அவ்வை / ஒளவை - என்ற சொல்லிற்கு...
தாய், மூத்தவள், நாயகி, தலைவி, அரசி எனப் பல பொருள் கொள்ளலாம்.
வகர > < யகர உடம்படு மெய்கள் மாறி, ஒரே பொருள் காட்டுவது தமிழில் இயல்பானதே.
- அவ்வை > < அய்யை.
- கோவில் > < கோயில்.
சங்கத்தமிழில் 'அய்யன்/ ஐயன் / ஐயா ' என்ற சொல்லின் பெண்பாலாகிய 'அய்யை /ஐயை' போன்றன, வயதில் முதிர்ந்த / பண்பில், ஞானத்தில் சிறந்த / உயர்குலப் பெண்களைக் குறித்ததாகும்.
'அய்' என்ற வேர்ச்சொல் தந்த சொல் அய்யை.
* அய் > அய்யன். (ஆண்பால்)
* அய் > அய்யை. ( பெண்பால்).
பண்டைய தமிழில் - 'அய்' என்ற சொல் மூத்தவரைக் (elder) குறிக்கும். பல சமூகங்களில் அய்யன் என்பது மூத்த சகோதரனையும் கூட குறித்தது,
பிற்காலத்தில் தலைவர், பெரியவர், நாயகன், மூத்த சகோதரன், அரசன் போன்ற பொருள்பட நீட்சியடைந்தது.
* அய் > அய்யர்> அய்யனார் (ஐயனார்) .
* அய் > அய்யா. இன்றைக்கும் அய்யா - என்ற சொல்லை பெரியவர், தலைவர் என்ற பொருளில்தான் பயிலுகிறோம்.
* முனிவர்களை, சந்நியாசிகளை, பரம்பொருளான இறைவனை விளிக்கப் பயன்பட்ட அய்யர் / ஐயர் - என்ற சிறப்புப் பெற்ற சொல்லை பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களைப் பெருமைப்படுத்தும் பொருட்டு - தமதாக்கிக் கொண்டனர்.
துக்கடா : அப்பன், அய்யன், அத்தன், அந்தன், அந்தை, அச்சன் ஆகியன தந்தையைக் குறிப்பன. ( தம் + அந்தை = தந்தை)
அம்மை, ஆத்தாள், அய்யை, ஆய், ஆயாள், ஆச்சி, அத்தை ஆகியவை தாயைக் குறித்து அமைந்தவை. ( தம் + ஆய் = தாய்).
இவையே… பிற் காலங்களில் மரியாதை கருதி பெரியவர், தலைவர் என்ற பொதுப் பொருள் கொண்டு மாற்றம் பெற்றன.
உதாரணமாக, இன்றைக்கும் கேரளாவில் கத்தோலிக்கப் பாதிரிகளை மேற்குறிப்பிட்ட விதிகளின் படி 'அச்சன்' என்றே அழைக்கிறார்கள். (தமிழ்நாட்டில்தான் தமிழ்ச் சொல் விலக்கி, ஆங்கில மோகத்தில் ஃபாதர் (father) என்று அழைக்கப்படுகிறார்கள்) .
இந்த பதிவுகளை வழங்கிய திரு.ரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
No comments:
Post a Comment