வையகத்தில் வாழ்கிறவன், விலங்குகளைப் போல வாழாமல், வாழ வேண்டிய வழிமுறைகளில் வாழ்ந்தால் தெய்வமாகவே மதிக்கப்படுவான் என்பது வள்ளுவன் வாக்கு. இதன்படி வாழ வேண்டிய வழிமுறைகளை வகைதொகைப்படுத்திக் கொடுப்பதே சமயம் ஆகும். சமை - சமையம் - சமயம் = மனிதனின் ஆன்மா இறைவனை அடையத் தகுதியாகும் ஒழுக்கம் அல்லது நெறி.
* சமைதல் = என்றால் பதமாகுதல், நுகருதற்கேற்ற நிலையை அடைதல், அணியமாதல் (ஆயத்தமாதல்).
* சமையல் = கறி காய்களை பக்குவமாக அடுப்பிலிட்டு உண்பதற்கு ஏற்ற வகையில் ஆயத்தம் செய்தல்.
* சமைத்தல் = ஆக்குதல், சோறாக்குதல், பதப்படுத்தல், பக்குவப்படுத்துதல், தகுதியாக்குதல், அணியமாக்குதல்,நிரப்புதல், முழுமைப்படுத்துதல் என்று பொருள்.
ஆக்குதல் என்றால் 'குற்றம் களைந்து செம்மைப்படுத்துதல்' - என்று பொருள்படும்.
சோறு ஆக்குவது என்பது .... அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றத்தைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கி முழுமைப்படுத்துவதே !
காட்டுவிலங்காக இருந்தவனை மனிதனாக ஆக்கி, அவனுடைய குணத்திலும் மனதிலும் காணப்படும் ஓட்டைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக்கொண்டிருக்காமல் உடன்வாழ்பவர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி, அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவது எதுவோ அது சமயம்.
அரிசி உண்ணச் சமைதலும், பெண் மணக்கச் சமைதலும் போன்றதே, மனிதன் இறைவனை அடையச் சமைதல்.
அரிசியைப் பக்குவமாகச் சோறாக்குவது சமையல். அதே போல மனிதனைப் பக்குவமாக்கி தெய்வநிலைப்படுத்தும் ஒழுக்கமானது சமயம் என்றானது.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment