நான் அமரர் கல்கி அவர்களது புத்தகங்களின் அடிமை. அவரின் எழுத்துக்கள் என்னை அசைய விடாமல் கட்டி இழுத்தத்தைப்போல் வேறெந்த எழுத்தாளரின் எழுத்துக்களும் செய்யவில்லை.சென்ற மாதம் எனது பிறந்த நாள் பரிசாக எனக்கு என் நண்பர் ஒரு புத்தகம் கொடுத்தார். புத்தகத்தின் பெயர் "வேள் பாரி" .
கதையின் தொடக்கத்தில் ஒரு புலவரின் புகழ் பெருமையாக கூறப்பட்டது. அவரது பெயர் "கபிலர்". இந்த பெயரை கேட்டதும் சங்க காலம் நினைவுக்கு வந்தது. பள்ளிப் பருவத்தில் பயின்ற புறநானூறு நினைவிற்கு வந்தது. உடனே கடை ஏழு வள்ளல்கள், கபிலர் ஆதரித்த முல்லைக்கு தேர் கொடுத்த பாரி நினைவிற்கு வந்தான். அந்த பாரி தான் வேள் பாரி என்பதே எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும் போது தான் புரிந்தது.
குறிஞ்சி நிலத்தின் சிறப்பு, ஒவ்வொரு மரத்தின், செடியின், உயிரினத்தின் சிறப்பு, மூலிகைகளின் தன்மை, பறம்பு நாடு மக்களின் வாழ்க்கை முறை, கலைகளை வளப்படுத்திய கூட்டம், சூது இல்லாத தூய மனங்கள், பேராசை இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள். அத்தகைய குடியை காத்து வழிநடத்தும் மன்னன். ஈகையில் கர்ணன் - வேள் பாரி
அவர்களின் வாழ்வு, மூவேந்தரின் முற்றுகை இட்ட சேனை, போர் களத்தில் நிகழ்ந்தவை இவற்றை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் சு. வெங்கடேசன் அவர்கள்.
பொதுவாக ஒரு மன்னன் போர் செய்து செல்வங்கள் பெற்றான் என்று படிக்கும் போது, அந்த மன்னனின் பக்கம் தானாக மனம் சென்று விடுகிறது. வீரம் நிறைந்த மன்னன், தன மக்களுக்காக போர் செய்து பொருள் ஈட்டி வருகிறான் என்று. இந்த புத்தகத்தை படித்த பின் மனம் சினம் கொண்டது.
மன்னனின் சுயநலத்திற்காக ஆக்ரமித்து ஒரு குலத்தையே அழித்து தான் செல்வம் பெருகிறானோ? இது சரிதானா? இதை தான் வீரம் என்று புகழ்கிறோமா? என்ற பல கேள்விகள் மேலெழுந்தது. வெற்றி கொண்ட கோமானின் சாரமில்லாமல் சுயநலம் இல்லாமல் தன நாட்டை தற்காத்துக் கொள்ள மட்டுமே போரிடும் ஒரு உன்னத மன்னன் - பாரி
வென்ற கோமான் சிறந்தவன்? இல்லை இயற்கைக்காக தற்காத்து போரிடும் வீர மன்னன் சிறந்தவனா என்று என்னை நானே கேட்டுக் கொன்டேன். கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தது, பல வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான். இதை போல் இன்னொரு புத்தகம் கிடைக்காத என ஏங்கி நிற்கிறேன்.
No comments:
Post a Comment