Pages

Friday, 20 December 2019

மனிதனின் எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்குமா ???

இயற்கையுடன் இயைந்து

மனிதனின் எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்குமா ?

நீங்கள் சாபம் விடுவது அல்லது 'கண் வைப்பது 'என்ற விஷயங்களை அவ்வபோது கேள்வி பட்டு இருப்பீர்கள் அல்லவா அவைகள் எல்லாம் வேறு ஒன்றும் இல்லை நமது தீவிர எண்ணம் மூலமாக பிறரை பாதிப்பது தான். ஒருவர் "வயிறு எரிஞ்சி சொல்றன் நீ நாசமாயிடுவ" எனும் போது அவர் எண்ணங்களின் தீவிரதை நாம் புரிந்து கொள்ளலாம். தீவிர எண்ணத்துடன் சொல்லப்பட்ட சாப வார்த்தைகள் எண்ணங்களின் சக்தியால் பலிக்கிறது... பாதிக்கிறது என்கிறார்கள்.
மிக தீவிர எண்ணத்துடன் ஒருவனை பொறாமையாக பார்க்கும் போது அந்த தீவிர தீய எண்ணம் அவனுக்கு ஏதேனும் கேடு விளைவிக்கிறது.

பெரியவர்கள் ஆசிர்வதிக்கும் பழக்கம் இருக்கிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அது வேறு ஒன்னும் அல்ல மேலே பார்த்ததுக்கு நேர் எதிரான செயல் அது. அதாவது நமது நல்ல எண்ணங்களை பிறர் மேல் செலுத்துவது.. 'மனம் குளிர்ந்து சொல்ரேன் நல்லா இருப்பா ' எனும் போது உண்டாகும் ஒரு நேர்மறை சக்தி அந்த சம்பந்த பட்டவர்களை அரண் போல காக்கிறது.

இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞான விளக்கம் தேடினால் கிடைபது கடினம் தான். சரி இப்போது விஞ்ஞான  ரீதியான ஒன்றை பற்றி பார்க்கலாம்.
சில விலங்குகளிடம் உள்ள அசாத்திய திறமை இருக்கிறதே...சொல்ல போனால் இதை விஞ்ஞானத்தை கடந்தது என்றும் கூட சொல்லலாம்.

நீங்கள் புறா வளர்த்து இருக்கிறீர்களா ?புறாக்கள் பொதுவாக ஊரின் வரைபடத்தை நினைவில் வைத்து கொள்ளுவதில் கில்லாடிகள். அதாவது புறாவை நாம் திறந்து விடும் போது அவை பறந்து முழு நகரத்தை நினைவில் வைத்து கொள்கின்றன. எனவே தான் எங்காவது தூரமாக கொண்டு போய் விட்டால் மீண்டும் சரியாக நம்ம வீட்டை தேடி அதனால் வர முடிகிறது.
சரி இது எவ்ளோ தூரம் வரை இப்படி சாதிக்கிறது என்பதை அறிய அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தி அதை தூர கொண்ட போய் விட்டு சில ஆய்வாளர்கள் சோதித்து பார்த்தார்கள். ஆய்வு முடிவு மிக அதிசயமாக இருந்தது. சென்னையில் வளர்க்க பட்ட ஒரு புறாவை கொண்டு போய் டெல்லியில் விட்டால் கூட அது தன் வீட்டை தேடி வந்து விடுகிறது.
இது எப்படி சாத்தியம் ? டெல்லி வரையா பறந்து சென்று ரூட்டை அது மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும்?
நிச்சயம் இல்லை . அதன் உடலில் இயர்கையாக பூமியின் எந்த பகுதியும் தாம்  இருக்கிறோம் என்பதை உணரும் ஒரு GPS சிஸ்டம் இருக்கிறது.

நாம் சம்மருக்கு ஊட்டி கொடைக்கானல் செல்வது போல சீதோஷன மாறுத்தலை தாக்கு பிடிக்க ஒரு துருவத்தில் இருந்து அடுத்த துருவத்திற்கு செல்லும் பறவைகள் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவைகள் கிட்ட தட்ட 20000 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்புகின்றன.

இளம் சிங்கங்கள் கூட்டமாக வேட்டை ஆடும் போது கவனித்து பாருங்கள்.
"மைக் ஒன் நீ அங்க நில்லு... மைக் டூ நீ பின்னாடி நில்லு ... மைக் த்ரி நீ சைட் ல நில்லு . நான் அட்டாக் பண்ணும் போது நீங்க ரெண்டு பேர் சைட்ல வந்து அட்டாக் பண்ணுங்க மீறி தப்பினால் மைக்  ஒன் நீ அடிச்சிட்டு..." என்று திட்டமிட்டு பேசி கொண்டதை போல மிக நேர்த்தியாக அவைகள்  தனக்கான இடம் என்ன வேலை என்ன என்பதை சட்டென்று முடிவு செய்து செயல் படுவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

எறும்புகளின் கூட்டத்தை உற்று பாருங்கள் அந்த மொத்த கூட்டமும் ஒரு ஒற்றை உயிரினத்தை போல செயல் படும். அவைகளுக்கு மொத்தமாக ஒரு கூட்டு மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் 100 எறும்பு இருக்கும் ஒரு கூட்டத்தை நினைத்து பாருங்கள் ஒவொன்றும் ஒரு திசையில் போக பார்க்க  அவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமா ?

ஆக அறிவியல் ரீதியாக கவனித்து பார்த்தால் இவைகள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு ஒன்றி இருக்கின்றன.
அப்படி ஒன்றி இருபவர்களுக்கு தான் இயற்கை தனது ரகசியங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது.
ஒரு பூகம்பம் வர போவதை 7 மாதத்திற்கு முன்பே பாம்புகளால் உணர முடியும் என்கிறார்கள். அதுவும் இங்க இருக்கிற பாம்புக்கு மலேசியா வில் வரும் பூகம்பம்..இது எப்படி இருக்கு?
புதிய ஊரில் ஒரு 5 கிலோ மீட்டர் கொண்டு போய் விட்டால் கூட மனிதன் குழம்பி போவான்.. பறவைகள் கிட்ட தட்ட 20000 கி. மி சரியாக பறப்பது எப்படி ? ஒரு சாதாரண தேனீ பல கிலோ மீட்டர் தூரம் பறந்து உணவு தேடி கொண்டு சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. அதற்க்கு இருக்கும் சின்ன கண்ணை வைத்து கொண்டு வழியை பார்த்து சின்ன மூளையை வைத்து கொண்டு இவ்ளோ தூரம் சரியாக பறப்பது எப்படி ?

ஒரு யானை தனது வாழ்நாள் முழுதும் பார்க்கும் எந்த நிகழ்ச்சியையும் மறப்பது இல்லை என்கிறார்கள். அதன் மூளை என்ன தான் சிறந்த மூளை என்றாலும் மனிதன் மூளை அளவு வளர்ச்சி கொண்டது அல்ல . ஆனால் மனிதனுக்கு அந்த நினைவு திறன் சாத்தியம் இல்லையே எப்படி ?
ஒரு பாம்பு தனது நாக்கை நீட்டினால் போதும் தனக்கு பின்னால் பறக்கும் ஒரு பட்டாம் பூச்சி எவ்ளோ தூரத்தில் இருக்கிறது அதன் பரிமாணம் என்ன சைஸ் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். (பாம்புகள் அடிகடி நாக்கை நீட்டுவது மோப்பம் பிடிக்க தான். நாக்கின் மூலம் தான் அவை மோப்பம் பிடிக்கின்றன )

விலங்குகள் பல வகை ஆற்றலில் நம்மை விட மேம்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அவைகள் உயிர்வாழ அந்த திறமைகளை தான் சார்ந்து இருக்கின்றன. அவைகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன எனவே அவைகள் அழியாமல் அவைகளுக்குள் தொடர்கிறது. மனிதன் தனது உடல் உள்வாங்கும் உடல் உணர்வுகளையும் ...மூளை உள்வாங்கும் உள்ளுணர்வுகளையும் பயன்படுத்துவதை மிக குறைத்து விட்டு தர்க்க ரீதியான அறிவை மட்டுமே பயன் படுத்த தொடங்கியதன் விளைவு இயற்கை வழங்கும் பல கொடைகளை அவன் இழந்து விட்டான்.
இயற்கையுடன் இணைத்து செல்ல முடிந்தால் சில ஆச்சர்யமான அளவில் இயற்கையுடன் சேர்ந்து மனிதனால் பயணிக்க முடியும்.

ஒரு காட்டுக்குள் ஆய்வு செய்ய போன ஆய்வாளர் அவர். ஒரு முறை ஒரு அருவியை படம் பிடித்து கொண்டிருந்த போது ஒரு தள்ளாடும் முதியவரை கண்டார். அந்த முதியவர் அந்த அருவியின் உச்சியில் சென்று தண்ணீருடன் சேர்ந்து குதித்ததை பார்த்து அதிர்ந்தார்.
பதறி போய் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டாரே என ஓடி போய் பார்த்தார். அந்த முதியவர் சிரித்த படி அருவியில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஆய்வாளருக்கு ஆச்சர்யம் தாங்க முடிய வில்லை. மிரட்டும் மரண அருவியில் விழுந்து சிரித்து கொண்டு வரும் இந்த முதியவர் ஒரு மனிதன் தானா என்றே சந்தேகம் வந்து விட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட போது..' நான் தண்ணீரை எதிர்ப்பது இல்லை அவ்ளோ தான் 'என்றாராம். நீருடன் 100 சதம் ஒன்றி போய் விழ முடிந்தால் அருவியின் ஆழம் மனிதனை பாதிப்பது இல்லை என்று ஆய்வாளர் கண்டார்.
இந்த சம்பவம் நாம் நம்புவதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும்  கடினமான ஒன்று. ஆனால் அடுத்து சொல்ல போவதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

ஒரு வண்டியில் 4 பேர் செல்கிறார்கள் அதில் ஒருவர் பயங்கர குடியில் உள்ளார் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த வண்டியின் அச்சு
முறிந்து விட்டது எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது அந்த வண்டி குடை சாய்கிறது  என்று வைத்து கொள்ளுங்கள்.
என்ன நடக்கும் தெரியுமா ? வண்டி விழ போவதை முன்னாடியே அறிந்து விழும் போது முடிந்தளவு தப்பிக்க முயன்றவர்களுக்கு பலத்த அடி படும் ஆனால் என்ன நடக்கிறது என்று கான்ஷியஸே இல்லாத அந்த குடிகாரருக்கு மிக குறைவான அளவே அடி படும் .
காரணம் புவி ஈர்ப்பை எதிர்க்காமல் அப்படியே முழுக்க முழுக்க அதனுடன் அவர் ஒன்றி போவது தான் காரணம். சாதாரணமாகவே குடிகாரர்கள் பல முறை கீழே விழுவதை நாம் பார்க்கலாம். அவர்களுக்கு அதிகம் அடி படுவது இல்லை. ஆனால் சாதாரணமாக நிற்கும் மனிதன் கீழே விழுந்தால் அடி படுகிறது. (இதை படித்து விட்டு யாராவது குடித்தால் இயற்கையுடன் ஒத்து போகலாம் என்று தவறாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி...இயற்கையை முழுமையாக உள்வாங்க விழிபுணர்வு மிக அவசியம் போதை மனிதனுக்கு அது சாத்தியம் இல்லை )

இதை வேறு ஒரு இடத்தில மிக அழகாக பார்க்கலாம். அதாவது குழந்தைகள் இடத்தில் .குழந்தைகள் ஒரு நாளைக்கு பல முறை கீழே விழுகிறார்கள் நம்மை விட நிச்சயம் குழந்தைகள் எலும்பு பலவீனமானது தான். பார்க்க போனால் அவைகளுக்கு பல முறை எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடப்பது இல்லை. காரணம் அவை விழும் போது புவி ஈர்ப்பை எதிர்க்காமல் ஏற்று கொள்கின்றன. அதனுடன் முழுமையாக ஒன்றிணைத்து செல்கின்றன.

குறிப்பாக காட்டில் வாழ்பவர்கள் காட்டு வாசிகள் நம்மை விட இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். அவர்கள் இனத்தில் இதய நோய்.. ஹார்ட் அட்டாக் புற்று நோய் போன்றவைகள் இல்லை. மிக இயல்பானவர்களாக அவர்கள் இருகிறார்கள் ஆனால் மிக விசித்திரமானவர்களாக இருகிறார்கள்.
இன்றளவும் ஒரு ஆதிவாசி இனத்தில் நடந்து கொண்டிருக்கும் மர்ம விசிதிரம் ஒன்று சொல்கிறேன். அந்த காட்டில் வாழ்பவர்கள் பக்கத்து கிராமத்தில் இருப்பவர்களிடம் எப்படி தகவல் தொடர்பு கொள்கிறார்கள்  என்பதை ஆராய்ந்த ஆய்வாளர்கள் தங்கள் அதிர்ச்சியை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் தகவல் தொடர்புக்கு அங்கே உள்ள ஒரு வகை மரத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறார்கள். யாருக்காவது ஏதாவது தகவல் சொல்ல வேண்டும் என்றால் அந்த மரத்திடம் சென்று சொல்வார்கள் அவ்ளோ தான் சம்பந்த பட்டவர் அவர் ஊரில் இன்னோரு மரத்திடம் அந்த தகவலை பெற்று கொள்வார். இது எத்தனையோ ஆண்டுகளாக நடந்து வரும் விடை தெரியா மர்மம். ஆனால் நமக்கு தான் இது மர்மம் அவர்களுக்கு அல்ல. ஒரு தொலை பேசியை பார்த்து அவர்கள் வியக்கலாம் ஆனால் நாம் வியப்பது இல்லை அது போல அந்த மரம் மர்மம் பார்த்து நாம் வியகிறோம் அவர்கள் வியப்பது இல்லை அவர்களுக்கு அது பல வருடமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொலை தொடர்பு சாதனம் அவ்ளோ தான்.
இவைகள் எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது ? இந்த விசித்திரங்களுக்கு எல்லாம் ஒரே காரணம் இயற்கையுடன் ஒன்றி போதல் தான்.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

உயிரினங்களின் செல்கள் பற்றிய ஆய்வுகள்

செல்லுக்குள் செல்வோமா








( உடல் செல்களின் உள்ளே ஒரு பார்வை)

ஆச்சர்யத்தை அள்ளி தரும் உலகின் பல விஷயங்களில் இந்த உடலும் ஒன்று. உற்று பார்த்தால் உடலில் இருக்கும் பல கட்டமைப்புகள் பிரமிப்பை உண்டு பண்ணும்.
உதாரணமாக ஒரு மனிதனின் உடலில் உள்ள மொத்த DNA வை எடுத்து அந்த நூலை நேராக நீட்டி வரிசையாக வைத்தால் அது பூமியில் இருந்து சூரியன்  சென்று மீண்டும் பூமி வந்தால் எவ்வளவு தூரம் இருக்குமோ..அந்த ... தூரம்... (இருங்க அவசர படாதீங்க.. )அந்த தூரம்.. அதை விட கிட்ட தட்ட ஒரு 300 மடங்கு அதிகம் தூரம் இருக்குமாம்...( அல்லது கிட்ட தட்ட மொத்த சூரிய குடும்ப தொலைவை போல இரு மடங்கு என்று சொல்லலாம்..'எம்மாடி..' )
DNA வில் நாம் மெமரியை பதிய முடியும் எனில் ஒரே ஒரு கிராம் DNA வில் நாம் உலகின் மொத்த டேட்டா வை சேகரித்து வைக்க முடியும். இப்படி நிறைய ஆச்சர்யங்களை சொல்லி கொண்டே போகலாம்.

"செல் " படம் வரைந்து பாகம் குறித்த பள்ளி நினைவு நம் அனைவருக்கும் இருக்கும். இன்று மீண்டும் ஒரு முறை செல் என்பதை பற்றி அதில் உள்ள உறுப்புகள் பற்றி...அது செயல் படும் விதம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம் வாருங்கள்..

🎯   🎯  🎯

முதலில் செல் என்பது என்ன ? ஒரு கட்டிடம் செங்களால் ஆனது என்பதை போல ஒரு உயிருள்ள உடல் எனும் கட்டுமானம் செல் எனும் செங்கல் அடுக்குகளால் ஆனது.
உலகத்தில் உள்ள தாவரம் விலங்கு மனிதன் பூச்சி எல்லாமே இப்படி தான். ஆனால் எல்லா செல்களும் ஒன்றை போலவே இருக்குமா என்றால் இல்லை. தாவர செல்கள் கொஞ்சம் மாறு பட்டவை. உதாரணமாக தாவர செல்களில் cell wall  என்று ஒரு மேலடுக்கு பாதுகாப்பு இருக்கும். (தாவர உடல் கடினமாக இருக்க காரணம் இது தான் ) அது எந்த விலங்கு  செல்களிலும்  இல்லை.  சூரிய ஆற்றலை நேராக இழுத்து சக்தியாக மாற்றும் சிறப்பு அமைப்பு தாவர செல்லில் உண்டு அதுவும் விலங்கு செல்லில் இல்லை.

 இப்படி வேற்றுமை இருக்கும் அதே நேரத்தில் உலகில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொருந்தும் படி சில ஒற்றுமைகள் இருக்கின்றன.  உதாரணமாக அனைத்து செல்லிலும் cell membrane இருக்கும் (செல்களை தன்னை சுற்றி உள்ள சுற்றுசூழலில் இருந்து பிரித்து வைக்கும் கவசம் ) அடுத்ததாக sytoplasm என்ற ஒரு ஜெல் அமைப்பு இருக்கும் (செல் பூரா நிரம்பி இருப்பது இது தான். செல்களின் பாகங்கள் இதில் தான் மிதந்து கொண்டு இருக்கும் )
அப்புறம் ஜெனடிக் மெடிரியல் இருக்கும் (உதாரணம் DNA இவைகள் தான் அந்த சம்பந்த பட்ட உயிரியின்  மரபு பற்றிய தகவல்களை தாங்கி இருக்கும் )

சரி இப்போதைக்கு விலங்கு செல்கள் பற்றி மட்டும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

      🧬 🧬   விலங்கு செல்லில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று சிக்கலான அமைப்பு நிறைந்த மேம்பட்ட செல்கள். அதாவது நாய் பூனை எலி பூச்சி யானை மனிதன் என்று அனைத்திலும் இருக்கும் செல்கள். (தாவர செல்கள் கூட இந்த வகையில் தான் சேரும் ) இவற்றிற்கு பெயர்" Eukaryotic cell "  .
இந்த வகை செல்கள் பல  உள் உறுப்புகளை... செல் உறுப்புகளை கொண்டு இருக்கும் இந்த உறுப்புகளை  "organells " என்று அழைக்கிறோம்.மனித உடலில் எப்படி organs இருக்கிறதோ அப்படி செல்லின் உடல் பாகங்கள் தான் ' organells '. இதை தவிர இந்த வகை செல்கள் ஒரு உட்கருவை கொண்டு இருக்கும் (nucleus ).  மற்றும் மேலும் சில சிறப்பு பாகங்களை கொண்டு இருக்கும்.

இராண்டாவது வகை செல்கள் prokaryotic cells என்று அழைக்க படுகின்றன. (இரண்டு வகை செல்களில் மூத்தது இது தான்.. இதில் இருந்து தான் யூகிரியாடிக் செல்கள் பிற்காலத்தில் பரிணாமம் அடைந்தது.. )
இவைகள் முந்திய வகை அளவு சிக்கல் இல்லாதவை. நியூக்ளியஸ் எனும் உட்கருவோ அல்லது membran போர்வையால் போர்த்த பட்ட உள்ளுறுப்புகளோ இல்லாதவை . (ஆனால் இவற்றிலும் கூட மரபணு சங்கதிகள் மட்டும் இருக்கும் ) இவைகள் எப்போதும் ஒரு செல் உயிரியாக இருக்கும் (உதாரணம் வைரஸ் ) அல்லது unicellular organisms என்று சொல்ல கூடிய ஒற்றை செல்கள் சில இணைந்து உண்டான உயிரியாக  இருக்கும் (உதாரணம் பாக்டிரியா )

சரி நாம் இப்போது Eukaryotic cell கள் பற்றி பார்க்கலாம்..
(இந்த யூகேரியொட்டிக் செல்கள் 4 வகையாக பிரிக்கிறார்கள்.. Animalia, plantae, fungi, protista பெயர்களை வைத்தே அவைகள் பிரிக்கப்பட்ட காரணம் புரிந்திருக்கும் )

இதில் இப்போது நாம் பொதுவாக விலங்கு செல்களில்  உள்ள பாகங்கள் (organells ) மற்றும் அவைகள் செயல்படும் விதம் பற்றி மட்டும் பார்க்க போகிறோம்.

உடம்பில் உள்ள பல கோடி கோடி செல்களில் ஒவ்வொரு 'செல்'லும் ஒரு தனி தொழிற்சாலை எனலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு செல்லிலும் விஷயங்கள் நடக்கின்றன.
🎈ஒரு பெரிய நிறுவனத்தில்  இருப்பது போல ஒரு செல்லிலும் கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கிறது.
🎈ஒரு தொழிற்சாலையில் இருப்பதுபோல 'செல்'லிலும் ஒரு ஆற்றல் மூலம் (power sorce ) இருக்கிறது.
🎈ஒரு அரசு நிர்வாகதில் இருப்பது போல ஓவ்வொரு செல்லிலும் குப்பை அகற்றும் கேந்திரம் இருக்கிறது.
🎈ஒரு தர கட்டுப்பாடு ....வேண்டியதை மட்டும் உள்ளே விடும் ஒரு டோல் கேட் அமைப்பு  எல்லாம் ஒரு செல்லில் இருக்கிறது.

அந்தந்த தனித்தனி வேலையை செய்வதற்கு செல்லில் தனித் தனி சிறப்பு உறுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான உறுப்புகளை பற்றி அவைகள் என்ன செய்கின்றன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். (இதற்கு மேல் நீங்கள் 'செல்'லின் படத்தை பார்த்து கொண்டு மேற்கொண்டு படிப்பது உதவியாக இருக்கும்.)

பொதுவாக கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய செல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யலாம் :
அதாவது ஒரு செல்லை எடுத்துக்கொண்டு அதை ஒரு அறை அளவிற்கு பெரிதாக்கினால் பார்க்க எப்படி இருக்கும் ?

ஒரு அறை அளவிற்கு பெரிதாக மிதக்கும் ஒரு ஜெல் பந்து ஒன்றை கற்பனை செய்யுங்கள். அந்த பந்தை முழுமையாக ஒரு மெல்லிய ஊடுருவும் தன்மை கொண்ட போர்வை  போத்தி இருப்பது போல கற்பனை செய்யுங்கள் அந்தப் போர்வை தான் ''செல் மெம்பரைன்". அல்லது "பிளாஸ்மா மெம்பரைன் " செல் முழுக்க பரவி இருக்கும் ஜெல் நீர் அதுதான் "சைட்டோ பிலாசம். "
அந்த ஜெல் போன்ற பந்திற்குள் உற்று பார்க்கிறீர்கள் அங்கே ஒரு கால் பந்து அளவு ஒரு அடர்த்தியான பந்து கண்ணுக்கு தெரிகிறது. அது தான் உட்கரு..நியூக்ளியஸ்.. அந்த கால் பந்துக்குள்.. x வடிவத்தில் சில பொருட்கள் மிதக்கின்றன அவைகள் தான் குரோமோசோம் பொட்டலங்கள்.( அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தால் உள்ளே டி.என்.ஏ இருக்கும் , அப்புறம் அந்த DNA குள் உற்று பார்த்தால் அங்கே ஜீன்கள் இருக்கும்.)

இது தவிர அந்த கால் பந்திற்குள் இன்னும் ஒரு கிரிக்கெட் பந்து அளவு சிறிய அடர்த்தியான பந்து ஒன்று தெரிகிறது.. அதுக்கு பெயர் நியூக்ளியோலஸ். (இங்கே தான் ரிபோசோம் உற்பத்தி நடக்கிறது. அந்த ரிபோசோமின் வேலை புரோட்டீன் உண்டு பண்ணுவது.. ஒவ்வொரு செல்லுக்கும் அந்தப் புரோட்டின் இன்றியமையாதது.)

இதை தவிர அந்த ஜெல் பந்து முழுக்க பல வகை பொருட்கள் மிதக்கின்றன. மைட்டோகாண்ட்ரியா... கோல்ஜி பாடி.. லைசோசம்.. சைட்டோஸ்க்கெலட்டன்.. rough endoplasmic reticulum ,(சுருக்கமாக R.E.R என்பார்கள் ) smooth endoplasmic reticulum (S.E.R),vacuole , cytosol ,centriole. .. etc.. etc. அந்த  ஒவொண்ணும் ஒவொரு வேலை...

செல்கள் பல வேலைகளை செய்கின்றன. அவற்றை சுருக்கி பார்த்தால் முக்கியமாக 3 வேலைகளை அவைகள் செய்வது தெரிய வரும். அது...
1. உணவு எடுத்து கொள்ளுதல்
2. கழிவு வெளியேற்றுதல் .
3. மறு சுழற்சி.

அப்படியே இந்த 3 செயலுக்கு உதவும் முக்கிய 3 பாகங்கள் என்ன என்று பார்த்தோமே என்றால்...

1. Plasma membrane (செல் உடலை மூடி இருக்கும் போர்வை..)
2.  Nucleos (உட்கரு )
3.cytoplasm (செல் பூரா நிரம்பி உள்ள ஜெல் போன்ற திரவம் )

சரி இவற்றையும் மற்ற பாகங்களையும் ஒவொன்றாக பார்க்கலாம்...முதலில் செல் எங்கும் பரவி இருக்கும் அந்த திரவதையே எடுத்து கொள்வோம்.

☢️ #Cytoplasm☢️  :

இது செல் எங்கும் நிரம்பி இருக்கும் திரவம்.
சைட்டோபிளாசதின் வேலை செல் முழுக்க பொருட்களை இட பெயர்ச்சி செய்தல். அப்புறம் கார்போஹைட்ரேட் புரோட்டீன் மாதிரி பொருட்களை கரைத்து வைத்து இருத்தல்..
இது மட்டும் இல்லாமல் செல்லிற்கு உடல் வடிவத்தை இவைகள் தான் கொடுக்கின்றன. சைட்டோ பிலாசம் இல்லை எனில் செல் காற்று இறங்கிய பலூன் போல ஆகி விடும்.

☢️ #Plasma_membrane ☢️ :

பிளாஸ்மா மெம்பரைன் அல்லது செல் மேம்பரைன் இது முன்பே சொன்னது போல செல்லை போர்த்தி உள்ள ஒரு போர்வை ஆகும். இது எதனால் செய்ய பட்டது என்று உற்று கவனித்தீர்களேயானால்.. lipids மற்றும் proteins களால் ஆன இரட்டை அடுக்கு போர்வை இவைகள் என்பது தெரியும்.

இவைகள் எப்படி இருக்கும் என்றால்... வரிசையாக இரட்டை அடுக்கு செங்கல் அடுக்கி வைத்து ஒரு சின்ன சுவர் செய்ததை போல கற்பனை பண்ணுங்கள் அந்த இரட்டை அடுக்கு செங்கல் lipds எனும் பொருளால் ஆனது. இப்போ அந்த சின்ன சுவரில் ஒரு இடத்தில் ஒரு குட்டி கேட் ஐ கற்பனை பண்ணுங்கள் இந்த கேட் புரோட்டினால் ஆனது. கிட்டத்தட்ட இப்படி ஒரு அமைப்பினால் செய்யப்பட்ட போர்வை தான் 'செல்'லை மூடி உள்ளது. இதில் ஆக்சிஜன் மற்றும் நீர் போன்ற சிறிய மாலிகியூல்ஸ் அந்த லிபிட்ஸ் படலத்தை ஊடுருவி செல்லுக்குள் நுழைகின்றன. அதே சமயம் குளுக்கோஸ் மாதிரி பெரிய மூலக்கூறுகள் அந்த புரோட்டீன் கேட் ஐ உபயோகித்து உள்ளே நுழைகின்றன.

பிளாஸ்மா மெம்பரைன் தன்னிடம் வரும் எல்லாம் பொருட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை இந்த படலம் ஒரு semi - permable படலம் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்கள், மூலக்கூறுகள் , அயணிகள் தான் செல்லுக்குள் செல்ல  அனுமதிக்க படுகின்றன.

அடுத்ததாக முக்கியமான ஒரு பாகத்தை பற்றி பார்க்கலாம்..

☢️ #உட்கரு (nucleos ) : ☢️

செல்லுக்குள் அடர்த்தியாக ஒரு உட்கரு காண படும் இவைகள் தான் ஒரு செல்லின் கட்டுப்பாட்டு மையம். (இவைகள் சரியாக செல்லின் மையத்தில் இருக்கும் என்று பலர் நினைப்பது உண்மை இல்லை இவைகள் செல்லில் ஓரம் சாரம் எங்கே வேணா மிதந்து கொண்டு இருக்கும் )  இந்த கட்டுப்பாட்டு மையத்தில் தான் செல்லின் மரபணு பொருட்களான DNA இருக்கும்.  (ஒரு செல் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாம் தீர்மானிப்பது இந்த டி.என்.ஏ கள்தான் )

☢️ #Nucleolus ☢️ :

உட்கருவிற்குள் இருக்கும் இன்னோரு பொருள்  இந்த நியூகளியோலஸ். (அந்த கிரிக்கெட் பந்து..) இங்கே தான் ribosomes கள் உண்டாக்க படுகின்றன. இந்த ரிபோசோம் களின் வேலை முன்பே சொன்னது போல புரதத்தை அதாவது புரோட்டினை உண்டு பண்ணுவது. (இந்த புரோட்டினை உண்டு பண்ணுவதற்கான தகவலும் முன்பு பார்த்த DNA கிட்ட தான் இருக்கு...)

☢️ #Endoplasmic_Reticulum (ER) ☢️

ஒரு பந்தை.. நிறைய சுருக்கங்கள் நிறைந்த ஒரு துணி பையால் சுற்றியது போல.. நியூக்ளியசை சுற்றி ஒரு மடிப்பு வாய்ந்த பெட்சீட் போர்த்தியது போன்று இருக்கும் ஒரு அமைப்பு தான் எண்டோபிளாஸ்மிக் ரெடிகுலம்.. (E .R )  இந்த சுருக்கங்கள் உண்மையில் ஒரு மடிப்பு நிறைந்த பொருட்களை கடத்தும் குகை வழி. ER இன் வேலை புரோட்டினை உண்டு பண்ணும் ரைபோசோமை  செல்லில் இட பெயர்ச்சி பண்ண வைப்பது. இதை rough ER என்று அழைக்கிறார்கள். காரணம் செல்லில் இன்னோரு இடத்தில் இன்னோரு ER உள்ளது அது Smooth ER இவைகள் ரிபோசோம்களை கொண்டிருப்பது இல்லை. இவைகளின் வேலை fat .. கொழுப்பை உண்டு பண்ணுவது. மற்றும் விஷ முறிவு..

☢️ #Ribosomes ☢️

மேலே சொன்ன ரைபோசம்கள் எப்படி புரதத்தை உண்டுபண்ணுகிறது என்று உற்றுப் பார்த்தால்...
அவைகள் அமினோ அமிலங்களை இணைத்து ஒரு சங்கிலித் தொடரை உருவாக்குகின்றன. இந்த அமினோ அமிலங்களின் சங்கிலித்தொடரை தான் நாம் ப்ரோடீன் அல்லது புரதம் என்கிறோம்.
(இந்த செயல்முறையை ட்ரான்ஸ்லேஷன் என்கிறார்கள். )

☢️ #Golgi_body ☢️

கோலஜி பாடியை. கோலஜி காம்ப்ளெக்ஸ் அல்லது கோலஜி அப்ரெட்ஸ் என்று வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். ஆனால் அதை கண்டுபிடித்தவரின் பெயரான கோல்ஜி மட்டும் மாற வில்லை. இது செல்லில் இருக்கும் இன்னோரு சுருட்டி வைக்க பட்ட பெட்சீட் அமைப்பு..

இவற்றின் வேலை என்ன தெரியுமா.. ரைபோசோம்கள் உண்டு பண்ணும் புரதம் இருக்கிறதே அது கச்சா எண்ணெய் மாதிரி பயன் படுத்த கடினமான அமைப்பில் இருக்கும் அந்த புரதத்தை வெட்டி ஒட்டி சீர் செய்து அடுக்கி வைத்து சரியாக மூட்டை கட்டி பயன் படுத்தும் வகையில் தயார் செய்து வைப்பது தான் கோல்ஜி பாடியின் வேலை. புரதத்தை சரியாக அடுக்கி வைப்பது மட்டும் இன்றி அவற்றுடன் லிபிட்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டை இணைத்து வைக்கிறது.
புரதம் கோலஜி பாடிக்கு Vesicle எனும் பார்சல் வடிவில் தான் வந்து சேர்கிறது.. அதை பயன்படுத்த கூடிய சீராக மாற்ற பட்ட புரதமாக மாற்றிய பின்  அதே vesicle பார்சலில் வைத்து தான் கோலஜி அனுப்பி வைக்கிறது. அந்த vesicle அப்படியே மிதந்து போய் செல் மெம்பரைன் உடன் இணைந்து கரைந்து புரோட்டினை வெளியிடுகிறது. இதன் மூலம் எங்கே தேவையோ அந்த தேவை இருக்கும் இடத்திற்கு புரதம் கொண்டு செல்ல படுகிறது.

இப்போ அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது செல்லில் ஒரு மிக முக்கியமான பாகத்தை

☢️ #Mitochondria ☢️

ஒரு செல்லின் பவர் ஹவுஸ் என்று அழைக்க படுவது..இந்த மைட்டோகாண்ட்ரியா தான்.. இங்கு தான் செல்லுக்கு தேவையான ஆற்றல் உற்பத்தி நடக்கிறது.  cellular respiration தான் இதன் முக்கிய வேலை. அதாவது உணவில் இருந்து பிரித்து ஆற்றலை வழங்குவது.
மைட்டோகாண்ட்ரியாவின் வேலை ATP யை உற்பத்தி செய்வது.(.. Adenosine triphosphate ) இந்த ATP என்பது  செல்களுக்கு ஆற்றலை தரும் ஒரு ராசாயணம் . இது தவிர இதன் வேலை என்று பார்த்தால் செல் பிரிதல் மற்றும் செல் இறப்பில் கூட பங்கேற்கின்றன .

இவைகள் நாம் உண்ணும் உணவில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிஜன் உதவியுடன் செல் பயன்படுத்த கூடிய ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த நிகழ்விற்கு பெயர் oxidative phosphorylation.
ATP என்பது ஆற்றல் வைத்து இருக்கும் பொட்டலம் எனலாம் அவைகள் தேவை படும் போது ஆற்றலை வெளியிட்டு உதவும்.

ஒரு செல் அழிவு மற்றும் புது செல் உற்பத்தி  என்பது செல் சுழற்சியில் மிக முக்கியமான ஒரு தொடர்ந்து நடக்கும் செயல் .இந்த செல் அழிவிற்கு பெயர் apoptosis . ( வெவ்வேறு செல்களில் வெவ்வேறு வாழ்நாளை கொண்டிருக்கின்றன ) அதில் எந்த செல் அழிய வேண்டும் என்று தீர்மானிப்பதும் மைட்டோகாண்ட்ரியா கள் தான். மேலும் செல் அழிவில் சில என்சைம்களை கொடுத்து அழிக்க  உதவுவதும் இவைகள் தான்.

ஓவல் வடிவில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறேன் அது ஒரு தியரி அதன் பெயர் " endosymbiyosis theory "

இதன் படி மைட்டோகாண்ட்ரியா என்பது நமது உடலுக்கு சொந்தமானதே இல்லை.. அது நமது உடலில் தங்க வந்த ஒரு பண்டைய பாக்டிரியா... கால போக்கில் அது நமது உடலின் செல்லின் ஓரு அங்கமாக மாறி விட்டது என்கிறார்கள்.
இந்த தியரிக்கு வலு சேர்க்கும் வகையில் மைட்டோகாண்ட்ரியாவின் உடலமைப்பு அமைந்து உள்ளது.

மைட்டோகாண்ட்ரியா தனக்கென தனி ரிபோசோம் கொண்டுள்ளது அதை வைத்து தனியாக புரதம் தயாரிக்கிறது. இவைகள் outer membrane ..மற்றும் innner membrane தனியாக இரண்டு அடுக்கு மெம்பரைன் கொண்டுள்ளன.  அதை விட ஆச்சர்யம் மைட்டோகாண்ட்ரியா தனக்கென தனி DNA களை வைத்துள்ளது..
மேலும் மறுசுழற்சி.. மற்றும் பிரதி எடுத்தல் வேலைகளை செய்கிறது . மற்ற பாகங்கள் தன்னை பிரதி எடுக்க DNA வின் உத்தரவை கேட்க வேண்டி உள்ளது. ஆனால் மைட்டோகாண்ட்ரியா தனது சொந்த DNA தகவல் உதவி உடன் பிரதி எடுத்து கொள்கிறது. இது நியூக்ளியஸ்  எனும் கட்டுப்பாடு மையத்தை  நம்பி இருப்பது இல்லை. (இதனால் இதற்கு செல்ப் ரெப்ரிகேட்டிங் ஆர்கணரி என்று பெயர் ) அதாவது செல்லுக்குள் வாழும் ஒரு குட்டி செல் போல இது செயல்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியா இரண்டு அடுக்கு மெம்பரைன் களை கொண்டு உள்ளது அந்த இரண்டு அடுக்குகளுக்கும் நடுவே கொஞ்சம் இடைவெளி உள்ளது அந்த இடத்திற்கு பெயர் Intermembrane space
இதில் உள் மெம்பரைன் மடிப்புகள் நிறைந்ததாக உள்ளது இதை cristae என்று அழைக்கிறார்கள். அந்த உள் மடிப்பை தாண்டி நடுவில் இருக்கும் இடைவெளியில் இருப்பதை matrix என்கிறார்கள். இங்கே தான் மைட்டோகாண்ட்ரியாவின் தனி பட்ட DNA உள்ளது .மேலும் பல வகை என்சைம்கள் நிறைந்த இடம் இது. அவைகள் ATP உருவாக்கத்திற்கு முக்கிய தேவைனாவை.

மைட்டோகாண்ட்ரியா உடலில் உள்ள அனைத்து செல்களிலும் ஒரே அளவு இருக்காது.. தேவைக்கு ஏற்றார் போல இருக்கும். உதாரணமாக ஈரல் செல்கள் கொஞ்சம் அதிகம் ஆற்றல் தேவையை கொண்டு இருப்பதால் அவற்றில் மைட்டோகாண்ட்ரியாகள் 2000 திற்கும் அதிக அளவில் இருக்கும்.(. ரத்த செல்களில் இவைகள் சுத்தமாக இல்லை ) அதுவே இதய செல்களில் உள்ள சைடோபிலாசத்தில் பார்த்தால் 40 சதம் நிரம்பி இருப்பது இவைகள் தான். (அங்கு தேவை அதிகம் ) விந்தணுவில் வால் இயக்கத்திற்கு ஆற்றலை அளிக்க அங்கேயும் இவைகள் அமைந்து இருக்கின்றன.

மைட்டோகாண்ட்ரியாகள் கால்சியத்தை உறிஞ்சி வைத்து கொண்டு தேவை படும் போது பயன்படுத்துகின்றன.
மேலும் மைட்டோகாண்ட்ரியாகள் செல்லுக்கு வெப்பத்தை கூட உண்டு பண்ணி தருகின்றன.

சரி அடுத்த பாகத்திற்கு போகலாம்..

☢️ #Lysosome ☢️

நம்ம வயிற்றில் எப்படி இரைப்பை என்ற ஜீரண உறுப்பு உள்ளதோ அப்படி செல்லுக்குள் இருக்கும் ஒரு இரைப்பை என்று இதை சொல்லலாம். தனக்குள் வரும் எதையும் உடைத்து அரைத்து துண்டாக்கி விடும். உள்ளே ஒரு ஆள் அறவை இயந்திரத்துடம் காத்திருக்கும் ஒரு இடமாக லைசோசோமை கற்பனை பண்ணலாம்.

உள்ளே ஜீரணத்திற்கான சில சிறப்பு என்சைம் களை இவைகள் கொண்டு இருக்கின்றன. உனவை ஜீரணம் செய்வது ஆனாலும் சரி அல்லது இறந்த செல்களை  அரைத்து துண்டாகுவதானாலும் சரி இங்கு தான் நடக்கிறது. அவ்வளவு ஏன் பாக்டிரியா மாதிரி எதிரி யாராவது ஊடுருவி விட்டால் அதையும் துண்டாகி செயல் இழக்க செய்கிறது லைசோசம்கள்.

இந்த என்சைம்களும் ரிபோசோம் இல் உண்டானவை தான். அவைகள் முன்பு பார்த்தது போல vesicle பார்சலில் கோலஜி பாடி க்கு சென்று அங்கு இறுதி வேலைகள் செய்ய பட்டு லைசோசம்களாக மாறி சைட்டோ பிலாசத்தில் மிதக்கின்றன. தேவை படும் போது செயலாற்றுகின்றன.
இவைகள் single-membrane organelles கள் ஆகும்.

எதையும் கரைக்கும் அந்த என்சைம்கள் ஏன்.. எப்படி இதன் ஒற்றை அடுக்கு மெம்பரனை கரைத்து இந்த உறுப்பையே காரைத்து ஜீரணிக்காமல் இருக்கின்றன. எப்படி இவைகள் பிழைகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியமான ஒரு விஷயம். (நம்ம வயிற்றில் சுரக்கும் ஆசிட் வயிற்றை கரைப்பது இல்லை அல்லவா அப்படி தான்.. )

☢️ #DNA ☢️

உலகில் உள்ள அனைத்து வகையான மூலக்கூறுகளில் மிகவும் புகழ் வாழ்ந்த ஒரு மூலகூறு என்றால் அது  deoxyribonucleic acid என்று சொல்ல கூடிய  DNA தான்.
இந்த குரோமோசோம்.. என்றால் என்ன DNA என்றால் என்ன அப்புறம் ஜீன்கள் என்று எதை சொல்கிறோம் என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும்.. இவைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

செல் நியூக்ளியஸில் DNA கள் இருக்கின்றன என்று பார்த்தோம். செல்லில் உட்காருவில் உற்று பார்த்தால் அங்கே  x வடிவ பொட்டலங்கள் பொட்டலம் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம். இந்த x வடிவ பொட்டலங்களின் பெயர் தான் குரோமோசோம். மனித உடலில் 23 ஜோடியாக மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. சரி அந்தப் பொட்டலதில் என்ன இருக்கிறது என்று அதைப் பிரித்துப் பார்த்தால். உள்ளே அவைகள் குறோமேட்டின் என்கிற வலை பின்னலை வைத்து எதையோ பின்னி வைத்து இருப்பதை பார்க்கலாம். அந்த வலை பின்னலை பிரித்து உள்ளே பார்த்தால் உள்ளே அவைகள் histones என்கிற புரோட்டினால் ஆன நூலை வைத்து எதையோ சுற்றி இருப்பதை பார்க்கலாம். அந்த நூலை உரித்து எடுத்தால் உள்ளே ...அதோ சுருள் ஏணி வடிவில் பத்திரமாக இருக்கும் அந்த பொருள் தான் "DNA " . ஒவொரு குரோமோசோம்களும் தலா ஒரு DNA வை கொண்டு இருக்கும்.
ஏன் இதற்கு இத்தனை பார்சல் பாதுகாப்பு ?

உங்கள் வீட்டில் உள்ளங்கை அளவு ஒரு நூல் கண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நூலை முழுசாக பிரித்துப் போட்டுக் கொண்டே வந்தால் அந்த வீடு முழுவதும் நூல் நிரம்பிவிடும் அல்லவா. அதுவே சரியாக சுருட்டி வைக்கப்பட்டால் வீட்டில் உள்ளங்கை அளவு இடத்தை மட்டும் அது பிடித்துக்கொள்கிறது அல்லவா ? அப்படி ஒரே ஒரு செல்லில் இருக்கும் ஒரே ஒரு DNA வின் நீளம் மட்டும் கிட்ட தட்ட 3 அடி இருக்கும். மனித உடலில் மொத்தம் பல பில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து நீட்டி விட்டால் முன்பு சொன்னது போல சூரியனின் தொலைவு போல 300 மடங்கு நீளும். இதை சிறப்பாக சுருட்டி வைக்க தான் அந்த super coil அமைப்பு.

இதில் ஜீன்கள் என்பது என்ன ? அந்த DNA குள் அடங்கி இருக்கும் சில சிறப்பு தகவல் அமைப்பு தான் ஜீன்கள்.
DNA தகவல்கள் அபாரமானவை படித்து பார்த்தால்..அவற்றில் புரதம் உண்டாகுவதற்கான சமையல் குறிப்பும் உண்டு. அதே சமயம்..ஒரு மனிதனின் மொத்த தகவல் அவன் கண் என்ன நிறம் தோல் என்ன நிறம் அவன் என்ன உயரம் என்பது தொடங்கி அவனது மொத்த  ஜாதகமும் அதில் உள்ளது.( அவன் ஜாதகம் மட்டுமல்ல அவன் கடந்து வந்த மொத்த பரம்பரையின் ஜாதகமும் கூட அதில் அடங்கி உள்ளது)
ஒரு குழந்தைக்கு இந்த டிஎன்ஏ தகவல் பாதி அம்மாவிடமிருந்து பாதி அப்பாவிடம் இருந்தும் கிடைக்கிறது.

DNA வில் முறுக்கிய  இரண்டு இழைகளை காணலாம். அப்புறம் அவற்றிற்கு இடையில் சிறு கோடுகள் தொடர்பு கொண்டு இருப்பதை காணலாம்.
அந்த இழைகள்.. nucleotides களால் ஆனவை. அதாவது....

ஒரு phosphate மூல கூறு மற்றும்

ஒரு சர்க்கரை மூலக்கூறு. (இதன் பெயர் deoxyribose இவைகள் 5 carbons கள் அடங்கிய அமைப்பு. )

இதை தவிர ஒரு nitrogen-containing region உள்ளது அது தான் அந்த ஏணிக்கு நடுவில் உள்ள கோடுகள்.
இந்த nitrogen contenting region 4 வகைகள் கொண்டது.. அந்த 4 வகை தான் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வரும்... அவைகள்..
adenine (A)
cytosine (C)
guanine (G) மற்றும்
thymine (T)
 இந்த நான்கு எழுத்தை கொண்டு மாற்றி மாற்றி எழுத பட்ட தகவல் தான் நமது genetic code,  மொத்த ஜாதகம் .
அந்த இரட்டை சூழல் ஏணி அமைப்பில் இடையில் ஒன்றோடு ஒன்று இந்த நான்கும் தொடர்பில் இருக்கின்றன. அவற்றை உற்று பார்த்தால்... A எப்போதும் T உடன் இணைவதை பார்க்கலாம்.G எப்போதும் C உடன் இணைவதை பார்க்கலாம். (அந்த நீளமான ஏணி  sugar மற்றும் phosphate groups.களால் செய்ய பட்டது.)

46 குரோமோசோம் சொன்னோமே.. அது 46 கு பதில் 48 இருந்தால் என்ன ஆகும் ? அப்படி என்றால் நாம் மனிதனல்ல மங்கி. குரங்குகள் 48 க்ரோமோசோம் களை கொண்டிருக்கின்றன.
நமது குரோமோசோமில் நீண்டது முதல் குரோமோசோம் ஆகும். இதில் 8000 ஜீன்கள் உள்ளன. இருப்பதில் சிறியது 21 ஆவது குரோமோசோம் ஆகும் இதில் 3000 ஜீன்கள் உள்ளன.  எப்படியும் மொத்த 46 குரோமோசோம்களில் மனிதன் மொத்தம் 20000 இல் இருந்து 30000 வரை ஜீன்களை கொண்டு இருக்கிறான்.

இந்த ஜீன்களில் தான் அந்த மனிதன் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் ஒளிந்திருக்கிறது. உதாரணமாக அவன் உடலில் சர்க்கரையை கட்டு படுத்தும் இன்சுலின் எனும் பொருள் சுரக்க வேண்டுமா அந்த தகவலுக்கு என்று குறிப்பிட்ட ஜீன் டேட்டா இருக்கும்.  இப்படி நாம் கண்டு பிடித்த தகவல் DNA வில் வெறும் 3 சதம் தான் என்கிறார்கள். மீதமுள்ள 97 சததில் ஒளிந்து இருப்பது என்னவென்று இன்னமும் நமக்கு தெரியாது

இதில் RNA என்று ஒன்றை கேள்வி பட்டு இருப்போம் அது என்ன..? இது DNA வின் காபி தான். என்ன வித்தியாசம் என்றால். இதில் இரட்டை இழைக்கு பதில் ஒற்றை இழை தான் இருக்கும். மேலும் இதில் thymine இருக்காது அதற்கு பதில் uracile என்ற ஒன்று இருக்கும். இவைகள் messenger RNA (m RNA ) ஆகும். இவைகள்
 translated RNA (t RNA ) மூலம் அமினோ அமிலங்களாக டிரான்ஸ்லெட்  பண்ண படுகிறது mRNA கள் three-letter sections களால் படிக்க படுகிறது அதன் பெயர் codons. ஒவொரு  codon code களும்..குறிப்பிட்ட அமினோ அமிலங்களுக்கானது. (மொத்தம் கிட்ட தட்ட 20 வகை அமினோ அமிலங்கள் உள்ளன )

   ♠️   ♠️   ♠️   ♠️   ♠️   ♠️  ♠️   ♠️   ♠️

சரி மேலே நாம் பார்த்தது மட்டும்தான் செல்லின் பாகங்களா என்றால் இல்லை. இன்னும் Centrosome.. Peroxisome..
Villi..என்று நுணுக்கமான பல பாகங்களை செல்கள் கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமான சிலதை மட்டும் தான் நாம் மேலே பார்த்தது.
மனித உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒரே மாதிரி இருக்காது அவைகள் தேவைக்கு தகுந்தாற்போல கொஞ்சம் மாற்றங்களுடன் காணப்படும். உதாரணமாக விந்து அணுவில் அவைகள் நீந்தி செல்ல வால் அமைப்பு இருக்கும். இந்த வாலுக்கு பெயர் "flagella ". ( இது சில பாக்டீரியாக்களிலும் இருக்கிறது.. அவைகள் நீந்தி நகர உதவுகிறது.)

இதே போல சுவாச மண்டலத்தில் எடுத்துக்கொண்டால் நுரையீரலில் முடி போன்று இருக்கும் அலை போல ஆடி கொண்டு இருக்கும்  ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் cillia . நாம் தூசுகளை சுவாசிக்க நேர்ந்தால். அவற்றை பிடித்து கொண்டு இரும்பும் போது தும்பும் போது வெளியேற்ற இவை உதவுகின்றன.

இப்படி உடலில் பல உறுப்புகள் பல வகைகளில் செல்களை கொண்டு இருக்கின்றன. ரத்தத்தின் செல்களும் தசையின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தசைகளின் செல்களும் தோலின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தோலின் செல்களும் நரம்புகளின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மொத்தம் 200 வகை இப்படி மாறுபட்ட செல்கள் மனித உடலில் இருக்கின்றன. இவைகள் அளவுகளில் கூட மாறுபட்டு இருக்கின்றன. உதாரணமாக உடலில் உள்ள மிக பெரிய அனு பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டையின் செல் ஆகும். என்ன ஆச்சர்யம் என்றால் இருப்பதிலேயே சிறிய செல் ஆணின் விந்து அனு செல்கள் ஆகும்.. (ஆக செல் உலக இயற்கை படி.. இருப்பதிலேயே சிறிய ஆள் ஒருவன் இருப்பதிலேயே பெரிய இடத்து  ஆளை காதலித்து கரம் பிடிக்கும் செயலுக்கு பெயர் தான் குழந்தை உருவாக்கம். )

கடைசியாக  சில சுவாரஸ்யமான செல்  தகவல்களை சொல்லி முடிக்கிறேன்.

🥗 மனித உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து அழிந்து கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன. ஒரு வளர்ந்த மனிதன் உடலில் ஒரே ஒரு நிமிடத்தில் கிட்ட தட்ட 9.6 கோடி செல்கள் இறந்து கொண்டு இருக்கின்றன. அதே ஒரு நிமிட நேரத்தில் 9.6 கோடி செல்கள் இரண்டாக பிரிந்து புதிய செல்கள் உண்டாகி கொண்டு இருகின்றன.

🥗 வெவ்வேறு செல்கள் வெவ்வேறு ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ரத்த வெள்ளை அணுக்கள் செல்கள் 13 நாள் உயிர் வாழ்கின்றன. நமது மேல் தோலில் உள்ள செல்கள் குறைந்தது ஒரு மாதம் உயிர் வாழ்கிறது. ரத்த செல்கள் குறைந்தது இரண்டு மாதங்கள் உயிர்வாழ்கின்றன. லிவரில் உள்ள செல்கள் 18 மாதங்கள் வாழ்கின்றன.

🥗 மனித உடலில் எத்தனை மனித செல்கள் உள்ளதோ அதை விடவும் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியா மாதிரியான மனித செல்களில் அல்லாத வேறு செல்களை மனித உடல் கொண்டிருக்கிறது.
அப்படி இருந்தும் மொத்த எடையில் வெறும் 3 சதம் தான் பாக்டிரியா மாஸ் . இது எப்படி ?? இதற்கு காரணம்..பாக்டிரியா செல்கள்  (prokaryotic cell ) மனித செல்களை ஒப்பிடும் போது மிக சிறியவை.

🥗 மனிதன் பல கோடி செல்களை கொண்டு இருந்தாலும் அவனும் உருவாகும் தருணத்தில் ஒற்றை அணுவாக இருந்து தான் உண்டாகி... பல்கி பெருகி கருவாகி பல கோடி செல்கள் கொண்ட குழந்தை ஆகிறான்.

🥗  உடலில் உள்ள மிக பெரிய செல் பென்னின் கருமுட்டை என்று பார்த்தோம். வெறும் கண்ணால் பார்க்க முடிய கூடிய ஒரே செல்லும் அது தான். (ஒரு தலை முடியின் நுனி யை பார்ப்பது போல இருக்கும் ).

    ♠️   ♠️    ♠️   ♠️   ♠️   ♠️  ♠️   ♠️   ♠️

கட்டுரையில் நாம் பார்த்தது விலங்கு செல்களை பற்றி மட்டும் தான்.  இதே போல தாவர செல்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளது வேறு சந்தர்ப்பத்தில் வேறு கட்டுரையில் அதை பற்றி பார்க்கலாம்.

இயற்கையின் படைப்பில் பல ஆச்சரியங்களில் ஒன்று இந்த செல்கள்.
செல்களைப் பற்றி நாம் அறிந்தது குறைவுதான் இன்னும் மறைந்திருக்கும் உண்மைகள் எவ்வளவோ....


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


               தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
                - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 19 December 2019

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்.

*"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?*


ஆக்சிசன் என்னும் ஆங்கில சொல்லுக்கு தூய தமிழ் பெயர்    "உயிர்வளி "

*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்...?*

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை'னு கேக்கறீங்களா...?

காரணம் இருக்கு... அதை கடைசியா சொல்றேன்... இப்ப பதில் சொல்லுங்க... 

"இதென்ன கேள்வி...? எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்...!" என்கிறீர்களா...?

ஓகே... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்...?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை... என்ன... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது... பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை...' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்...

இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது...
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும்ம்'ன்னு இருட்டா கருப்பா ஆயிடும்.  மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம், குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க, இன்னும் விடியலை போல'னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும்... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான். (சும்மாவே நம்மூர்ல அரசியல் வாதிங்க கட்டுற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது)

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும். எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன். அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு...? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்... நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல... சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O 3) தான் வடிகட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கபடாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்துவிடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும்...!  (ஹலோ நான் சொல்றது கேக்குதா...? ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கபடுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம்.. ஓடும் கார்.. பைக்.. எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக் கொள்ளும்...!

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி... ஐந்தே ஐந்து நொடி...  பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது தானே...?
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்...? 

அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி செய்ய முடியாத ஆக்சிஜனை ஒரு மரத்தால் உற்பத்தி செய்ய முடியும்...!

எனவே

*"மரம் வளர்ப்போம்...! ஆக்சிஜன் பெருக்குவோம்...!"*


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு.பாலாஜி  அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

                     தமிழால் இணைவோம் !!!
                     அறிவால் உயர்வோம் !!!
                               தமிழ் வாழ்க !!!
              அறிவியலின் தேடல் தொடரும்.
                           வலியே  " வலிமை "
                  - அய்யனார் (வால்வரின்)..

Friday, 13 December 2019

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன் ஒரு தமிழர் !!!!


உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன் நாட்டில் உள்ளவர் .. 

டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகம் என்பது தமிழர்கள் 

அறிய வேண்டியவை !!!





உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன், 

தனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட போது, இந்த உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

1793 ஆம் ஆண்டு முதல், நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூர் பகுதியில் வசித்து உள்ளார்கள். 

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் எனது மூதாதையர் திருமணம் செய்துள்ளார். 

எனவே, ஒவ்வொரு முறை, நான் தமிழர்களை சந்திக்கும் போதெல்லாம், 

இவர்கள் எனது உறவினர்களாக இருக்கக்கூடும் என்று பெருமிதம் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரிய தொழிலதிபர்
விர்ஜின் குழுமம்
பிரிட்டனை சேர்ந்த, 69 வயதாகும் ரிச்சர்ட் பிரான்சன், புகழ்பெற்ற விர்ஜின் என்ற தொழில் குழுமத்தின் தலைவராகும். ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

திட்டம் 
முதலீடு
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து, 
ஹைப்பர் லூப் தொழில்முதலீடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வருகை தந்துள்ளார்.
 அப்போதுதான் இந்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


பாரம்பரியம் 

தமிழக பாரம்பரியம் !!!!

தமிழகத்தின் பூர்வீகம் என்பது மிகவும் பழமையானது. 

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த போதிதர்மர் மற்றும் சீனா நாட்டுக்கு இடையேயான உறவு அனைவரும் அறிந்ததே. 

போதிதர்மரை புத்தமதத்தின் குருக்களில் ஒருவராக சீனர்கள் கருதுகிறார்கள்.



தமிழர்கள் 
மூத்த குடி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, என்ற புகழ்பெற்ற தமிழ் மரபு,

 பல்வேறு நாடுகளிலும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி உள்ளது என்பது இது போன்ற டிஎன்ஏ டெஸ்ட்களின் மூலமும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.



இன்றுவரை உலக மக்களின் தாயகம் குமரிக்கண்டம் என்னும் இலெமூரியா கண்டம் தான்.

தமிழர் அவர்களுடைய வம்சாவளிகளை பல இடங்களில் உருவாக்கி உள்ளார்கள்.

உலகில் தோன்றிய முதல் மனித இனம் .

" குமரின் " என்னும் தமிழன்.

இன்று உள்ள மூக்கடலையும் சூழ்ந்த தமிழ் தேசம்!!!!

அன்றேய இரண்டே கடலாக இருந்த சொர்க்க பூமி
" குமரிக்கண்டம் ". 

இதில் உருவான ஒட்டுமொத்த உலகமே இன்று பல உண்மைகளை புதைக்கிறது. 

நம் தந்தையான இலெமுரியன் என்னும்  குமரியன் மகளே இந்தியா !!!!

தந்தையை அழிக்க எண்ணுகிறாள் என்பது வருத்தமாக இருக்கிறது. 

ஆனால் உலகம் அவர்களின் தந்தையை காக்க முயற்சிக்கிறது.

தமிழின் மரபு இன்றுவரை பல நாட்டில் பரவி உள்ளது.


தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, 

இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.

நமது முன்னோர்களும் , மூதாதையர்களும்  ஆண்ட இந்த உலகை.

பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த இந்திய மக்கள் .

உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.

உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!


உலக சரித்திரத்தின் வரலாற்று புத்தகத்தில் தமிழன் தனது பக்கத்தினை கேட்டுப் பெறவில்லை. 
அவனது சாதனைக்கு  வரமாக கொடுக்கப்பட்டது.

தமிழன் வரலாறு.

                   தமிழால் இணைவோம் !!!
                   அறிவால் உயர்வோம் !!!
                             தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                        வலியே  " வலிமை "
                 - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 8 December 2019

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் !!!


*ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.
 ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே ஒவ்வாமை அதாவது அலர்ஜி.
ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.
அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.*

*இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய அலுவலகத்தில் ஒரு மன்றம் . கலந்து கொள்ளப் போனார்.
அந்த மன்றத்தில் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய  மேசை நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.*

*'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மன்றத்தில்  கலந்துகொள்ள போகிறோம்' என்று பயந்தார்.*

*ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.*

*மன்றம் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.*

*அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.*

*இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"*

*இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.*

*#இதுதான்_நமது_மனம்..*

*#இந்த_மனதால்_நோய்களை_உருவாக்கவும் முடியும்.. #குணப்படுத்தவும் முடியும்..*

*இந்த மனதால்*

 *#பிரச்னையை_உருவாக்கவும் முடியும்.. அதற்கு #தீர்வையும் தர முடியும்.*

*எனவே,*

 *#நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*


         
                தமிழால் இணைவோம் !!!
                 அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
               - அய்யனார் (வால்வரின்)..