Pages

Sunday, 30 August 2020

திருவோணம் என்னும் ஓணம் தமிழர்களின் திருவிழா

 




ஓணம் பண்டிகையும் நம் தமிழ் இலக்கிய குறிப்புகளும்


கேரளமும்-தமிழகமும் தன் பழைய பொலிவுடன்,தர்மத்தை காக்க திரு அனந்தபத்மநாபனால் விரைவில் மீண்டெழும்.சேர,சோழ,பாண்டியர்கள் காத்த சநாதன தர்மம் தெற்கே மறுபொலிவு பெறும்.


"மண்ணும் விண்ணும்

தாய அடி அளந்தான்" - ஞானசம்பந்தர் தேவாரம் 


திருமாலின் திருவிக்ரம தரிசனத்தை வாமன அவதாரத்தை சைவர்களின் தேவாரம் சொல்கிறது.


"மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு" - திருக்குறள் 


அதாவது சோம்பலில்லாத மன்னவன் விண்ணையும்,மண்ணையும், பாதாளத்தையும் வெற்றி கொண்ட திருமாலைப் போல உயர்வடைவான் என்று திருக்குறள் சொல்கிறது.


---------------------------------------------------------------------------------------


"இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே" - சிலப்பதிகாரம்


பொருள்: இரண்டடியால் இருள் முடிய மூவுலகை அளந்தாயே!


"மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசேவடி"  - சிலப்பதிகாரம் 


பொருள்: மூன்று உலகையும் இரண்டு அடிகளால் முறையாக அளந்தாய் வாமன அவதாரத்தில் என்கிறார் இளங்கோவடிகள்.


---------------------------------------------------------------------------------------


"நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு

வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல"


 - முல்லைப்பாட்டு


பொருள்: அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து,சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும்,திருமகளை அணைத்தவனுமாகிய வலிமையான கையை உடையவனும்,மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல் உள்ளது மேகக் கூட்டத்தின் எழுச்சி என சங்கப்புலவர் நப்பூதனார் வாமன அவதார புராணத்தை போற்றுகிறார்.


--------------------------------------------------------------------------------------


"இருநிலங் கடந்த,திருமறு மார்பின்,முந்நீர் வண்ணன்" - பெரும்பாணாற்றுப்படை 


பொருள்: பெரிய இந்த நிலப்பரப்பைத் தன் காலடியால் அளந்தவனும்,திருமகளைத் தன் மார்பில் நிறுத்திய கடலின் நீல நிறத்தைக் கொண்டவனுமாகிய திருமால் என புகழ்கிறது வாமன அவதாரத்தை போற்றுகிறார்கள்.


"ஞால மூன்றடித்தாய முதல்வன்" - கலித்தொகை


பொருள்: மூன்று உலகத்தையும் தன் அடிகளால் அளந்த முதல்வன்.


"திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி" - பரிபாடல்


பொருள்: திரண்ட அணுக்கூட்டங்களால் ஆனது இந்த உலகம்.இதனை நீ உன் திருவடியால் முன்னொரு காலத்தில் அளந்தாய்! 


---------------------------------------------------------------------------------------


ஆக வைணவத்திற்கு அப்பால் உள்ள நூல்களும் இந்த புராண குறிப்பை தொன்முது காலத்தில் இருந்தே தன் பண்பாட்டு மற்றும் வழிபடு விழுமியமாக போற்றி புகழ்கிறது பல்லாயிரம் வருடமாக.இதுதான் தமிழர் போற்றும் திருமாலின் வாமன அவதார வணக்கம்.


தமிழின் சங்ககால நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சி தலையாலங்கானத்து சென்றுவென்ற பாண்டியனின் புகழ் கீர்த்தி பாடும் நூலாகும்.ஓணம் பண்டிகையை பற்றியும் திருமால் அசுரரை வென்றதையும் குறிப்பிடுகிறது.


"கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்

மாயோன் மேய ஓண நல் நாள்,

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,

சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,     

மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,           

மாறாது உற்ற வடுப் படு நெற்றி,    

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்   

கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட

நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,        

கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர"


 - மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)


பொருள்: அதாவது வலிமை பொருந்திய அரக்கரை அழித்தவனும்,பொன்னால் அணிந்த மாலையினை உடையவனுமான திருமால் பிறந்தநாள் திருஓணம்.வெட்டுகளை உடைய முகங்களோடும் முரட்டு தோள்களோடும் மறவர் சேரிகளில் ஓருவரோடு ஒருவர் போரிட தயாராகி யானைகளை ஓட்டி விளையாடினர்.அதை ஆர்ப்பரிப்போடு மக்கள் பார்த்தனர் என்றும் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து திரிந்தனர் எனவும் மதுரை காஞ்சி சொல்கிறது.


தமிழர்களின் கொண்டாட்ட திருநாளான திருவோணம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தினை  திருமால் வென்றதே ஆகும்.ஹிந்துக்களின் புனித பண்டிகையான திருவோணத் திருநாளுக்கு வாழ்த்துகள். 


ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்                    மயிலை காபாலீச்சர பதிகம்  ஞானசம்பந்தர் தேவாரம்


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின் றோம் திருவோணத் திருவிழவில்

அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை

பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே.

- பெரியாழ்வார்.

No comments:

Post a Comment