கிருஷ்ணருக்கு அர்ஜுனனை விட சகுனியை அதிகம் பிடிக்க காரணம் !!!
மகாபாரத போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சகுனி. காந்தாரியின் சகோதரனான சகுனி தன் சகோதரிக்கும், தன் குடும்பத்திற்கும் குரு வம்சத்தால் ஏற்பட்ட அவமானத்திற்கும், கொடுமைகளுக்கும் குரு வம்சத்தை அழிக்க எண்ணினார். அதற்காகவே கௌரவர்களுக்கு சிறுவயது முதலே மனதில் தீய எண்ணங்களை வளர்த்து வந்தார். இறுதியில் குருஷேத்திர போரை ஏற்படுத்தி தன் இலட்சியத்தில் வெற்றியும் கண்டார்.
சகுனியை துரியோதனன் மற்றும் கௌரவர்கள் தவிர வேறு யாரும் விரும்பமாட்டார்கள் என்று நாம் அறிவோம். ஆனால் அது உண்மையில்லை. ஏனெனில் கௌரவர்களை விட சகுனி மீது மனதிற்குள் அதிகம் நேசம் வைத்திருந்த ஒருவர் இருந்தார். அவர் வேறுயாருமல்ல நமது வாசுதேவ கிருஷ்ணர்தான். இது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் இருந்த நட்பு மிகவும் இரகசியமானது. கிருஷ்ணர் ஏன் சகுனி மீது அன்பு பாராட்டினார் என்பதை இங்கு பார்க்கலாம்.
துரியோதனன் பற்றி மகாபாரதம் படித்த அனைவருமே நன்கு அறிவோம். மகாபாரத போருக்கு காரணமாக பலர் இருந்தாலும் அதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது துருயோதனனுக்குள் இருந்த கர்வமும், இராஜ்ஜிய ஆசையும்தான். கௌரவரர்களில் மூத்தவரான துரியோதனன் அதர்மியாக இருந்தாலும் மகாவீரன். பலத்தில் பீமனுக்கு இணையானவன், கதாயுதப்போரில் பீமனை விட ஒருபடி மேலே சிறந்தவன் என்று கூட சொல்லலாம். அதற்கு காரணம் துரியோதனனின் குருவாக இருந்த பலராமர்தான். இந்த பலராமர் வேறு யாருமல்ல, பகவான் கிருஷ்ணரின் சகோதரன்தான்.
கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமர்தான் துவாரகையின் மன்னனாக இருந்தார். கிருஷ்ணர் எப்படி திருமாலின் அவதாரமாக பிறந்தாரோ, அதேபோல பலராமர் ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்தார். திருமால் அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுத்த போதெல்லாம் ஆதிசேஷனும் அவருடன் சேர்ந்தே அவதாரம் எடுத்தார். திருமாலின் இராம அவதாரத்தில் இலட்சுமணனாக அவதரித்தது ஆதிசேஷன்தான். பலராமர்தான் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கதாயுத குருவாக இருந்தார். ஆனால் தன் சிறப்பான ஆற்றல் மூலம் அவரின் விருப்ப சீடனாக மாறினான் துரியோதனன்.
தனக்கு விருப்பமான சீடனை தன் சகோதரிக்கு மணம் முடிக்க விரும்பினார் பலராமர். ஆனால் நாராயணனின் முடிவு வேறு மாதிரி அல்லவா இருந்தது. அவர் தான் தங்கையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனை செய்தும் காட்டினார். இதனால் அவமானமடைந்த துரியோதனன் பலராமருடன் கோபித்து கொண்டு சென்றுவிட்டான்.
பாண்டவர்களின் வனவாசம் முடிந்து அவர்கள் தாங்கள் இழந்த இராஜ்ஜியத்தை மீட்க பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தார்கள். ஆனால் சகுனியின் தந்திரமும், துரியோதனின் கர்வமும் இணைந்து பேச்சுவார்த்தை முயற்சிகளை தோல்வியடைய செய்தார்கள். கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைதான். இறுதியில் போர் என முடிவெடுத்த பின் இருபுறமும் படைகளை திரட்ட தொடங்கினர்.
பாண்டவர்கள், கௌரவர்கள் இருவரும் தங்கள் சேனையை பலப்படுத்தும் பொருட்டு தங்கள் நட்பு இராஜ்ஜியங்களிடம் உதவி கேட்க முடிவிசெய்தார்கள். அதன்படி மிகப்பெரிய நாராயணி சேனையை கொண்ட துவாரகையிடம் உதவி கேட்க இருதரப்பினரும் முடிவு செய்தனர். ஆனால் துரியோதனன் மீண்டும் பலராமரிடம் சென்று உதவி கேட்க தயங்கியபோது சகுனி நாம் நாராயணி சேனையை பெறாவிட்டால் அர்ஜுனன் கிருஷ்ணன் மூலமாக எளிதில் படையை பெற்றுவிடுவான் எனக்கூறி அவன் துரியோதனன் மனதை மாற்றினான்.
பல ஆண்டுகளுக்கு பிறகு பலராமரை சந்திக்க செல்வதால் அவரின் மனதை கவரும்படி எதாவது பரிசு கொண்ட செல்ல வேண்டுமென்று விரும்பினான் துரியோதனன். எனவே பல இடங்களில் தேடி எவருக்கும் கிடைக்காத ஒரு மாயக்கண்ணாடியை வரவழைத்தான். அந்த கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால் அந்த கண்ணாடியை பார்த்தால் அதில் நமது முகம் தெரியாது நமக்கு மிகவும் பிடித்த நபர் யாரோ அவர்களின் முகமே தெரியும். அந்த அற்புத மாயக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு தன் குருவான பலராமரை சந்திக்க கிளம்பினான் துரியோதனன்.
துவாரகைக்கு வந்த துரியோதனனையும், சகுனியையும் மனமார வரவேற்றார் பலராமர். ஆனால் அவரின் மனதிற்குள் துரியோதனன் சூதாட்ட மண்டபத்தில் செய்த செயல்களுக்குகாக அவனுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. எனவே அவனை விளையாட்டாக கதை போருக்கு அழைத்தார். துரியோதனனும் அதற்கு ஒப்புக்கொள்ள இருவருக்குள்ளும் யுத்தம் தொடங்கியது. பலராமர் தன் கோபம் தீர துரியோதனனை சண்டையில் துவம்சம் செய்தார். இறுதியாக அவனுக்கு தண்டனை வழங்கிய மனநிறைவோடு அவனை விடுவித்தார்.
சண்டை முடிந்தவுடன் தன் குருவுக்கு தான் கொண்டு வந்திருந்த மாயக்கண்ணாடியை பரிசளித்தான் துரியோதனன். அதன் சிறப்பை அறிந்த பலராமர் மிகவும் மகிழ்ச்சியடைந்து துரியோதனனுக்கு நன்றி கூறினார். அதன் பின் அனைவரும் அந்த கண்ணாடியில் அவரின் முகங்களை பார்த்தனர். அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த நபர்களின் முகமே தெரிந்தது. இறுதியாக கிருஷ்ணர் கண்ணாடியில் முகம் பார்த்தார். அனைவரும் அர்ஜுனனின் முகம்தான் தெரிய போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்க கண்ணாடியில் தெரிந்ததோ சகுனியின் முகம். அதன் காரணம் யாருக்குமே புரியவில்லை, அனைவரும் கண்ணாடியில்தான் பிரச்சினை என்று கூறினார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் மௌனமாய் புன்னகைத்தார். ஏனெனில் அந்த கண்ணாடி காட்டியது உண்மைதான் என்று பகவான் கிருஷ்ணர் மட்டுமே அறிவார்.
இதற்கு காரணம் நாம் எப்பொழுதும் யாரை அதிகம் விரும்புவோம்? நம்முடைய இலட்சியம் நிறைவேற உதவி செய்பவர்களைத்தானே. கிருஷ்ணருடைய அவதாரத்தின் நோக்கமே பூமியில் மக்கள் தொகையை குறைத்து அதர்மத்தை அழிப்பதுதான். அதற்கு உதவி செய்தது யார் என்று பார்த்தால் சகுனிதானே. அப்படி பார்த்தால் அர்ஜுனன் தானே கண்ணாடியில் தெரிந்திருக்க வேண்டும் என உங்கள் மனதிற்குள் கேள்வி எழலாம். ஆனால் அர்ஜுனன் கிருஷ்ணருடைய கருவியாக மட்டுமே இருந்தானே தவிர காரணமாய் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் குருஷேத்திர போருக்கு காரணமாக இருந்து தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற தனக்கே தெரியாமல் பல உதவிகள் செய்த சகுனியின் மீது கிருஷ்ணர் அன்பு பாராட்டியதில் தவறில்லையே.
No comments:
Post a Comment