தூய தமிழில், பெரியவர்களை இதில் - "ஐயா" அல்லது "அய்யா", எதை அடைமொழியாய் வைத்து அழைத்தால், தமிழுக்கும், அவருக்கும் மரியாதைக்குரியதாக இருக்கும்?
`ஐயா` என்பதே பொருத்தமானது, அய்யா என்று எழுதும் போதும் ஒலிப்பு ஓரளவுச் சரியாக வந்தாலும் `ஐ` என்ற வேர்ச் சொல் அங்கில்லாமல் போகின்றது. ஐ` என்ற ஒரெழுத்து மொழியின் `தலைவன்` என்ற பொருள் முதன்மையானது. பின்வரும் குறளினைப் பாருங்கள்.
“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்”- (குறள் 771)
பலரென்னை= பலர்+என்+ஐ, {ஐ = தலைவர்}.
{பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல் வடிவாய் நின்றவர் பலர்.}
ஐ=தலைவன் என அமைந்த திருக்குறள் பார்த்தோம், இப்போது ஒரு புறநானூற்றுப் பாடல் பார்போமா!
`என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்` - (புறநானூறு 85)
திரைப் படப் பாடல் சுவைஞர்கள் ((ரசிகர்கள்) `என் சுவாசக் காற்றே` என்ற படத்தில் இடம்பெறும் `தீண்டாய் மெய் தீண்டாய்` ` என்ற பாடலின் தொடக்க வரிகளைக் (கன்றும் உண்ணாது கலத்தினும் படாது) கேட்டிருப்பார்கள். அவ் வரிகள் வருமாறு.
“கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே”
மேலுள்ள திரைப்படப் பாடல் வரிகள் குறுந்தொகையிலிருந்தே எடுத்தாளப்பட்டிருந்தன. இங்கும் `என்னைக்கும் உதவாது` (தென்னைக்கு முதவாது) என்ற சொற்றொடரானது `என்+ஐ` எனப் பிரியும். இங்கும் `ஐ` என்பது தலைவன் என்ற பொருளிலேயே இடம்பெறுகின்றது.
மேற்கூறிய சங்க இலக்கியப் பாடல்களிலும் `ஐ` என்பது தலைவன் என்ற பொருளில் இடம்பெற்றிருப்பதனைக் காணலாம். இந்த `ஐ` என்ற ஒரெழுத்து மொழியே; பின்னர் ஐயர்,ஐயன் என அர், அன் விகுதிகள் சேர்க்கப்பட்டுத் தலைவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுவந்தது. இன்றும் கொங்கு மண்டலத்தில் தலைவரைக் குறிக்க `ஐயன்` எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று தமிழில் பரவலாகத் தந்தையினையும் `ஐயா` எனக் குறிக்கப்படுகின்றது. `ஐ` எழுத்தினை "ஐயன்னா" என்பதும் வழக்கம். `ஐயன்னா` இற்கு ஆர் விகுதி சேர்க்கப்படும்போது, அது `ஐயனார்` ஆகின்றது. இதுவே இன்றும் ஊர்தோறும் காணப்படும் காவற்தெய்வமான ஐயனார் ஆகும். இத்தகைய மதிப்பிற்குரிய `ஐயர்`/ `ஐயா` என்ற சொல் இன்று சிலரால் தவறாகக் குறித்த ஒரு சாதியினை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது, அது தவறு. அவ்வாறானவர்களைக் குறிக்க வேண்டுமானால் (விரும்பினால்) `அய்யா` என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மதிப்புக்குரியவர்களை `ஐயா` (தலைவரே) என அழைப்பதே பொருத்தம்.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
No comments:
Post a Comment