Pages

Tuesday, 29 December 2020

எண்ணெய், தைலம் - இரண்டுக்கும் என்ன வேறுபாடு


எள் - என்ற தானியம் தந்த சொல் 'எண்ணெய்'.

எள்ளின் மறுபெயரான 'திலம்' தந்த சொல்
தைலம்.

மாட்டின் பாலில் இருந்து பெறப்பட்ட நெய்தான் நம் முன்னோர்கள் முதலில் கண்டறிந்து பயன்படுத்திய நெய். மிருதுவான, கொழகொழப்பான திரவங்களை அதன் நெகிழும் பண்பையொட்டி 'நெய்' எனப் பெயரிட்டழைத்தனர். வெண்மையாக இருக்கின்ற நெய், வெண்ணெய் ஆனது .

தாவர எண்ணெய் கண்டுபிடிக்கப்படாத -
அன்றைய காலங்களில் சமையல், மருத்துவம் மட்டுமல்லாது அனைத்து உபயோகத்திற்கும் பசுவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பிற்காலத்தில் தாவர வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் நுட்பத்தின் மூலம் எள்ளிலிருந்தும் நெய் எடுக்கப்ப்பட்டது. இவ்வாறு எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யே காலப்போக்கில் எண்ணெய் என்ற பெயர் பெற்றது.

எள் + நெய் = எண்ணெய்.

எண்ணெய் = எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் கொழுப்பைக் குறித்த எண்ணெய் எனும் சொல், பிற்காலத்தில் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.

துக்கடா : சங்க காலம் தொட்டே எள் பற்றிய குறிப்புகள் தமிழில் பலவுண்டு. எள் பற்றிய வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பார்க்கையில் தமிழர்களின் வாழ்வில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளானது இரண்டறக்கலந்த ஒரு பண்டம் என்பதும் புலனாகிறது.

* எள்ளல் = கேலி செய்தல், மட்டம் தட்டுதல்.
* எள்ளி நகையாடுதல் = நகைப்புரியவனாக்குதல், அவமானப்படுத்தல்.
* எள் அளவும் ஐயம் இல்லை = கொஞ்சம் கூட ஐயமில்லை.
* ஏழைக்கேற்ற எள்ளுருண்டை= மிகவும் மலிவான பொருள்
* கூட்டத்தில் எள் போட இடம் இல்லை = நெருக்கமான கூட்டம், கொஞ்சமும் இடமில்லை.
அவ்வளவு கூட்டம்!
* எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும் = எள் நசுக்கப்பட்டு எண்ணெய் வெளியேறும்.

No comments:

Post a Comment