Pages

Thursday, 12 November 2020

ஆதித்த கரிகாலன் யாரால் கொலை செய்யப்பட்டார்? ஏன்?


மர்மங்களின் ராஜ்ஜியம்.:( சோழப்பேரரசு )

பிற்காலச் சோழர் வம்சத்தில் இன்று வரை விளக்க முடியாத புதிராக இருப்பது, பார்த்திவேந்திர கரிகாலன் என்ற 2 ஆம் ஆதித்தனுடைய படுகொலை ஆகும்..இவன் ராஜ ராஜ சோழனின் அண்ணன்.

இவனது படுகொலையைப் பற்றி ' திருவேலங்காட்டு செப்பேடு மற்றும் உடையார் குடி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.

மேலே உள்ள அட்டவணையை தெரிந்து கொண்டால் பின்னா் வரும் நிகழ்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சரி வாருங்கள் பார்க்கலாம்..

பிற்காலச் சோழ அரசை உருவாக்கியவன் விஜயாலயச் சோழன் . இவனுக்குப்பின் முதலாம் ஆதித்தன் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள்.மூத்தவன் கன்னரத்தேவன்.இவன் போரில் இறந்ததால் ? இளையவனான முதலாம் பராந்தகன் முடி சூடினார்.

இவரது மூத்த மகன் இராஜாதித்தன் தக்கோலம் என்ற இடத்தில் நடந்த போரில் உயிர் நீத்த தால் அடுத்தவன் கண்டராதித்தன் பட்டத்திற்கு வந்தான் .கண்டராதித்தன் சைவப்பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முடி துறந்தான். அதோடு இவனது மகன் உத்தமச்சோழன் சிறுவனாக இருந்ததால் , இவனது தம்பி அரிஞ்சயன் ஆட்சிக்கு வந்தான.

அரிஞ்சயன் ஒரு ஆண்டு ஆட்சி செய்துவிட்டு 'ஆற்றூர்' என்ற இடத்தில் ராஷ்டிரஹூடர்களுடன் நடந்த போரில் மரணம் அடையவே , இவரது மகன் இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழர் ஆட்சிக்கு வந்தார்.( உத்தமச் சோழன் இன்னும் சிறுவன் ) இம்மன்னனுக்கு இரண்டு மகன்கள்.பார்த்திவேந்திர கரிகாலன் ( இரண்டாம் ஆதித்தன்.) ராஜராஜன் ( அருள் பொழிந்தேவன் ) மகள் குந்தவை.

சுந்தரச்சோழனுடைய காலத்தில் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.( முறைப்படி மூத்தவனுடைய வாரிசு வரிசையில் உத்தமச்சோழன் பட்டத்துக்கு ரியவன் ) சுந்தரச்சோழனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் ஆதித்த கரிகாலனும் கலந்து கொண்டு வீரத்தை நிலைநாட்டினான்.

கி பி 966 ல் புதுக்கோட்டையின் தென் எல்லையிலுள்ள சேவலி மலைகளுக்கு தெற்கே சேவூர் என்ற இடத்தில் நடைபெற்ற இப்போரில், ஆதித்த கரிகாலன் முதலாம் வீரபாண்டியனைத் தோற்கடித்து, அவனது தலையைக் கொய்து , அது அழுகும் வரை உயரமான தூணில் மாட்டி வைத்திருந்தான் என்று திருவேலங்காட்டு பட்டயம் குறிப்பிடுகிறது.

இவ்வேளையில் தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான்.இவனைக் கொன்றவர்கள் யார்? எனவும் இது குறிப்பிடுகிறது.

உடையார் குடி கல்வெட்டில்:

இந்தக் கொலையின் பின்னணியில் இருந்தது யார்?

இளையவன் என்று கூறி அரசு பதவி கிடைக்கும் என்று காத்திருந்த கண்டராதித்தன் மகன் உத்தமச் சோழனாக இருக்கலாமா? ஏனெனில் சுந்தரச்சோழன் தனது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் சூட்டி, போரிலும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

மேலும் உத்தமச்சோழனுக்கு அரியணை ஆசை நிறையவே இருந்தது. மன்னர் பதவி தவிர வேறெந்த பதவியையும் விரும்பவில்லை.மேலும் தனது ஒன்று விட்ட சகோதரனும் ( சுந்தரச் சோழன் ) அவன் மக்களும் அரியணையைப் பறித்துக் கொண்டதாக கருதினான் .மகன் இறந்த துக்கத்தில் இருந்த சுந்தரச் சோழனிடம் தனக்கு முடி சூட்டும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.. தனது மகனின் கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியாத வருத்தமா? அல்லது தெரிந்தும் கொலையாளிகளை தண்டிக்க முடியாதபடி வழிகள் அடைக்கப்பட்டதாலா? சுந்தரச்சோழன் மரணமடைந்தார்.

இதில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் ரவிதாசன் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.என்றால் அவனை எய்தது யார்?

சுந்தரச்சோழன் இறந்த பின் ராஜராஜன் என்னும் அருள் மொழி வர்மன் ஆட்சியை , விரும்பிய உத்தமச்சோழனிடம் ஒப்படைத்தான்.

உத்தமச்சோழன் பதவிக்கு வந்த வேளையில் , சுந்தரச் சோழனின் அமைச்சர் அனிருத்த பிரம்மராயர் ஓய்வுக்குப் பின் ரவிதாஸனுக்கு ' பஞ்சவர்மன் பிரும்மித்திராயன் என்ற பட்டத்துடன் பெரும் பதவி அளிக்கப்பட்டது .மேலும் கொலைகாரர்களைக் கண்டு பிடித்து தண்டனையும் விதிக்கப்பட வில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து 'வந்தியத்தேவன்' (ராஜராஜனின் தமக்கை குந்தவை யின் கணவன் ) இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எனில் குந்தவை க்கும் அவளது இளைய சகோதரன் ராஜராஜனுக்கும் இக்கொலையில் தொடர்பிருக்குமா? அது உண்மையெனில் தனது மூத்த சகோதரனை விட இளையவன் அரசாள வேண்டும் என குந்தவை நினைக்க காரணம் என்ன?

இதற்கும் ராஜராஜனுக்கும் சம்பந்தம் இருக்குமா? தான் ஆட்சிக் கட்டிலில் ஏற தனது தமக்கை , அவள் கணவன் வந்தியத்தேவனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினானா? ஆதித்த கரிகாலன் போர்களில் கைப்பற்றிய அளவில்லா செல்வத்தை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டது , சோழப் பேரரசு க்கு ஆதரவாக இருந்த சிற்றரசர்களுக்கு பிடிக்காது போனது. இது குந்தவைக்கும் பிடிக்காமல் போனது. சோழநாட்டை சிறந்த நிலைக்கு அருள் மொழிவர்மனால் மட்டுமே உயர்ந்த இயலும் என்று கருதினாரா ?

உத்தமச்சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அருள் மொழி வர்மன் என்ற ராஜராஜன், முதன் முதலில் சிறையில் இருந்த நந்தி வர்மனை விடுவித்தான். அடுத்தது தனது தமையனைக் கொன்ற ரவி தாஸன் மற்றும் அவனது உறவினர்கள் அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்து , அவற்றை விற்கும் பொறுப்பை திருவீர நாராயண சதுர்வேதி மங்கல சபையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட்டனர்.

எனில் பட்டத்து இளவரசனைக் கொன்றவர்க்கு மரண தண்டனை இல்லாமல் நாடு கடத்தியது ஏன் ? மேலும் இக்கொலை யில் தொடர்புள்ளோர் பலர் ரவிதாஸனும் அவனுடைய கூட்டாளிகளுமான அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து உடையார் குடி கல்வெட்டில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இதில் ஈடுபட்ட அனைவரும் அந்தணர்கள் என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வில்லையா? அவ்வாறெனில் ராஜ ராஜனின் படையெடுப்பின் போது எதிரி நாடுகளில் உள்ள அந்தணர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

காந்தளூர் படையெடுப்பு:

மற்ற பிற நாடுகளின் மீது படையெடுக்கும் முன் ராஜராஜன் காந்தளூரில் இயங்கி வந்த கடிகையின் மீது படையெடுத்தான். அது ஒரு கல்விக்கூடம். அதன் நிர்வாகி ஆதித்தனைக் கொலை செய்ததாக கூறப்பட்ட ரவிதாஸனின் குரு. எனவே கொலைக்கான உண்மைகள் அந்தக்கடிகையில் மறைந்திருக்க வாய்ப்பிருந்தால் , அதனால் பிற்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படக் கூடாதென்று அதைத் தாக்கி அழித்தானா?

