Pages

Tuesday, 10 November 2020

ஆண்டவன் என்பதன் பொருள் என்ன

எத்தனையோ சிறப்பு வாய்ந்த அடிச்சொற்களைக் கூட வழக்கொழித்ததன் விளைவாக 'ஆண்டவன்' போன்ற மேலான சொற்களுக்குக் கூட சரியான பொருள் புரியாமல் தவிக்கின்ற நிலையிலிருக்கிறோம். ஆண்டவன் என்றால் ஆள்பவன் என்ற தவறான பொருள்படவே பெரும்பாலான விளக்கங்களைக் காணமுடிகின்றது.

(ஆண்டவன் - என்ற சொல்லின் மிகச் சரியான சொல்லாய்வை தீர ஆராய்ந்து விளக்கியுள்ளேன்… ஆண்டவன் அருளோடு).

ஆண்டு + அவன் = ஆண்டவன்.

ஆண்டு - என்பது இடப்பாகுபாட்டுச் சொற்களில் ஒன்று. ( விரிவான விளக்கம் கீழே...).

ஆண்டு - என்றால் பரந்து விரிந்த, எல்லையற்ற எனப் பொருள். ஆண்டு - என்பது சேய்மைப் பொருளில் அமைந்தது.

ஆண்டவன் = எல்லையில்லாதவன்.

எந்த ஒரு எல்லைக்குள் அடங்காது, பரந்து விரிந்து - அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்.

எந்த ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளும் காட்ட இயலாதவன்.

எல்லா வித பண்பிலும், குணத்திலும் எல்லை இல்லாதவன்.

எந்த ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள்ளும் அடக்கி சொற்களால் விவரிக்க இயலாதவன்.

ஆண்டு என்றால் என்ன?
அங்கு, இங்கு, உங்கு
ஆங்கு, ஈங்கு, ஊங்கு
அங்கண், இங்கண், உங்கண்
அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம்
ஆண்டு, ஈண்டு, ஊண்டு - ஆகியன இடப்பாகுபாட்டுச் சொற்களில் சிலவாகும். இவற்றில் பெரும்பாலானவை இன்றைக்கு வழக்கொழிந்து விட்டன.

ஆண்டு என்பதற்கு “அங்கே” என்று சேய்மை நிலையில் - படர்க்கை பொருள்படும். எல்லையில்லாமல் விரிந்த இடத்தைக் குறிக்கும்.

ஈண்டு - என்னும் சொல் “இங்கே” என்னும் அண்மை நிலையில் - தன்மைப் பொருள் குறிக்கும். அதாவது குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கியது - என்ற பொருள் கொண்டது.

ஊண்டு - என்பது "உங்கே" என இடைமை நிலையில் முன்னிலைப் பொருள் குறித்தது. இது குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்காததும், ஆனால் பரந்து விரிந்த இடைநிலை பரப்பைக் குறிக்கும்.


No comments:

Post a Comment