Pages

Thursday, 17 December 2020

நெடுநல்வாடை என்றால் என்ன பொருள்


" நெடுநல்வாடை" என்பது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. இதை இயற்றியவர் மதுரை கணக்காயர் மகனார் நக்கீரர் என்பவர் ஆவார். பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் ( அதாவது ஹீரோவாக) கொண்டு எழுதப்பட்ட நூல். இந்தத் தலைப்பின் பொருளைப் பார்ப்போம்

நெடு = நீண்ட

நல் = நல்ல

வாடை = பனிக்காலம்.

ஆகவே "நெடுநல்வாடை" என்றால் "நீண்ட நல்ல பனிக்காலம் " என்று பொருள்.

இந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் பனிக்காலத்தில் நடந்தன. அதனால் ' வாடை' என்ற சொல் தலைப்பில் இடம் பெற்றது.

போர் புரியச் சென்ற தலைவனை(நெடுஞ்செழியனை) எதிர்பார்த்த தலைவி தனிமைத் துயரில் தவிக்கிறாள். அவளுக்கு வாடைக்காலம்( பனிக்காலம் ) நெடியதாக ( நீண்டதாக ) தெரிந்தது. தலைவன் போரில் வெற்றி பெற்றதால், அந்த வாடைக்காலம் அவனுக்கு நல்வாடையாக (நல்ல வாடையாக) அமைந்தது. இவற்றை இணைத்து நக்கீரனார் இந்த இலக்கியத்திற்கு " நெடுநல்வாடை" என்று பெயரிட்டார்.

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது எங்கள் தமிழாசிரியர் நெடுநல்வாடையைப்பற்றி குறிப்பிட்டார். அவர் கரும்பலகையில் நெடுநல்வாடை என்று எழுதினார். என்னை அழைத்து அதை ஆங்கில எழுத்துகளில் எழுதச்சொன்னார். நான் கரும்பலகையில் Nedunalvadai என்று எழுதினேன். வகுப்பிலிருந்த சகமாணவன் இராஜேந்திரனிடம் ஆசிரியர் நான் ஆங்கிலத்தில் எழுதியதைப் படிக்கச் சொன்னார். அவன் அதை " நெடுநாள் வடை " என்று படித்தான். சில மாணவர்கள் ஆசிரியரிடம் நெடுநாள் வடை என்றால் என்ன என்று கேட்டனர். " நம் பள்ளிக்கு அருகில் உள்ள மாரிமுத்து டீக்கடை இருக்கிறதே, அதில் விற்கப்படும் வடை நெடுநாள் வடை . அந்த வடைகளை அவன் சென்ற வாரம் தயார் செய்தான். இன்னமும் அவற்றை விற்றுக்கொண்டிருக்கிறான். ஆகவே அவன் கடையிலுள்ள வடை நெடுநாள் வடை " என்று தமிழாசிரியர் விளக்கமளித்தார். வகுப்பிலிருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்தனர்.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. ராகவன் (ஓய்வுப்பெற்ற ஆங்கில பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்) அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                    தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment