Pages

Wednesday, 2 December 2020

அணுகுண்டு மனித டீஎன்ஏ-வில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும்.

 

அணுக்குண்டால் வரும் பாதிப்புக்கள் என்ன?

மூன்றுவிதமான தாக்கங்களை அணுக்குண்டு வெடிப்புத் தருகிறது. முதலாவது அமுக்கத்தகைப்பு. மனிதர்கள், கட்டிடங்கள் அனைத்துமே நொருங்கலுக்கு உள்ளாகின்றன. இது ஒரு நிமிடத்துக்குள் வரும். இரண்டாவது வெம்மைத் தாக்கம் தாவரங்கள் உட்பட்ட அனைத்து உயிரிகளிலும் கட்டிட அமைப்புக்களிலும் வெம்மையால் வரும் தீக்களும் தீக்காயங்களும் இந்த வகையின. ஹிரோஷிமாவில் படிக்கட்டொன்றில் அமர்ந்திருந்த மனிதன் ஒருவன் ஆவியான போது அவனின் சாயல் படிக்கட்டுகளிற் பதிந்திருந்தாகக் கூட ஒரு அறிக்கையுண்டு. மூன்றாவது வகைத்தாக்கம் வளீமண்டலத்துள் உள்ளெடுக்கப்பட்டு எங்கும் பரந்துபடும் நெடுங்காலக் காரிணியான கதிர்வீச்சுக்காரிணிகள். இங்கே இந்த எழுத்தில் மூன்றாவது வகை மட்டும், (அதுவும் அவற்றை ஒத்த ஏனைய கதிர்வீச்சுக் காரிணிகளுடன் சேர்த்தே) ஆயப்படும். அவை தரும் பல தரப்பட்ட விளைவுகளில் DNA மூலக்கூறுகள் மீதான தாக்கங்களும் ஆயப்படும். இவ்வாய்வில் இந்த DNA மூலக்கூறுகள் மீதான தாக்கங்கள் ஒரு உயிரினத்தின் வாழ்வுக்காலத்தில் முடிவுறுபவை, பாரம்பரியத்தூடு கடத்தப்படுபவை என் இரண்டாகப் பகுக்கப்படும்

கதிரியக்கம் மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?

கதிர்வீச்சு என்பது பல மூலங்களிலிருந்து வரலாம். அணுக்குண்டொன்றிலிருந்து வரும் கதிர்வீச்சு, விபத்தொன்று காரணமாகத் தொழிலகம் ஒன்றிலிருந்து வரும் கதிர்வீச்சு, ஒரு X-RAY இயந்திரத்திலிருந்து வரும் கதிர்வீச்சு, உடம்பில் ஒரு ஊசிமூலம் ஏற்றப்பட்ட ஐசொடோப்பிலிருந்து வரும் கதிர்வீச்சு இவை எல்லாமே கதிர்வீச்சுக்கள் தான். இவை எல்லாமே எமது உடலை ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பவை தான். எமது இழைமங்கள் (TISSUES) மீதான இவை ஒவ்வொன்றினதும் தாக்கம் சிக்கலானது. உடன்மீதான கதிர்வீச்சுத்தாக்கம் எப்போதுமே “இது தான் அது” என்று பிரித்துக் கூறும்படியாக இருக்காது.

இங்கே நாம் கதிர்வீச்சுக்களைப் பற்றி நோக்கும் போது தலைகீழாகப் பார்க்கப் பழக்கப்பட்டு விட்டோம். அதனால் எமது விவரிப்பு ஒருவரைக் கதிர்வீச்சுத் தாக்கிவிட்டது. அவருடைய என்பு மச்சை தாக்கப்பட்டுவிட்டது. அதனால் வெள்ளணுக்கள் விகாரமடைந்து விட்டன என்று தான் அமைகிறது. இது சரியா என்பது கேள்வி?. ஊஹூம்., கதிர்வீச்சென்பதனை எமது தாக்கங்களைப் பொறுத்தவரை ஒரு அயனாக்கக் கதிர்வீச்சென்று தான் விவரிக்க வேண்டும். அயனாக்கக் கதிர்வீச்சுத் தாக்குவது ஒன்றோ/பலவோ அணுக்களைத்தான். அணுக்கள் அயன்களாகின்றன. அந்த அயன்கள் தனித்தியங்காவென்பதனால் எமது உடலிலுள்ள அங்கம் ஏதாவது ஒன்றோ பலவோவிலுள்ள முக்கியமான/முக்கியமற்ற கலங்களிலுள்ள முக்கியமான மற்றும் முக்கியமற்ற சேர்மங்களிலுள்ள வேதிப்பிணைப்புக்களைத் தாக்கி அழிக்கிறது. சரி, எங்கே இப்போது நாம் எம்முடைய நண்பருக்குப் புற்றுநோய் வந்த கதையை இந்த மாதிரி ஒழுங்கான முறையில் விவரிக்க முடியுமா? இல்லை, இப்போது பணி முன்னரை விடக் கடினமாகி விட்டது, இல்லையா? சரி, பார்ப்போம்

வேதிப்பிணைப்புக்களின் மீது அயனாக்கக் கதிர்வீச்சின் விளைவென்ன?

வாழும் இழைமங்களின் (LIVING TISSUE) தொழிர்பாடுகள் யாவும் மூலக்கூறுகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு அணுக்கள் வேதிப்பிணைப்புக்களால் பிணைக்கப்படும்போது உருவாபவை தான் இந்த மூலக்கூறுகள். இவற்றிற் சில மிக நீண்டவை. இம்மூலக்கூறுகள் சரியான வேதியமைப்பிலும் உருவமைப்பிலும் (COMPOSITION AND THEIR STRUCTURE (SHAPE)) இல்லாவிட்டாற் தொழிற்படமுடியாதவை இவற்றின் வேதிப்பிணைப்பில் கை வைத்தால் அவற்றின் வேதியமைப்பும் கட்டமைப்பும் தாக்குண்ணும்.

அயனாக்கக் கதிர்வீச்சுக்கு இதனைச் சாதிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு உதாரண வகையில் சாதாரண அயனாக்கம் ஒன்று இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையே யான் பிணைப்பை உடைக்கத் தேவையான சக்தியைப் போல் ஆறு அல்லது ஏழு மடங்கு சக்தியை வெளிவிடுகிறது. விளைவென்னவெனில் ஒரு கராட்டி மாஸ்டர் செங்கட்டி உடைப்பது போலத்தான் இருக்கும். ஒரு நீண்ட மூலக்கூற்றின் முக்கியமான ஒரு இணபுள்ளியில் முழுப்பலமும் கட்டவிழ்க்கப்படுகிறது. இதே அளவு சக்தி அயனாக்கமில்லாத பரந்துபட்ட ஒரு அடியாக விழுந்தால் அங்கே ஒன்றும் ஆகாது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள. இந்தப்பிணைப்பை உடைத்த முழு அயனாக்க ஆற்றலையும் அளந்து பார்த்தால் அது நீங்கள் ஒரு தடவை வாய் வைத்து உறிஞ்சிய காப்பியின் சூடளவு கூடக் கிடையாது. வித்தியாசமென்ன? காப்பியின் சூடு எல்லா மூலக்கூறுகளிலும் பரந்து பட்டிருக்கிறது.. வாயெங்கும் பரந்தே உணரப்படுகிறது. அயனாக்க ஆற்றால் ஒரு மூலக்கூற்றின் ஒரு பிணைப்பின் ஒரு புள்ளியிற் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது

DNA என்றால் என்ன?

