தமிழ் பற்று ஒருவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் திசை திருப்ப வல்லது?
தமிழ் ஒரு மாயை அதில் சிக்கினால் வெளியில் வருவது கடினம், இந்த மாயை துன்பத்தை ஒருபோதும் தருவது இல்லை பக்கவிளைவுகள் அற்றது. தமிழ் மொழி இன்றளவும் இந்த உலகில் நிலைத்து இருப்பதற்கு காரணம் அதன் தன்மை. தமிழ் காற்று ஒருவர் மேல் பட்டால்போதும் அவர் அன்றில் இருந்து தமிழ் போராளி.
தமிழ் பற்றால் நாம் எப்படியெல்லாம் மாறுகிறோம் என்று பார்ப்போம்.
- தமிழுக்கு ஏதேனும் பெரிய இடர் ஏற்படும் நிலை ஏற்பட்டால் அதைக் காக்கத் தோன்றும். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயங்க மாட்டோம்.
- இந்த உலகில் ஊதியம் இன்றி எந்த வேலையும் வாங்க முடியாது, ஆனால் தமிழ் பற்று காரணமாக ஈழத்தில் எல்லா போராளிகளும் ஊதியம் இன்றி உழைத்தார்கள் இவர்களுக்கு உணவு, உறங்க இடம், உடுத்த உடை மட்டுமே கொடுக்கப்பட்டது. இப்போராளி திருமணம் செய்துகொண்டால் இவருக்கு குடும்பத்தை நடத்திச் செல்ல ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கப்படும். இப்படி மாடு மாதிரி உழைத்து நாட்டைக் காக்க தமிழ் மொழி பற்று இருந்தால் மட்டுமே முடியும்.
- தமிழ் அறிஞர்கள், மொழி காப்பாளர்கள் நீங்கள் ஒருமுறை பார்த்தாலே போதும். அவர்கள் மொழி பற்று காரணமாக எவ்வளத்தை இழக்கிறார்கள் என்று. ஆனால் அதை பொருட்படுத்தாமல் தமது பணியை சிறப்புடன் செய்து முடிப்பார்கள்.
- தமிழ் மொழியின் ஆழமாக கற்கத் தொடங்கினால் போதும் ஒரு தவறு செய்வதற்கு முன் அஞ்சுவோம். [நான் பல நேரங்களில் தவறு செய்யும் முன் அச்சப்படுவது உண்டு]
- தமிழ் பற்று இருந்தால். பிற உயிரினங்களை மேல் அன்புசெலுத்தத் தோன்றும்.
தமிழ் பற்றால் நான் பெற்ற மாற்றங்கள் ஒரு சில.
- நான் தமிழ் மொழிப்பற்றுக்காரணமாகதான் கோரா தமிழ் செயலியை பயன்படுத்துகிறேன்.
- அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகிறேன்.
- எவருக்கும் தீங்கு செய்வதற்கு தயங்குவேன், அச்சப்படுவேன்.
- பல பாடல்களை தமிழ்வரிகளை கொண்டு ரசித்தேன்.
- இதுவரைக்கும் நான் எந்த பெண்ணையும் தவறாக நடத்தியது இல்லை. எந்த ஒரு கெட்ட சிந்தனையுடன் பார்த்ததும் இல்லை.
- தமிழ் கூறும் பல அறவழியை நான் பின்பற்றுகிறேன்.
- நான் சினம் கொள்வது அரிது, ஆனால் என்னை நோக்கி வரும் கணைகளை எதிர்ப்பது என் வீரம்.
- பிறருக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தை கொண்டேன்.
- தமிழோடு பிறமொழி கலந்து பாடல்கள் உருவாக்கப்பட்டால் அதை வெறுத்து ஒதுக்குவேன். திரைப்படங்களில் மொழிகலப்பை வெறுக்கிறேன்.
- தமிழர்களின் நிறுவனங்களுக்கு தமிழ் பெயர் சூட்டப்படாமல் மாற்றுமொழியில் பெயரை சூட்டுவது ஏன் என்று வினாவுவேன்.
- நான் தமிழர்களுடன் உரையாடும் போது தமிழில்தான் பேசுவேன். இடம் பொருள் ஏவல் எதையும் பார்ப்பதில்லை.
- தமிழ் மொழியோடு பிறமொழிக் கலப்பின்றி எழுதுவதே எனது கொள்கை. இவை இன்றுவரை தொடர்கின்றது.
மேலே எழுதப்பட்டிருப்பதில் பெரும்பாலனவை எனது துய்வுகளே. மறுமடியும் உங்கள் எல்லோரையும் வேண்டிக் கேட்கிறேன் தூயதமிழில் பேசுவதற்கு முயற்சியுங்கள். நான் தமிழில் ஒரு துளியைத்தான் அருந்தினேன், ஆனால் இமயம் தொட்டதைப்போல் எண்ணி எல்லையற்ற மகிழ்ச்சி கடலில் மூழ்கி விட்டேன், இந்தக் கடலில் இருந்து வெளிவர நான் விரும்பவில்லை, இது தொடரட்டும்…….
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்………. என்று கூறி விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment