Pages

Thursday, 12 November 2020

சமணர் கழுவேற்றம் என்பது என்ன?


"மதம் மனிதனை மிருகமாக்கும" - தந்தை பெரியார்.

இன்றைய இந்து மதத்தின் உறுப்புகளுள் ஒன்றான சைவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறையே சமணர்களை கழுவேற்றி படுகொலைகள் செய்த நிகழ்வுகளாகும்.

கழுவேற்றம் என்றால், நுனியில் கூர்மையாக்கப்பட்ட கழுமரத்தில் எண்ணெய் தடவி வழுவழுப்பாக்கப் பட்டிருக்கும். பின் கழுவேற்ற வேண்டிய மனிதனைத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் செருகிவிட்டுவிடுவார்கள். அம்மனிதனது எடையாலும், எண்ணெயின் வழுவழுப்பாலும் கழுமரம் நிதானமாக உடலை குடைந்துகொண்டு உள்ளே சென்று மேற்புறமாக வெளியேறும். இந்நிகழ்வின்போது அம்மனிதன் எந்த அளவு வலியை அனுபவித்து துடிதுடித்து இறப்பான்?

படம்: கூகுள் படங்கள்.

வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், சொடக்கு போட்டு விபூதி வருவித்தல் போன்றவற்றை சித்து வேலைகள் என்போம். இதுபோன்று சைவ மதம் உயர்ந்ததா சமண மதம் உயர்ந்ததா என்றறிய திருஞான சம்பந்தர் சமணர்களோடு அனல்வாதம், புனல் வாதம் புரிந்திருக்கிறார். அதாவது சமணர்களும் திருஞான சம்பந்தரும் ஏட்டில் தங்கள் மதத்தைப் பற்றி எழுதவேண்டுமாம். அதை நெருப்பில் இட வேண்டுமாம். அப்போது எந்த சமய ஏடு எரியாமல் இருக்கின்றதோ அந்த சமயம் வென்றதாகுமாம். இதேபோல் இருசமயத்தாரும் ஏட்டை ஆற்றில் விடவேண்டுமாம் எந்த ஏடு நீரோட்டத்தில் ஓடாமல் நிற்கிறதோ அந்த சமயம் வென்றதாகுமாம். சுந்தர பாண்டியன்(நின்றசீர் நெடுமாறன்) என்ற பாண்டிய மண்ணன் ஆட்சியில் இதுபோன்ற சித்து விளையாட்டுகளால் 8000 சமணர்கள் தோற்கடிக்கப்பட்டு கழுவேற்றப்பட்டுள்ளதாக பெரிய புராணம் குறிப்பிடுகிறது.

சமணர்களைக் கொல்லுதல் சமணப் பெண்களைத் வன்புணர்தல் போன்ற பயங்கரவாத செயல்களை புனிதப்படுத்தி திருஞான சம்பந்தர் பாடிய தேவார பாடல்களிலும் இத்தகைய செய்திகள் கிடைக்கின்றன. இன்று ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் இதைத்தான் செய்கிறார்கள்.

ஏடுகளில் குறிப்பிடப்பட்டவை இவை மட்டுமே. இவையல்லாமல் மதத்தின்பெயரால் இம்மண்ணில் என்னென்ன கொடுமைகள் நிகழ்ந்தனவோ, நினைக்கவே பதறுகிறது.

சரி இந்த சமண சமயத்தின் முதன்மையான கோட்பாடுகளில் ஒன்று கொல்லாமை. திருவள்ளுவர் கொல்லாமை என்று ஒரு அதிகாரத்தையே இயற்றியிருக்கிறார். தேவாரத்திற்கும் திருக்குறளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? சமண சமயக் கருத்துக்களை வழங்கும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு எப்படி அதற்கு மாறான சைவ சமய அடையாளம் திணிக்கப்படுகிறது என்பதற்கு காலம்தான் பதில்சொல்லும்.

குறிப்பு: நான் சைவ மதத்தைச் சார்ந்தவன். சிவன் கோவில்களுக்குச் செல்வதை விரும்புபவன். கடவுளையும் மதவெறியையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவன்.



No comments:

Post a Comment