உடலொன்றின் அனைத்துக் கட்டமைப்புக்களினதும் ஆதாரப் படத்தினைத் (BLUEPRINT) தன்னகத்தே அடக்கியுள்ள ஒரு மூலக்கூறு தான் DNA ஆகும் இந்த ஆதாரப்படம் சிறு மூலக்கூறுகளின் ஒரு தொடர்ச்சியான பிணைப்பாகவும் ஒரு சங்கிலியாகவும் உடலின் ஒவ்வொரு கலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே வேறு மூலக்கூற்றுத் தொடர்கள் புரதங்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும். DNA என்பது இத்தகையதொரு மிக நீண்ட சங்கிலியாகும். இந்தப் பின்னலில் தொடரொழுங்கு என்று ஒன்றுண்டு மிக நீண்ட தந்திச்செய்தி ஒன்றை நீங்கள் பார்த்திருந்தால் “ஓஹோ, இந்தத் தந்தி மாதிரித்தான் DNA உம் இருக்கும் என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். இப்படி DNA ஒன்றை நாம் விரித்துப்பார்த்தால் அதன் நீளம் இரண்டு மீட்டர்களாகும். இந்த DNAக்கள் நிறமூர்த்தங்கள் என்ற பெயரில் கலங்களின் கருவினுள் அடக்கப்பட்டிருக்கும். மனிதரில் ஒரு கலத்தினுள் 23 சோடிகள் நிறமூர்த்தங்கள் இருக்கும். ஆனால் இவ்வளவையும் அடக்கியிருக்கும் கலக்கரு ஒன்றின் விட்டம் வெறும் 10 மைக்கிறோமீட்டர்கள் (0.00001 மீட்டர்) தான். ஒவ்வொரு தடவையும் ஒரு புது மூலக்கூறு உருவாக்கப்படும்போது இந்த DNA இன் ஒரு சிறு துண்டமே வாசிக்கப்படவேண்டி வருகிறது. கலமொன்று புதிதாக ஒரு தொழிலை நிறைவேற்ற வேண்டி வரும்போது அது தன்னுடைய DNA க்களின் வெவ்வேறு பாகங்களையும் தொடர்ந்தே வாசிக்கின்றது. இந்த வாசிப்புக்களில் ஒரு குழப்பம் வருமாக இருந்தால் எடுத்த வேலை பெரும்பாலும் அனர்த்தத்தில் முடியும். ஆனால் நாம் இப்போதைக்கு அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வராமல் இருப்போம்.

DNA மீதான அயனாக்கக் கதிர்வீச்சின் விளைவென்ன?

அணுக்கரு ஒன்றின் கருவைச் சூழ்ந்துள்ள இலத்திரன்களில் ஒன்றோ பலவோ தன்னுடைய பாதையிலிருந்து அகற்றப்படுவதனால் அந்த அணுவோ சம்பந்தப்பட்ட மூலகூறோ ஏற்றம் பெற்று அயனாகின்றது. இவ்வாறு வெளிவந்த இலத்திரன் DNA இலிருந்தோ அன்றில் அருகிலுள்ள இன்னொரு மூலக்கூறில் இருந்தோ வெளிவந்து DNA ஐத் தாக்கிக் குழப்புமாயின் அதனை நேரடித்தாக்கு என்கிறோம். முதல் அயனாக்கம் 0.000000000000001 வினாடிகளில் இடம்பெற்று முடிந்து விடுகிறது. ஆனாலும் இந்நாளைய கணிப்புக்களின் படி 2/3 பங்குச் சேதமும் இடம்பெறுவது மறைமுகத் தாக்குதல்கள் மூலமேயாகும் இத்தகைய தாக்குதல் ஒன்றின்போது விடுபட்ட இலத்திரனானது கலத்தின் 70% கட்டமைப்பான நீர் மூலக்கூறுகளில் ஒன்றைத் தாக்கும். இவ்விதம் அயனாக்கம் பெற்ற நீர் மூலக்கூறானது FREE RADICAL என்று சொல்லப்படும் சுதந்திரமான அயன் ஒன்றைத் தருகின்றது. இந்த FREE RADICAL விரைவாக இலத்திரன் சமநிலையைத் தேடுவதொன்று. ஆரம்ப அயனாக்கத்தைவிடவும் FREE RADICAL உலவும் நேரம் 10,000,000,000 மடங்கு அதிகமானது என்கிறார்கள். இருப்பினும் அது 0.00001 விநாடி மட்டும் தான்! இங்கே கூறப்படுவதென்னவெனில் ஒரு DNA மூலக்கூற்றை உடைப்பதற்கு FREE RADICAL களுக்குத் தரப்படும் நேரம் மிக அதிகம் என்பதேயாம்! அதே சமயம் சம்பந்தப்பட்ட கலங்களுக்கு வேறும் சேர்மங்களைத் தாக்கத்துக்குள் அறிமுகப்படுத்தி இந்த FREE RADICAL ஆனது DNA க்குத் தரும் தாக்கச் சந்தர்ப்பத்தை அகற்றி விடுவதற்கான நேரம் கிடைக்கின்றது என்பதுவும் உண்மை.

கதிர் வீச்சினால் வரும் நியூட்ரோன்கள் தொழிற்படுவது சற்று மாறுபட்ட விதத்திலாகும். இவற்றில் வேகமான நியூட்ரோன்கள், மெதுவாகப் பயணிக்கும் நியூட்ரோங்கள் என இருவகை இவற்றில் உண்டு வேகமாகப் பயணிப்பவை பொதுவாக இலத்திரன்களை விலக்கியே பயணிக்கும். அவை அணுக்கருவைத் தாக்கி அல்பாத் துகள்கள், புரொட்டோன்கள் அல்லது இவற்றை விடவும் பெரிய துண்டங்களயும் கூடத் தரக்கூடும். இவ்வகையான தாக்கங்கள் பெரும்பாலும் கார்பன் அல்லது ஆக்சிஜன் அணுக்களுடனேயே இடம்பெறுகின்றன. இத்தகைத் தாக்கமொன்றில் வெளிவரும் துகள்கள் அருகிலுள்ள மற்றை எலெக்ட்ரோன்களை அயனாக்கம் செய்துவிடுகின்றன.

மெதுவாகப் பயணிப்பவை அணுக்கருவொன்றை உடைக்கும் வல்லமை அற்றவை. அவை அணுக்கருவிற் தெறித்தோடுகின்றன. அத்தருணம் நியூட்ரோன் இன்னும் மந்தமாகிறது. அணுக்கரு உந்தம்பெற்று வேறும் அணுக்கருக்களுடன் மோதுகின்றது. இப்படியான மோதுகை பெரும்பாலும் இடம்பெறுவது ஹைட்ரஜன் அணுக்கருக்களுடன் தான். ஹைட்ரஜன் அணூக்கரு ஒரு புரொட்டோன் என்பதனால் அது மேலும் இவ்வாறான அயனாக்கங்களைத் தொடர்கிறது

உயிர்வாழும் கலமொன்றில் அயனாக்கக் கதிர்வீச்சின் விளைவென்ன?

இந்த மோதல்களும் அயனாக்கங்களும் விரைவாகவே, ஒரு விநாடிக்குள்ளாகவே இடம்பெறுகின்றன. இவற்றின் உயிரியற் தாக்கங்கள் தெளிவாக வேண்டுமென்றால், அதற்குச் சிலகாலம் வேண்டும். தாக்கவிளைவு ஒரு கலத்தை அழித்துவிடப் போதிய தென்றால் அது சில மணித்தியாலங்களிலோ. சில நாட்களிலோ தெரியவரும். கலத்தின் மரணம் இருவகைகளில் வந்துறுகிறது. முதல் வகையில் உள்ளக அயனாக்கம் காரணமாக கலம் வேலை செய்வதை நிறுத்துகிறது. 100 GRAY (10,000 RADS) கதிர்வீச்சு அலகுகள் பெறப்பட்ட்டால் இந்த மாதிரி நிலை வருகிறது. இரண்டாவது வகைக் கலமரணத்தில் கலப்பெருக்க நிறுத்தம் (MITOTIC INHIBITION) உண்டாகிறது. தாக்குண்ட கலங்களில் 50% ஆனவைக்கு இது நடைபெற 2 GRAY (200 RADS) கதிர்வீச்சு அலகுகள் போதுமானது. இதனால் இந்த அளவை நாம் சாரசரி மரண அபாயக் கதிர்வீச்சு (MEAN LETHAL DOSE) என்கிறோம். கதிர்வீச்சின் போது கலங்களுக்குள் உள்ள அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் என்ன நடைபெறுகின்ற தென்பதனை முழுமையாக விளக்கக்கூடிய மாதிரிகள் (MODELS) ஏதும் இன்று வரை எம்மிடம் இல்லை. எமது உடலிலுள்ள முக்கியமான கலங்களிற் கணிசமான அளவுக்கு இப்படி ஒரு இறப்பு நேர்ந்தால் எமது உடலும் இறக்க நேரும் என்பது மட்டும் தெளிவு. உதாரணமாக இரத்தக் கலங்கள் மற்றும் குடற் சுவர்களிலுள்ள கலங்கள் வெகு வேகமாக உற்பத்தி செய்யப்படுபவை; வெகுவேகமாக மாற்றீடு செய்யப்படுபவை. இங்கே MITOTIC INHIBITION நிகழ்ந்தால் மனித இறப்பு நிச்சயம் என்பது தெளிவு. அதி உயர் டோஸ் (100 GRAY (10,000 RAD) 24 – 48 மணித்டியாலங்களில் மனிதருக்கு இறப்பை வரவழைக்கும். முழு உடல் டோஸ் (FULL BODY EXPOSURE) (2.5 – 5.0 GRAY (250 TO 500 RAD) சிலவாரங்களுக்குள் இறப்பை நிச்சயப்படுத்தும். இதே டோஸ் முழு உடலுக்குமாக இல்லாமல் சிற்சில இடங்களில் மட்டும் தானெனில் இறப்பு ஏற்படாது. ஆனால் இந்த நிலைவரத்தை DETERMINISTIC என்கிறோம். உதாரணமாக பீட்டா எரிகாயம் DETERMINISTIC வகை சார்ந்த ஒன்று.

அயனாக்கக் கதிர்வீச்சின் நெடுங்காலத் தாக்கங்கள் என்ன?

கத்ரிவீச்சின் விளைவு கல மரணமாக இருக்காது ஆனால் DNA கட்டுமானப்படத்தில் (DNA BLUEPRINT) தவறுகள் உண்டாகும் வகையில் DNA CODE ஐ மாற்றிவிடுகிறது. இதனை நாம் கலப்பிறழ்வு (CELL MUTATION) என்கிறோம். ஆனால் கலத்தில் வாசிக்கப்படும் போது தரப்படும் INTERPREATIONAL ERRORS இல் தான் கலப்பிறழ்வின் தாக்கம் தங்கி இருக்கிறது. இவை 100% சந்தர்ப்பம் கிடைக்காதவை என்பதனால் NONDETERMINISTIC (STOCHASTIC) என்கிறோம். ஆனால் அவை நிகழும்போது இருவிதமான விளைவுகள் உண்டாகின்றன உடலில் உள்ல கலங்களை நாம் இருவகையாகப் பகுத்தறிகிறோம். முதல்வகைக்களை உடற்கலங்கள் (SOMATIC CELLS) என்கிறோம். இவற்றில் வரும் கலப்பிறழ்வு புற்றுநோயைத் தருகிறது. இரண்டாவது வகைக்கலங்களை முளைவிடுகலங்கள் (EGGS AND SPERMS) என்கிறோம். இவற்றில் உண்டாகும் மாற்றங்கள் பாரம்பரியத்துக்குட் திணிக்கப் படுகின்றன. அதன் விளைவாக இக்கலங்கள் இனப்பெருக்கம் செய்ய மறுக்கலாம் அல்லது பிறழ்வான அங்கங்களுடைய மகவொன்று பெறப்படலாம்.

அயனாக்கக் கதிர்வீச்சு புற்று நோயைத் தருவதெங்ஙனம்?

