Pages

Thursday, 12 November 2020

தமிழ் முஸ்லிமுக்கும் சோனகருக்கும் என்ன வித்தியாசம்


தமிழ் முஸ்லிம்கள் என்பவர்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டு மதத்தால் முஸ்லிம்களாக வாழ்பவர்கள் ஆவர். குறிப்பாக தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.

தமிழகத்திற்கு இஸ்லாம் பல்வேறு வழிகளில் வந்தடைந்தது. அவற்றுள் கடல் வணிகம் மேற்கொண்ட அரேபிய முஸ்லிம்களின் வருகை பிரதானமானதாகும். அவர்கள் தமிழகத்துக்கு வந்து குடியேறியதன் விளைவாகவும் தமிழ் பெண்களை மணந்ததன் விளைவாகவும் இஸ்லாமிய மதம் தமிழகத்தில் வேரூன்ற ஆரம்பித்தது. அத்தோடு, கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம்கள் செய்த தொழில்களுக்கு ஏற்ப அதற்கான அடையாளப் பெயர்களான மரைக்காயர், இராவுத்தர், லெவ்வை, துருக்கர் போன்ற பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

அடுத்ததாக சோனகர்களைப் பற்றிப் பார்ப்போம்.

சோனகர் எனும் சொல் 'யவனக' எனும் பதத்திலிருந்து பெறப்பட்ட ஓர் சொல்லாக பெருமளவில் நம்பப்படுகின்றது.

கடல் கடந்து வர்த்தகம் செய்து வந்த அரேபியர்களை குறிப்பதற்காக சோழர்களினாலும், பாண்டியர்களினாலும் இலங்கை அரசர்களினாலும் இந்த சொற்பதம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மாமன்னர் இராஜ இராஜ சோழன் மற்றும் அவரது புதல்வரான இராஜேந்திர சோழன் போன்றோரின் கல்வெட்டுக்களில் 'சோனகர்கள்' பற்றிய குறிப்புக்களைக் காணலாம்.

தற்போது இலங்கை முஸ்லிம்களை குறிப்பதற்காக 'சோனகர்' எனும் பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாழையடி வாழையாக அவர்களுடைய தாய்மொழி தமிழ் மொழியாக இருப்பினும் கூட அவர்கள் 'சோனகர்கள்' என்றே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

தமிழக முஸ்லிம்களினதும் இலங்கை முஸ்லிம்களினதும் கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் அண்ணளவாக ஒன்றாகவே காணப்படுகின்றன. அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பல பிரதேச வழக்குச் சொற்களிலும் அதிகளவிலான ஒற்றுமைகள் காணப்படுகின்றன (உதாரணமாக, 
அப்பாவுக்கு வாப்பா என்றும், அம்மாவுக்கு உம்மா என்றும், அக்காவுக்கு லாத்தா/ராத்தா/தாத்தா என்றும் பயன்படுத்துவர்). அது மட்டுமல்லாமல் நான் மேலே குறிப்பட்டுள்ள அடையாளப் பெயர்களும் கடந்த நூற்றாண்டுவரை இலங்கை முஸ்லிம்களிடமும் பரவலாக வழங்கப்பட்டு வந்துள்ளன.

எனவே, இனம் என்பது நம் சுய விருப்பின் அடிப்படையில் தேர்வு செய்யும் ஒன்றல்ல. மாறாக, அது எம் பிறப்பால் வருவதாகும். குறிப்பாக எம் தாய்மொழி நாம் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பதை தீர்மானிப்பதில் பிரதான இடத்தை வகிக்கிறது. அத்துடன் கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்களும் பெருமளவில் தாக்கம் செலுத்துகின்றன.

எனவே, இலங்கை முஸ்லிம்களும் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதே சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

வாழ்க தமிழ்! வளர்க என்றும் எம் செம்மொழி!

(20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கைச் சோனகர்கள்)
(20th century Sri Lankan Moors)

படம்: விக்கிப்பீடியா

பின்னர் இணைக்கப்பட்டது

இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி அரபுத் தமிழ் என பரவலாக ஒரு கருத்து காணப்படுகின்றது.

தமிழ் மொழிச் சொற்கள் அரபு எழுத்துரு பெறுவதே அரபுத் தமிழாகும். இதனை ஆங்கிலத்தில் '
Arwi' என அழைப்பர். இதன் பிறப்பிடம் தமிழகத்தின் காயல்பட்டினமாகும்.

அரபுத் தமிழை ஓர் தனியான மொழியாக வகைப்படுத்த முடியாது. ஏனெனில், தனியான ஓர் மொழி தனக்கே உரித்தான தனித்துவமான எழுத்துரு, சொற்கள் இலக்கண மற்றும் இலக்கிய அமைப்பு போன்ற அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஆனால், அரபுத் தமிழ் இலக்கணம் தமிழைச் சார்ந்ததாகவும், எழுத்துரு அரபு மொழியைச் சார்ந்ததாகவும் அமையப் பெற்றுள்ளது. என்றாலும், அரபுத் தமிழ் தமிழ் மொழியின் ஓர் கிளை வடிவம் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.


இந்த பதிவுகளை வழங்கிய திரு.முகமது ராசமி அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!


                   தமிழால் இணைவோம் !!!
                     அறிவால் உயர்வோம் !!!
                             தமிழ் வாழ்க !!!
            அறிவியலின் தேடல் தொடரும்.
                          வலியே  " வலிமை "
                   - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment