Pages

Monday, 12 October 2020

திருக்குறளின் காலம் என்ன ??


திருக்குறளின் காலம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. சிலர் (வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள்) குறளின் காலத்தினை மிகவும் பின்தள்ளி பொ.ஆ 5ம் (கிபி 5ம்) நூற்றாண்டு வரைப் பின்தள்ளுவார்கள். வேறு சிலர் மிகவும் முன்தள்ளி பொ.ஆ.மு (கிமு) 8ம் நூற்றாண்டுவரைக் கொண்டு போவார்கள். இவற்றிக்கிடேயே பல்வேறு அறிஞர்களினது கருத்துக்களை உள் வாங்கி எனது கருத்தினைப் பதிவு செய்கின்றேன்.

முதலில் ஆகக் கூடியதான பிந்திய காலத்தினை வரைவு செய்வோம். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் திருக்குறள் கையாளப்பட்டுள்ளது. அதாவது

"பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்
" : (குறள் 319)

எனும் குறளானது, சிலப்பதிகாரத்தில் பின்வருமாறு கையாளப்பட்டுள்ளது.

"முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண்
" : கண்ணகி கூற்று

அதே போன்று குறள் 55 (`தெய்வந் தொழாஅள் …`) ஆனதும் சிலம்பிலே பின்வருமாறு இடம்பெறுகின்றது.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்"

மேலே சிலம்பில் `பொய்யில் புலவன்எனக் குறிக்கப்படுவது வள்ளுவனையே என்பதும் அறிஞர் கருத்து. சிலப்பதிகாரத்திலே திருக்குறளானது மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால், குறளானது சிலம்பிற்கு முந்தியது என்பது தெளிவாகின்றது. இப்போது சிலம்பின் காலத்தினைக் கணிக்க வேண்டும். சிலப்பதிகாரத்திலே இலங்கையினைச் சேர்ந்த கஜபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டு மரபினைத் தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் குறிக்கப்பட்டுள்ளது {இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது}. கஜபாகு மன்னனின் காலம் பொது ஆண்டு (கி.பி) 2ம் நூற்றாண்டு என மகாவம்சம் மற்றும் இராஜாவளி எனும் இலங்கை நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே சிலம்பின் காலமும் அதே (CE 2nd cent). எனவே திருக்குறளின் காலமானது பொது ஆண்டு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகின்றது.

இப்போது ஆகக் கூடிய முந்திய காலத்தினை வரையறுப்போம். திருவள்ளுவர் தொல்காப்பியத்தினை அடியொற்றியே திருக்குறளினை அமைத்துள்ளார். எடுத்துக்காட்டாக

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"
 : {குறள்28}

என்ற குறளானது பின்வரும் தொல்காப்பிய வரிகளை அடியொற்றியே படைக்கப்பட்டது.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
"

இவ்வாறு மேலும் சில குறள்கள் (குறள் 1137, குறள் 410) அவ்வாறு தொல்காப்பியத்தை அடியொற்றியவையே. எனவே தொல்காப்பியத்திற்கு பிற்பட்டதே திருக்குறளின் காலம் அமையும். தொல்காப்பிய காலம் தொடர்பாகவும் சில வேறுபாடுகள் உண்டு. செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை பொ.ஆ.மு (கி.மு) 711 என்று பொருத்தியது. வேறு சிலர் பொ.ஆ.மு (கிமு) 5ம் நூற்றாண்டு என்கின்றார்கள். இன்னமும் துல்லியமாகப் பார்ப்போம்.

குறள் 256 ஆனது (தினற்பொருட்டால் கொல்லாது ....) புத்த மதத்தின் தாக்கத்திற்கு உட்பட்டது எனவும், மலர்மிசை யேகினான்' ('பூமேல் நடந்தான்'); 'பொறிவாயி லைந் தவித்தான்' முதலிய அருகன் பெயர்கள், கடவுட் பெயர்களாகத் திருக்குறள் முதலதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளமையால் , சமண மதச் செல்வாக்கிற்கு உட்பட்டது எனவும் அறிஞர்கள் கருதுகின்றார்கள். புத்த,சமண மதங்கள் தமிழகம் வந்தது பொ.ஆ.மு (கிமு) 2ம் அல்லது 3ம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருக்குறளின் காலத்தினை பொ.ஆ.மு (கி.மு) 2ம் நூற்றாண்டிற்கு முன் கொண்டு செல்ல முடியாது.

இப்போது திருக்குறளின் காலமானது BCE2nd cent - CE 2nd cent ( கிமு 2ம் - கிபி 2ம்) இடையில் வந்துவிட்டது. இதற்கு இடைப்பட்ட ஏதோ ஒரு காலத்தினைச் சார்ந்ததே திருக்குறள், ஆனால் இடையில் எந்தாண்டு எனக் குறிப்பிட்டுக் கூற முடியாது. மறைமலையடிகள் தலைமையில் கூடிய பல தமிழறிஞர்கள் திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31 (BCE 31)என்று அறிவித்தார்கள் (சென்னை பச்சையப்பன் கல்லூரி மாநாட்டு முடிவு). அதனை அடிப்படையாகக் கொண்டதே திருவள்ளுவர் ஆண்டுக் கணிப்பீடு. இதுவே இப்போதைக்கு ஏற்கப்பட்ட பொது வழக்கு. எனவே திருவள்ளுவரின் காலம் பொது ஆண்டிற்கு முந்திய (கி.மு) 31 ம் ஆண்டேயாகும்.

No comments:

Post a Comment