கதிர்வீச்சு டோஸ் கலங்களைக்கொல்லப்போதாது ஆனால் DNA BLUEPRINT ஐ மாற்றப்போதுமெனில் அதன் இறுதிவிளைவு கலப்பிரிவின் மீதான கட்டுப்பாட்டை உடல் இழப்பதாக இருக்கும். அதன் விளைவு பல்லாண்டுகளுக்குப் புலனாகாமல் இருக்கலாம். ஆனால் இறுதி விளைவு புற்று நோய் தான்! கதிர்வீச்சால் ஏற்பட்ட புற்று நோய்களுக்கும் ஏனைய காரணங்களால் ஏற்பட்ட புற்று நோய்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. இதற்கு ஒரு காரணம் கதிர்வீச்சால் ஏற்படும் புற்றுநோயை எவ்வாறு வகைப்படுத்தி அறிவது என்பது பற்றிய எமது அறிவு இன்னமும் வளரவில்லை என்பதாகவும் இருக்கலாம். இங்கே இருக்கும் சிக்கலென்னவெனில் சில கலங்கள் கதிர்வீச்சினால் தாக்குண்ணுவது அதிகமாயுள்ளமையே. எடுத்துக்காட்டு வகையில் என்பு மச்சைக்கலங்கள் தோற்கலங்களை விட அதிகமாகவே கதிர்வீச்சுத் தாக்குகளை உணர்கின்றன. அதனால் அயனாக்க் கதிர்வீச்சுக் காரணாமாக இரத்தசம்பந்தமான புற்றுநோய்கள் தோல் சம்பந்தமான புற்றுநோய்களைவிடவும் அதிகமாகவே உண்டாகின்றன என்பது ஒரு ஐதிகம் மட்டும் தான்!.

வெவ்வேறான அங்கங்களில் நிகழும் பாதிப்புக்களின் SENSITIVITY பற்றி இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவதென்றால் பெரிய டோஸ் அளவுகளிற் தாக்குண்ட ஒரு பெருந்தொகை மக்கள் எமக்குத் தேவைப்படுவர். ஒரு அணுக்குண்டுத் தாக்குதலின் பிண்னணி அல்லது அணு உலை விபத்தின் பின்னணி இதற்கு உகந்தாக இருக்கலாம். ஆனால் இவை எப்போதும் நடைபெறுவதில்லை. பொதுவாக இவை நடைபெறுவதேயில்லை என்றே சொல்லிவிடலாம். புற்று நோய் என்பது ஒரு தனி மனிதரின் வாழ்வில் ஏற்படுவதற்குப் பல ஆண்டுகள் பீடிக்கலாம். இப்படியான் ஒரு ஆய்வை வெற்றிரமாக முடித்து வைப்பதற்கு ஒரு அபத்தம் நிகழ்ந்த நாளிலிருந்து 70-75 ஆண்டுகள் வரை தேவைப்படலாம். அதுவரை காலம் பொறுமையான, தவறுகளற்ற புள்ளிவிவரச் சேகரிப்போடு இணந்த வைத்திய சேவை தேவைப்படும். ஒரு எடுத்துக்காட்டாகக் கூறுவதெனில் ஜப்பானிய அணுக்குண்டுத் தாக்குதல் பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவடையாத தொடர்கதையாகும். யுரேனியம் அகழ்வு போன்ற கதிரியக்கம் சம்பந்தப்பட்ட தொழிற்துறைகளிற் செயற்படுவோர் பற்றிய மருத்டுவார் ஆரய்ச்சி ஒன்றும் தொடர் நிலையில் உள்ளது.

அயனாக்கக் கதிர்வீச்சு எவ்வாறு பரிணாமப்பிறழ்வுகளை (MUTATIONS) தருகிறது?

எந்தக்கலத்தினுள்ளும் DNA மாற்றங்களை அயனாக்கக் கதிர்வீச்சு உருவாக்க வல்லது. உடற்கலப் பிறழ்வுகள் பாரம்பரியத்திற் காவப்படக்கூடியவையல்ல. (SOMATIC CELL MUTATIONS ARE NONINHERITABLE). புற்றுநோய் ஒன்றுமட்டுமே உடற்கலச்சேதங்களால் வரும் ஒரேயொரு நெடுங்கால விளைவு எனலாம்.. ஆனால் முளைக்கலங்களில் ((SPERM AND OVA) ஏற்படும் கலச்சேதங்கள் எதிர்காலச் சந்ததிக்கு மாற்றப்படக் கூடியவை என்பதானல் இந்தச் சேதங்களை நாம் பாரம்பரியமாகக் கடத்தப்படக் கூடிய கதிர்வீச்சு விளைவுகள் என்கிறோம். சில சமயங்களில் இந்த பாரம்பரியம் சார் தாக்குதல்கள் கூடப் பல தலைமுறைகளுக்குட் தெளிவாவதில்லை. இந்த உண்மை 1920 களிற் பழ ஈக்களில் தெளிவாக நிறுவப்பட்டது.

திரைப்படங்களிலும் SC-FI கதைகளிலும் வருவது போல் கதிர்வீச்சானது பைசாச உருவங்களைப் படைப்பதில்லை. மாறாக இயர்கையில் நடைபெறும் சில மாற்றங்களை அதிவிரைவாகவும் அதிக அளவிலும் கொண்டு வருகிறது.

புற்றுநோயைப் போலவே தான் கதை இங்கேயும்! இயற்கையாக நடைபெறும் பரிணாமப் பிறழ்வுகளையும் கதிர்வீச்சால் இடம்பெற்ற பரிணாமப் பிறழ்வுகளையும் பகுத்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். இன்றைய நாள் வரை மனிதருக்கு உண்டாகும் நோய் வகைகளில் 1300 வரையில் பரிணாமப் பிறழ்வுகளால் உண்டானவை என அறியப்பட்டுள்ளது.


இந்த பதிவுகளை வழங்கிய திரு.தேவேந்திரன் காத்தா அவர்களுக்கு மிக்க நன்றி !!!!

பொதுவாகப் பிறழ்வுகள் ஒரு உயிரினத்தால் ஏற்றுக் கொள்ளப் படுமிடத்து அவை நன்மை தருபவை. எடுத்துக்காட்டாக நீலக்கண்களும் வெண் தலைமயிரும் கூட (BLONDE HAIR AND BLUE EYES) ஒரு 10,000 ஆண்டுகளுக்குட்பட்ட பரிணாமப்பிறழ்வுகள் தான்! அந்த வகையிற் பார்க்கும்போது பரிணாமப்பிறழ்வுகள் பரிணாமத்தின் இயக்கும் எஞ்சின்கள். ஆனாலும் பரிணாமப்பிறழ்வுகள் என்று வரும்போது அணுக் குண்டுகளாலும் அயனாக்கக் கதிர்வீச்சாலும் நிகழும் பரிணாமப் பிறழ்வுகள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகத் தான் இருக்கும்.

பொதுவாக இயற்கையாக ஏற்படும் பிறழ்வுகளில் 1/10,000 என்கிற விகிதம் (அல்லது 1/1,000,000 என்கிற மூலக்கூற்றுப்பிறழ்வு) நமபகரமானதாக உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து அணுக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததிகளில் இவ்வித கதிர்வீச்சுத் தாக்குதல் விளைவுகள் ஆயப்பட்டு வருகின்றன. இதுவரை காலம் அப்ப்டியான அணுக்குண்டுத் தாக்குதல் விளைவொன்றை அரிந்துகொள்ள முடியவில்லை .இதற்கு ஒரு அறிவியற் காரணமுமுண்டு. பழ ஈக்களின் நிறமூர்த்தங்கள் அளவில் மிகப் பெரியவை. எனவே அயனாக்கக் கதிர்வீச்சால் அதி விரைவில் பாதிக்கப்படக் கூடியவை, ஆனால் மனிதரின் நிறமூர்த்தங்கள் அத்துணைப் பெரியவையாகப் படவில்லை.



No comments:

Post a Comment