Pages

Thursday, 12 November 2020

தமிழர்கள் முதலில் பின்பற்றிய மதம் ஆசீவகம்.

 

தமிழர்களின் மதம் எது? எனப் பெரிய ஒரு வாதம் பல காலமாக இடம்பெற்று வருகின்றது. மணிமேகலை நூலிலேயே `சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை` என்ற பகுதியில் பல்வேறு சமயங்களிற்கிடையேயான கருத்து மோதலைக் காணலாம். இவ்வாறு கடைச் சங்க காலம் முதல் பல்வேறு சமயங்கள் தமிழர்களின் வாழ்வியலில் புகுந்துள்ளன. ஆனால் அதற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழர்களிடம் `மதம்` என்றொரு கருத்துரு இருந்திருக்கவில்லை. இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக கீழடித் தொல்லியல் ஆய்வு முடிவு காணப்படுகின்றது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான பொருட்களில் மதம் சார்ந்த பொருள் ஒன்று கூட இல்லாமை, பழந் தமிழர்களின் மதமற்ற வாழ்வியலினைக் காட்டுகின்றது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் நிலையும் அதே. “தமிழகத் தொல்லியல் ஆய்வில் கிடைத்த பானை ஓட்டுத் தமிழ் பிராமி எழுத்துகள் எம் மதத்தையும் சாராது நிற்கின்றன” என தொல்லியலாளர் கா.ராஜன் அவர்கள் தெரிவித்திருப்பதும் (தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பக்கம் 2) இங்கு நோக்கத்தக்கது. தொல்லியல் ஆய்வுகள் மட்டுமல்லாமல், இலக்கியச் சான்றுகளும் சுட்டுவது பழந் தமிழர்களின் மதசார்பற்ற வாழ்வியலினையேயாகும்.

சங்க இலக்கியங்கள் மதசார்பற்றவை` எனும் போது, உங்களிற்குச் சில கேள்விகள் எழக்கூடும். சங்க இலக்கியங்களில் தமிழர்களின் நம்பிக்கைகள் சில குறிப்பிடப்படுகின்றனவே? என்ற கேள்வி எழலாம். பழந் தமிழர்களிடம் இயற்கை சார்ந்த சில வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் என்பன காணப்பட்ட போதும் அவர்களிடம் நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்கள் எதுவுமில்லை என்பதே இதற்கான பதிலாகும். இன்றுள்ள பலர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் எப்போதுமே இந்துக்கள் /சைவர்கள் என்றே எண்ணிவருகின்றார்கள். முதலில் `இந்து` என்ற பெயரே அண்மைக் காலத்திற்குரியது. இதோ இந்து மதத்தின் உலக (ஜகத்)குருவான சங்கராச்சாரியரே பின்வருமாறு கூறுகின்றார்.

#”“இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்” .(தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-126). “வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.” (தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267)#

இந்து மதத்தின் தொன்மை அவ்வளவுதான். சரி, சைவத்தினைப் பார்ப்போமா! சைவ - வைணவ மதங்கள் பல்லவர் காலத்திலேயே தோற்றம் பெற்று, பக்தி இயக்க காலத்தின் பின்னரே பெரும் சமயங்களாக உருவெடுக்கின்றன. இதற்குப் பெரிய புராணத்திலேயே சான்றுகளுண்டு.

சமண் சமயம் மிக்கு ஆங்கு

மன்னிய சைவம் ஏதுமின்றி

மேலுள்ள தேவாரப் பாடலிலேயே சான்றினைக் காணலாம். மேலும் தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என யாவுமே சமண, பவுத்த மதம்சார்ந்தவையே. தமிழின் பதினெண் கீழ் கணக்கு நூல்களும் ஒன்றில் மதசார்பற்றவை அல்லது சமண பவுத்த மதக் கருத்துகள் தாங்கியவையே. எனவே சைவ-வைணவ சமயங்களிற்கு முன்னரே பவுத்த-சமண மதங்கள் தமிழகத்தில் வலுப் பெற்றிருந்தமை உறுதியாகின்றன. இங்கு இன்னொன்றையும் கவனத்திற் கொள்ள வேண்டும்; அதாவது சங்க காலப் பாடல்களில் இடம் பெறும் முருகன்,கொற்றவை போன்ற தெய்வங்களை இன்றைய சைவத்துடன் தொடர்புபடுத்திக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அவை இயற்கை சார்ந்த வழிபாடுகளே, பிற்காலத்திலேயே சமயத்தினுள் உள்வாங்கப்படுகின்றன. சைவ- வைணவ சமயங்களிற்கு முற்பட்ட பவுத்த- சைன நெறிகள் கூடத் தமிழகம் எப்போது வந்தன என்பதற்கான சான்றுகள் உண்டு. குறிப்பாக பவுத்தம் அசோகரது ஆட்சிக் காலத்திலும், சைனம் சந்திர குப்த மன்னர் காலத்தில் `பத்திரபாகு முனி` தலைமையிலும் தமிழகத்திற்குப் பெருமளவில் வந்து சேருகின்றன.

இதுவரை நாம் இப் பதிலினுள் பார்க்காத ஒரு மதம் ஒன்றுண்டு- அது ஆசீவக மதம். இதுவே தமிழர்களின் முதல் மதமாககக் காணப்படலாம். ஆசீவகமானது தற்போதைய சான்றுகளின் படி , தமிழ்நாட்டிலேயே உருவான ஒரு சமயமாகக் கருதப்படுகின்றது. இந்த ஆசீவகமதமானது மற்கலி கோசலார் என்பவரால் (புத்தர், மகாவீரரின் சம காலத்தவர்) ஏற்படுத்தப்பட்டது. }. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ என்ற பகுதி ஐயனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள `திருப்பிடவூர்` என்று கூறுகின்றது. இதனை அங்கே கள ஆய்வுசெய்து , ஐயனார் பிறந்த ஊர் அதுதான் என்பதற்கான கல்வெட்டுச் சான்றிணையும், ஐயனார் கோயிலையும் நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் கண்டறிந்து உள்ளார். மேற்கூறியவற்றால் ஆசீவகமானது தமிழ்நாட்டில் தோன்றி, வடக்கேயும், கீழே இலங்கைவரையும் பரவிய ஒரு சமயமாகக் காணப்படுகின்றது. வடக்கே ஆசீவகமானது செல்வாக்குப் பெற்றிருந்ததனை அசோகரின் கல்வெட்டுச் சான்றும் {பிகார் மாநிலத்தின் ஜகானாபாத்(Jehanabad) மாவட்டத்தில் உள்ள பராபர்(Barabar) எனும் ஊரிலுள்ளது} பாளி மூலமான நூல்களும் காட்டுகின்றன. `ஆசீவகம்` பற்றி மேலும் அறிந்துகொள்ளப் பின்வரும் இணைப்பிற்குச் செல்க.

Kuganathan VE

முடிவாக, பழந் தமிழர்களிடம் மதங்களில்லை. கடைச் சங்க காலத்தில் தமிழர்கள் நடுவே தோன்றிய முதல் மதமாக `ஆசீவகம்` காணப்படுகின்றது.


இந்த பதிவுகளை வழங்கிய திரு. இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


                       தமிழால் இணைவோம் !!!
                        அறிவால் உயர்வோம் !!!
                               தமிழ் வாழ்க !!!
               அறிவியலின் தேடல் தொடரும்.
                              வலியே  " வலிமை "
                         - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment