Pages

Thursday, 15 October 2020

சிலப்பதிகாரம் வரலாற்று சிறப்பு

 சிலப்பதிகாரம் வரலாறா? கற்பனையா?

சிலப்பதிகாரம் வரலாறா / கற்பனையா எனப் பார்த்தால் இரண்டும் கலந்த ஒரு கலவை என்பதே பதிலாக அமையும். இதனைத் தெளிவாகச் சில ஒப்பீடுகளுடன் பார்ப்போம். முதலில் வரலாறு என்றால் என்ன என வரையறுப்போம். வரலாறு (History)என்பது ஆய்வு மூலம் பெறப்பட்ட இறந்த காலம் பற்றிய அறிவு என்பதனைக் குறிக்கும். எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முந்தைய காலம் எனவும், எழுத்திலுள்ளவை வரலாற்றுக்குப் பிந்திய காலம் என்றும் கருதப்படுகின்றன. சிலம்பு எழுத்துகளிற்கு பிந்திய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளது. இப்போது சிலம்பின் காலத்தினைக் கணிக்க வேண்டும். சிலப்பதிகாரத்திலே இலங்கையினைச் சேர்ந்த கஜபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டு மரபினைத் தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் குறிக்கப்பட்டுள்ளது {இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது}. கஜபாகு மன்னனின் காலம் பொது ஆண்டு (கி.பி) 2ம் நூற்றாண்டு என மகாவம்சம் மற்றும் இராஜாவளி எனும் இலங்கை நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே சிலம்பின் காலமும் அதே (CE 2nd cent). கஜபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டினை இலங்கைக்குக் கொண்டு வந்ததற்கான சான்றுகளைக் குறிப்பு ஒன்றில் காணலாம்.

கண்ணகி வழிபாட்டினைத் தமிழ் நாட்டில் பெருமளவில் முன்னெடுத்த `சேரன் செங்குட்டுவன்` பற்றிய குறிப்புகளை `பதிற்றுப்பத்து` எனும் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. சேரலாதன் எனும் சேர மன்னனிற்கும் சோழ நாட்டு இளவரசி மணக்கிள்ளிக்கும் பிறந்த மகனே சேரன் செங்குட்டுவன் ஆவான்{'திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள்' : சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டு மடை 1}. இக் கால சேர மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயம் கீழுள்ளது.

அதே போன்று சிலம்பினை எழுதிய இளங்கோ அடிகள் பற்றிய செய்திகளும் தெளிவாகவுண்டு. இவர்கள் எல்லோரும் வரலாற்று மாந்தர்களே என்பதில் ஐயமில்லை. அவ்வாறாயின் ஏன் சிலம்பினை முற்று முழுதாக வரலாறாகக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வி எழலாம். மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோரும் சிலம்பு எழுதப்பட்டபோது வாழ்ந்தவர்கள். ஆனால் சிலம்பின் முதன்மையான கதை மாந்தர்களான கண்ணகி, மாதவி, கவுந்தி அடிகள், கோவலன் போன்றோர் அதற்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களை வரலாற்று மாந்தர்களாகக் கொள்வதற்குத் தேவையான போதுமான சான்றுகளில்லை. உடனே, அவ்வாறாயின் கீழுள்ள கண்ணகி கோட்டம் என்னாயிற்று என்ற கேள்வி எழலாம். {மங்களா தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள கோட்டம்}

மேலுள்ளது கண்ணகிக்கு எனக் கட்டப்பட்ட கோட்டத்திற்கான சான்று என்பதே தவிர கண்ணகி வாழ்ந்த (காலத்திற்கான) சான்று அல்ல. இங்கு எனது வாதம் கண்ணகி வாழ்ந்தமையினை மறுப்பதல்ல. மாறாக, அறிவியல் பார்வையிலான வரலாற்று நோக்கில் அதற்கான சான்றுகளில்லை என்பதேயாகும்.

இளங்கோ அடிகள் சிலம்பினை எழுதியமை எல்லோரும் அறிந்ததே. அவர் கோவலன்- கண்ணகி வாழும் காலத்தில் வாழ்ந்தவரல்ல; அவ்வாறாயின் அவரிற்கு எவ்வாறு அக் கதை தெரியும்? குன்றக் குறவர் சேரன் செங்குட்டுவனிற்கு முதன் முதலில் கண்ணகி கதையினைக் கூறுகின்றார்கள். அப்போது சாத்தனார் எனும் புலவர் (இவரே இளங்கோ அடிகளை இக் காப்பியத்தினைப் பாடும்படி பின்னர் கேட்டுக் கொண்டவர்) தனக்கு அக் கதை தெரியும் எனக் கூறுகின்றார். எனவே இக் கதை அதுவரை எழுத்து வடிவம் பெறவில்லை. எவ்வளவு காலமாக இக் கதை இருக்கின்றது? தெரியவில்லை, ஆனால் நற்றிணையிலேயே சான்று உண்டு (குறிப்பு 2 காண்க).

இவ்வாறு சங்க காலத்திலேயே இருந்த இக் கதையானது, காப்பியமாக எழுதப்படும் வரை வாய் வழியாகவே கடத்தப்பட்டு வந்துள்ளது. எனவே இவ்வாறு வாய் மொழி மூலமாகக் கடத்தப்பட்டு வரும் போது பல கற்பனைகள் கலந்திருக்கும் என்பதும் திண்ணம்.

உங்களிற்கு இப்போது ஒரு கேள்வி எழலாம். கண்ணகி கோவலனுடன் (பழைய)மதுரை நோக்கி நடந்து சென்ற பாதையின் புவியியல் அமைவிடம் சரியாகவுள்ளதே? இது வால்மீகி இராமயணத்திற்கும் பொருந்தும். இங்கு புலவனிற்கு அமைவிடம் சரியாகத் தெரிந்தால் போதும்.

மீண்டும் சொல்கின்றேன்- கண்ணகி என்பது முழுமையான கற்பனையா எனத் தெரியாது. ஆனால் அவரினை ஒரு வரலாற்று மாந்தராகக் கொள்ளக் கூடியளவிற்கான சான்றுகளில்லை. அது போன்றே இளங்கோ அடிகளின் கற்பனையும் கலந்தே காப்பியம் படைக்கப்பட்டுள்ளது. அதே வேளை சேரன் செங்குட்டுவன், கஜபாகு மன்னன் போன்றோர் வரலாற்று மாந்தர்கள் என்பதற்கான சான்றுகளுண்டு. எனவேதான் சிலம்பினை முற்று முழுதான வரலாறு எனவும் கொள்ள முடியாது. அதே போன்று முற்று முழுதான கற்பனை என்றும் கூறமுடியாது. இரண்டும் சேர்ந்த கலவையே சிலப்பதிகாரமாகும்.

குறிப்புகள்:

1. கஜபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டினை இலங்கைக்குக் கொண்டு வந்ததற்கான சான்றுகள்:- Bopearachchi, Osmund (1996). "Seafaring in the Indian Ocean: Archaeological Evidence from Sri Lanka" In: Tradition and Archaeological: Early Maritime Contacts in the Indian Ocean. Eds Himanshu Prabha Ray, Jean-François Salles. Reprint 1998. Manohar, New Delhi, pp. 59–77. ISBN 81-7304-145-8.

Kessler, Oliver (1998). "The Discovery of an Ancient Sea Port at the Silk Road of the Sea. Archaeological Relics of the Godavaya Harbaour". In M. Domroes/H. Roth (eds.):

Sri Lanka, Past and Present. Weikersheim: Margraf Verlag, 12-37. ISBN 3-8236-1289-1.

Ray, Himanshu Prabha. (2003). The Archaeology of Seafaring in Ancient South Asia. Cambridge University Press. Cambridge, U.K. ISBN 0-521-80455-8 (hbk); ISBN 0-521-01109-4 (pbk).

'The Cult of the Goddess Pattini', Gamini Obeysekara, University of Chicago Press 1984

http://Lakadiva.org (http://Lakadiva.org) : THE MAHAVAMSA (THE MAHAVAMSA)

குறிப்பு :2 =

"*எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் *

*குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,*

*ஏதிலாளன் கவலை கவற்ற,*

*ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்*

*கேட்டோர் அனையராயினும்,*

*வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே*". (மருதன் இளநாகனார் நற்றிணை 216).



இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு.  இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


No comments:

Post a Comment