Pages

Tuesday, 20 April 2021

எழுத்து என்றால் என்ன? ஏன் அப்படி பெயர் வந்தது?

 

காலம் : சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன் (ஓர் அந்தி சாயும் மாலை வேளை) .
இடம்: பூமிப்பந்தின் ஒரு மூலையில் அமைந்த குகை.
வேட்டையாடி உண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுமார் இருபது பேர் கொண்ட ஆதிமனிதக் கூட்டத்தில் ஒருவன் தன் கைகளால் கல் ஒன்றினை எடுத்து உற்று நோக்கி உருட்டிக் கொண்டிருந்தான். ' தமது குழு அன்றைய இரவு அந்தக் குகையில் தங்கியிருந்த செய்தியை, தங்களை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த தனது கூட்டத்தாரிடம் தெரிவிக்க வேண்டும்... என்ன செய்வது' - என யோசித்துக் கொண்டிருந்தான்!

தனக்கு முன்புறம் இருந்த பாறை மீது
கையிலிருந்த கல்லின் கூரிய பாகத்தால் மேலிருந்து கீழாக 
இழுக்க, கல்லால் கீறப்பட்ட தடத்தைக் கண்டு அவன் கண்கள் விரிந்தன.
அருகருகே மேலும் கீழுமாக பல கோடுகளை வரைந்தான். இக்கீறல்கள் தனது கூட்டத்தின் கண்களில் நிச்சயம் தென்படும் என்ற நம்பிக்கையுடன் முழங்கையை மடக்கி தலை சாய்த்து ஓய்வெடுக்கத் தொடங்கினான்.

அன்றைக்கு கூரிய கல் கொண்டு இழுத்த குறியானதே இன்றைக்கு எழுத்தென்று உருமாறி நிலைத்துள்ளது.

எழுத்து என்ற சொல் எப்படி அமைந்தது என பார்ப்போமா?

 - என்பது பின்னிடற் குறிப்பு ஆகும்.

  • இ > இள் > இழு = பின்னுக்குக் கொண்டுவா.
  • இழு > இழுகு = பின்னோக்கித் தடவு.
  • இழுப்பு = இழுத்தல்.
  • இழுது = இழுக்கும் மை.
  • இழுது > எழுது = இழுத்து வரைதல்.
  • இலக்கு, இலக்கி = எழுது.
  • இலக்கு = எழுத்து.
  • இலக்கு + இயம் = இலக்கியம் = நூற்றொகுதி.
  • இலக்கு + அணம் = இலக்கணம் = மொழியொழுங்கு.
  • இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்.

இங்ஙனம், எழுத்துக்கள் கோட்டால் அமைவதாலும், முன்னிருந்து பின் (அ) மேலிருந்து கீழ் இழுத்தே இயல்பாக நட்டுக் கோடு வரையப்படுவதாலும், இழுத்தற் கருத்திலிருந்து எழுதுதற் கருத்துத் தோன்றிற்று.

கோடிழுத்தல் என்னும் வழக்கு இயல்பாகக் கோடு கீறும் திசையை உணர்த்தும்.(கீறுதல் என்பது கூரியகருவியால் குத்தி நீளமாக இழுத்தல்) .

  • இழு > இழுகு.
  • இழுகுதல் = இழுத்துத் தடவுதல், தடவுதல்.
  • இழு > இழுத்து > எழுது > எழுத்து = வரைவு, ஓவியம், வரி, இலக்கியம்.
  • எழுதுதல் = இழுத்து வரைதல், வரைதல்.
  • இழு > இழுத்து > எழுது.
  • எழுதுதல் = கோடிழுத்துப் படம் வரைதல், எழுத்தெழுதுதல். (படம் எழுதுதல் என்னும் வழக்கை நோக்குக) .
  • எழுது > எழுத்து.
  • எழுதுதல் = படம் போன்ற அரிவரியெழுதல்.
  • இல் > இலகு > இலக்கு = எழுத்து, சொல், நூல்.
  • இலக்குதல் = இழுத்து வரைதல், வரைதல், எழுதுதல், குறித்தல்.
  • இலக்கு = குறி, குறித்த இடம், இடம், குறிப்பொருள், நோக்கம்.
  • இலக்கு > இலக்கம் = எண்குறி, எண்.
  • இலக்கு > இலக்கணம் = நூன்மொழியொழுங்கு, அதைக் கூறும் நூல்.
  • இழுகு > இலகு > இலக்கு > இலக்கம்.
  • இலக்கு > இலக்கி.
  • இலக்குதல், இலக்கித்தல் = எழுதுதல், வரைதல்.
  • இலக்கு > இலக்கியம் = நூல், நூற்றொகுதி.

"இவ் வுருவு நெஞ்சென்னுங் கிழியின் மேலிருந் திலக்கித்து" (சீவகசிந்தாமணி ).

இழுது (எழுது) > Letter > Literature.
இலக்கு (எழுது) என்னும் சொல் வடமொழியிலும் இந்தியிலும் 'லேக்' என்று இலக்கணப் போலியாய்த் திரியும்.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment