பாலைவனங்கள் திராவிட நிலத்தில் இல்லாத போது தமிழில் ஐவகை நிலங்களில் பாலை ஒன்றாக இருப்பது ஏன்?
இன்றைய திராவிட /தமிழ் நிலப்பரப்பில் பாலை இல்லை என்பது உண்மைதான். சிலப்பதிகார காலத்திலேயே முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்துதான் பாலை உருவாகின்றது. எடுத்துக்காட்டாக, காட்டுத் தீயால் முல்லையின் ஒரு பகுதி எரிந்து பாழ் பட்டால், அது பாலை ஆகிவிடும். எனவே நான்கு நிலங்கள்தான் தமிழரிற்கு முதன்மையானவை. இந்த நான்கு நிலங்களையுமே தொல்காப்பியமும் பின்வருமாறு பாடுகின்றது.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே`.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5
இவற்றிற்கு முற்பட்ட காலத்தில், அதாவது ஆரியர் வருகைக்கு முன், திராவிட நிலம் என்பது முழு இந்தியாவினையும் உள்ளடக்கியது. இன்றைய அறிவியல் ஆய்வுகள் சிந்துவெளி நாகரிகமே ஒரு திராவிட நாகரிகம் எனவும், அது ஆரியர் வருகைக்கு முற்பட்ட ஒரு நாகரிகம் எனவும் ஐயத்திற்கு இடமின்றி சான்றுப்படுத்தியுள்ளன. குறிப்பாக அண்மையில் வெளிவந்த இரு ஆய்வுகளான செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் ``An Ancient Harappan Genome Lacks Ancestry From Steppe Pastoralists or Iranian Farmers` என்ற தலைப்பில் வந்த ஆய்வும், Science இதழில் `The formation of human populations in South and Central Asia` என்ற தலைப்பில் வந்த ஆய்வும் மரபணு ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு; `சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம்` எனச் சான்றுப்படுத்தியுள்ளன. இந்த வகையில் பார்த்தால் பாலை நிலத்தையும் உள்ளடக்கியதே பழைய திராவிட நிலப்பரப்பு.
இதனையே ஊர்ப் பெயர்களை அடிப்படையாகக்கொண்டு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்னொரு முறையில் உறுதிப்படுத்தியிருப்பார்.
இந்த வகையில் பார்த்தால் பாலை நிலமும் திராவிட நிலப்பரப்பிற்குள் வருகின்றது.
இப்போது பின்வரும் சங்ககாலப் பாடலைப் பாருங்கள்.
`குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்` {அகம் 245}
இப்பாடல் ஒட்கத்திற்கு பசித்தால், அது எலும்பினையே தின்னும் என்கின்றது .
இத்தகைய பட்டறிவு பாலை நிலத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுத்தொகுப்பே. பாணர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக பாடல்களாக பாடப்பட்டு வந்த பாடல்களே பின்னர் சங்க இலக்கியங்களாகப் புலவர்களால் தொகுக்கப்பட்டது.
மேற்கூறிய வகையிலேயே தமிழர்களின் ஐந்து வகை நிலப் பாகுபாட்டினை நோக்க வேண்டும்.
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் திரு. இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment