை, இறைவன், இறைவி, காலஞ்சென்ற
- தெய்வப் பெயர்கட்குமுன் – அருள்மிகு
2)இரண்டாவதாக மதிப்படைச் சொற்களைப் பற்றிப் பார்ப்போமாக:-
திருமணமான பெண்களின் பெயருக்கு முன்பு 'திருமதி' என்ற அடைமொழியை ஏன் குறிப்பிடுகிறோம் என்று தெரியுமா? விடைதெரிய வேண்டுமாயின் கட்டுரையினை முழுமையாகப் படியுங்கள்!
- முன்னடைச் சொற்கள்:-
- இளமை கடந்த ஆடவன் பெயர்க்குமுன் - திருவாளர்
- இளமை கடந்த பெண்டின் பெயர்க்குமுன் - திருவாட்டி / திருமதி
- எல்லாப் பெயர்க்கு முன்னும் பொதுவாக – திரு.
- குறிப்பு:
‘திரு‘ என்பது , ஆண்பாலாயின் திருவாளர் என்பதன் குறுக்கமாகவும் , பெண்பாலாயின் திருவாட்டி என்பதன் குறுக்கமாகவும், அவ்வாறே பன்மை நிலையில் திருவாளன்மார், திருவாட்டிமார் என்பனவற்றின் குறுக்கமாகவும் கொள்ளப்படும் .
- மணமாகாத இளைஞன் பெயர்க்குமுன் – குமரன்
- மணமாகாத இளைஞை பெயர்க்குமுன் – குமரி
- இளமை எய்தாச் சிறுவன் பெயர்க்குமுன் – செல்வன்
- இளமை எய்தாச் சிறுமி பெயர்க்குமுன் – செல்வி
- சிறந்த தமிழ்த் தொண்டர் பெயர்க்குமுன் – தமிழ்த்திரு
- துறவியின் பெயர்க்குமுன் – தவத்திரு
- மறையொழுக்கத்தினர் பெயர்க்குமுன் – மறைத்திரு
- ஸ்ரீலஸ்ரீ – பெருந்தவத்திரு (அ) சீர் வளர் சீர்
- குறிப்பு:
அறிவும் ஆற்றலும் பல்வகைத் தொழிலும் பிறவும் பற்றிய புலவர் , பாவலர் , நாவலர் , பேராசிரியர் , முனைவர் , மருத்துவர் , பொறியாளர் முதலான சிறப்பு அடைச்சொற்கள் சேர்க்கப்பெறின் திரு. முதலான பிற அடைச்சொற்கள் தேவையில்லை.
3) மூன்றாவதாக பின்னடைச் சொற்களைப் பற்றிப் பார்ப்போமாக:-
- ஆர் :
- இயற்பெயருக்குப் பின் ஆர் என்னும் சிறப்பு ஈறு மதிப்படையாகச் சேர்க்கப்படும்.
எ-டு: வளவன் - வளவனார்
மகிழினி – மகிழினியார்
- இயற்பெயர் ‘ ம் ‘ என்று முடியின் அவற்றை ‘ ன் ‘ என்று திரித்து ‘ ஆர் ‘ சேர்த்தல் வேண்டும் .
எ-டு: பன்னிர்செல்வம் – பன்னீர்செல்வனார்
- அவர்கள் :
இயற்பெயருக்குப் பின் அவர்கள் என்னுஞ் சொல் சிறப்பு அடையாகச் சேர்க்கப்படும் .
எ – டு: தீபன் – தீபன் அவர்கள்
- இயற்பெயருக்குப் பின் ‘ ஆர் ‘ என்னும் சிறப்பீறு சேர்க்கப்பெறின் அதன்மேலும் ‘ அவர்கள் ‘ சேர்க்கப்பெறும்.
எ – டு: வளவனார் – வளவனார் அவர்கள்
மகிழினியார் – மகிழினியார் அவர்கள்
- திருமதி என்ற கமுக்கம்:-
ஒரு பெண் திருமணத்திற்கு முன்னால், அவளது பெயருக்கு முன்னால் 'செல்வி' என்ற அடைமொழியை குறிப்பிடுகிறோம். ஆனால் அதே பெண், திருமண மான பிறகு, திருமதி என்ற அடைமொழியை அவளது பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொள்கிறது.
பொதுவாக உடலளவில் பெண்ணைவிட ஆண், பலசாலியாக இருந்தாலும், மனதளவில், ஆணை விட பெண்ணே வலிமையானவள். ஏதாவது ஒரு சிக்கல் என்றால், உடனடியாக அந்த ஆண் சோர்ந்து தனது தன்னம்பிக்கையும் துணிச்சலையும் இழந்து விடுவான். அந்த நேரத்தில் அந்த ஆணின் மனைவியானவள், அந்த சிக்கலில் இருந்து விடும்பட மதிநுட்பத்தோடு சில ஆலோசனைகளையும், தீர்வுகளையும் சொல்லி, அந்த ஆண், இழந்த தன்னம்பிக்கையையும், துணிச்சலை யும் மீண்டும் அவனுக்குள் புகுத்தி, அந்த ஆணை எழுச்சி அடையச் செய்வாள். அதனால்தான் மதிநுட்பத்துடன் ஆலோசனை வழங்கும் ஒரு சிறந்த மந்திரியாக விளங்குவாள் என்பது மூத்தோர் சொல்லியுள்ளனர்.
ஆகவே மதிநுட்பம் என்ற வார்த்தையில் வரும் ‘மதி’ என்ற முதல் இரண்டு எழுத்துக்களையும், ஆணின் பெயருக்கு முன்னால் அடைமொழியாக உள்ள திரு என்ற இரண்டு எழுத்துக்களையும் சேர்த்தால், திருமதி என்று ஆகிறது. அதனால் தான் திருமணமான பெண்களின் பெயருக்கு முன்னால் திருமதி என்ற அடைமொழி குறிப்பிடுகிறார்கள்.
இப்பொழுது புரிந்ததா அந்த கமுக்கம் என்னவென்று!
நன்றி:
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. நன்னிசோழன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment