சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) பிறந்த தினம் (மார்ச் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் (1879) பிறந்தார். தந்தை ரசாயனத் தொழிற்சாலை உரிமை யாளர். படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. அப்பா தந்த காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்துவந்தார். இளம் வயதில் வயலின் கற்றார்.
# உறவினர் ஒருவர் இவருக்கு கணிதம், அறிவியல் கற்பித்த தோடு, பல நூல்களை படிக்கச் சொன்னார். இதனால் கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் பிறந்தது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக்கில் பயின்றார். காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.
# இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது. அதுவரை ஏற்கப்பட்டுவந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படைக் கொள்கைகளை இவரது கோட்பாடு மாற்றியமைத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
# குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.
# பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
# இவரை யூத இயற்பியலாளர் என்று முத்திரை குத்திய ஹிட்லர் நிர்வாகம் இவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதனால், 1933-ல் அமெரிக்கா சென்றார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இணைந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றார். ஒருங்கிணைந்த புலக்கோட்பாடு விதியை 1950-ல் வெளியிட்டார்.
# ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.
# எளிமையானவர். ரயிலில் 3-வது வகுப்பில்தான் செல்வார். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்!
# மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார். தன் அறையில் காந்திஜியின் படத்தை மாட்டிவைத்திருந்தார். ‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.
# இவரது உடல்நிலை 1955 ஏப்ரலில் மோசமானது. ‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். மருத்துவமனையில் அடுத்த நாள் காலை அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 76.
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)
No comments:
Post a Comment