Pages

Thursday, 12 November 2020

நாவலந்தேயம் என்பது இந்தியாவின் தமிழ் பெயர்

 நாவலம் என்றால் என்ன? நாவலந்தேயம் என்பது இந்தியாவின் தமிழ் பெயர். இதில் என்ன அர்த்தத்தை குறிக்கிறது?

நாவலந்தீவு, நாவலந்தேயம் என்பன இன்றைய இந்திய நிலப் பரப்பினைக் குறிக்கும் ஒரு தமிழ்ப் பெயர் எனப்படுகின்றது. பலரும் ஜம்புத்தீவின் ( `ஜம்ப்வித்தீவஹ’ ) மொழி பெயர்ப்பே நாவலந்தீவு எனச் சொல்லிவிட்டனர். ஏன் தமிழிலிருந்து (நாவலந்தீவு- ஜம்புத் தீவு) சமற் கிரதம் மொழி பெயர்த்திருக்கக் கூடாது? பார்ப்போம்.

"நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய {Tropics } ஒரு மரமாகும்; இது, இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் உரியது" எனப் புதலியல் { Botany} கூறுகின்றது. எனவே ஆரியர் படையெடுப்புக்கு முன்னரே இம் மரத்துக்கு இங்குள்ளவர்கள் பெயரிட்டு இருப்பார்கள். அது தான் நாவல் மரம். இந்த மரத்தின் பழமே நாவற் பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் ஒரு பெயரான சாம்பல் என்பதே `சம்பு` எனத் திரிந்து `ஜம்பு` ஆகியிருக்கிறது. எனவே தமிழிலிருந்துதான் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். இல்லையில்லை `ஜம்ப்வித்தீவஹ’ தான் நாவலந்தீவு என அடம் பிடித்தால், அப் பெயரினை இந்தியாவுக்கான மாற்றாகச் சொல்லாமல், `பாரதம்` (பரத) என்ற பெயர் மாற்றத்துக்குக் குரல்கொடுப்பது ஏன்? எனக் கேளுங்கள் சாயம் வெளுக்கும்.

மேலும் `ஜம்பு` என்ற சொல் பழமையானதா அல்லது `நாவல்` பழமையானதா எனப் பார்த்தால்; பேச்சு வழக்கிற்கு சான்று இல்லை, எனவே எழுத்து வடிவினையே பார்க்க வேண்டும். `நாவலந் தண் பொழில்`(பரிபாடல் ,paripāṭal 5-8) என சங்க இலக்கியத்திலேயே உண்டு. அவர்களும் ரிக் வேத சான்றினைக் கொண்டுவருவார்கள். ஆனால் பரிபாடல் தொகுக்கப்பட்ட காலத்திலும் ரிக் வேதம் `எழுதாக் கிளவி` யே. எனவே எழுத்தில் `நாவலம்` என்ற தமிழ்ச் சொல்லே காலத்தால் முந்தியது. மேலும் பல மரங்கள் உள்ள பகுதியில் வாழ்ந்த மொழியறிவுள்ள மக்கள்; ஆரியர் வருவார்கள், வந்து பெயர் வைத்த பின், நாம் அதனை மொழிபெயர்ப்போம் எனக் காத்திருப்பார்களா! என்ன?

இப்போது நாவலந்தீவு என்ற சொல் தமிழ்தான் எனக் கொண்டால், அதற்கான காரணம் யாது எனப் பார்ப்போமா! இங்கு தான் பல அறிஞர்கள் வேறுபட்ட கருத்துகளைச் சொல்லுகிறார்கள்.

  1. நாவல் மரங்களையுடைய தீவு ஆகையால் நாவலந்தீவு {புளியங்காடு, மதிரை…போன்று}
  2. நாவினை( Tongue )போல் வடிவத்தில் உள்ளதால்தான் நாவலம்.
  3. கடல் (நாவாய் =கடலில் ஓடும் கலம்) சூழ்ந்த தீவு.

இத்தகைய விளக்கங்களை வெவ்வேறு தமிழ் அறிஞர்கள் கொடுக்கிறார்கள். இதில் எது சரி? இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. சுருக்கமாகப் பார்ப்போம். கடலில் ஓடும் கலம் ஏன் `நாவாய்` எனப்படுகின்றது? வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடுவதால் நாவாய் எனப்பட்டது. எனவே `நா` வலம் (சுற்றி) வரும் தீவு `நாவலம்` எனப்பட்டது. அத் தீவிலுள்ள (குறிப்பாக,சிறப்பாக அத் தீவிலுள்ள) மரங்களை `நாவல்` என்றிருக்கலாம். பின்னர் அந்த மரத்தின் ஒரு வகைப் பழத்தின் நிறமே நாவல் நிறமாகவும் ஆகியிருக்கலாம். பின்னரான காலப்பகுதியில் ஆரியர்கள் நாவல் மரத்தினை `ஜம்பு` விருட்சமாக்கியது போன்றே, நாவலந்தீவினையும் `ஜம்புத் தீவு` (`ஜம்ப்வித்தீவஹ’ ) என ஆக்கிவிட்டார்கள்.

குறிப்பு - இலங்கைக்கு பவுத்தம் வந்திறங்கிய யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்ற பகுதியும் `ஜம்புகோளப்பட்டினம்/ ஜம்புத்துறை ` போன்ற பெயர்களில் பாளி மொழியில் அழைக்கப்பட்டுள்ளன. ஜம்புகோளப்பட்டினம் என்பதும் நாவலந்தீவு என்பதன் பாளி மொழி பெயர்ப்பே. எனவே பழந் தமிழர் வாழ்ந்த `ஈழம்` தீவும் நாவலந்தீவு என அழைக்கப்பட்டுள்ளது. பின்பு பாளியிலிருந்து `ஜம்பு` என்ற சொல்லை சமற்கிரதம் கடன் பெற்றிருக்கக் கூடும்.

No comments:

Post a Comment