உத்தமச்சோழனுக்குப் பிறகு அவனது மகன் சோழ நாட்டில் கோவில்களை நிர்வகித்து வந்தான். பின் அவன்மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை அளிக்கப்பட்டது. தன்மையைக் கொன்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஊழலுக்கு மரணதண்டனை? வேறு தண்டனை கொடுத்திருக்க முடியும். தனது மகன் ராஜேந்திரனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடந்ததா ?

ரவிதாஸன் யார்?:

பிற்காலச் சோழப்பேரரசை நிறுவிய விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த கரிகாலனுக்கு இரு புதல்வர்கள். மூத்தவனது இறப்பு சர்ச்சைக்குரிய நிலையில் அவனுக்கு இளையவனான முதலாம் பராந்தகன் அரியணை ஏறினார். மூத்தவன் கன்னரத்தேவனுக்கு பட்டம் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கன்னரத்தேவன் வம்சத்தைச் சேர்ந்தவன் ரவிதாஸன் என்று கூறப்படுகிறது.

ரவிதாஸன் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளில் ஒருவன் என்று பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி குறிப்பிடுகிறார். மாவீரனான வீரபாண்டியனைப் போரில் தோற்கடித்ததோடு , அவனது தலையைக் கொய்து உயரமான கம்பத்தில் நட்டு வைத்து அவனை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கவே பாண்டியநாடு , ரவிதாஸனின் உதவியுடன் இப்படுகொலையை நடத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்தக் கொலையில் உத்தமச் சோழனின் பங்கிருப்பதாக சூசகமாக கல் வெட்டு கூறுகிறது. இதில் துரோகிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பாண்டியர்களோ அல்லது சேரர்களோ எனில் , எதிரிகள் என்றே பொறிக்கப்பட்டிருக்கும்.ஆனால் கூடவே இருந்து குழிபறிப்பவர் தான் துரோகிகள் எனப்படுவர். அதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப் படவில்லையா? அல்லது மனமில்லையா ? 16 வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த ராஜராஜன் குற்றவாளிகளை தண்டித்தார்.என்றாலும் நாட்டின் மன்னராக வேண்டியவரைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை ஏன் வழங்கப்படவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். இதில் சம்பந்தப்பட்டவர் பிராமணர்கள் என்பதால் மரண தண்டனை கொடுக்கப் பட வில்லை என நினைப்பதற்கும் இடமில்லை.. ஏனெனில் ராஜராஜனின் படையெடுப்புக்களின் போது பிராமணர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி பலவிதமான கோணங்களிலும் அலசி ஆராய்ந்தாலும்…உண்மையான குற்றவாளிகள் யார் என்பதற்கான ஆதாரங்கள்…இன்னும் கிடைக்கப்பெறவில்லை. ராஜராஜனும் தனது ஒவ்வொரு நிகழ்வையும் கல்வெட்டில் பொறித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தன் இரு தேவதாசிகளின் பெயர்களைக் கூட பொறித்து வைத்தவன் தனது தமயனின் கொலை சம்பந்தப்பட்ட எந்தவிதமான விளக்கங்களையும் ஏன் குறித்து வைக்கவில்லை? அவனைத் தடுத்தது எது?

எது எப்படியோ, இன்னும் விளங்காத பல கேள்விகளுக்கு விடை பழையாறை , தஞ்சை மற்றும் உடையார் குடி போன்ற பகுதிகளில் இன்றளவும் கிடைக்காமல் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கல்வெட்டுகளில் இருக்கக்கூடும்.யார் அறிவார்?

.யார் அந்த கறுப்பு ஆடு?..காலம் பதில் சொல்லும் வரை காத்திருப்பதை த் தவிர வேறு வழியில்லை..

நன்றி 🙏


இந்த பதிவுகளை வழங்கிய திரு.ரங்கம் அருணாச்சலா அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!!!


                    தமிழால் இணைவோம் !!!
                    அறிவால் உயர்வோம் !!!
                                தமிழ் வாழ்க !!!
               அறிவியலின் தேடல் தொடரும்.
                         வலியே  " வலிமை "
                     - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment