Pages

Sunday, 22 November 2020

இஸ்லாம் புனித போர்

 இஸ்லாம் புனித போர் பற்றி கூற முடியுமா?

"பொறுமையாக படிக்க விரும்பும் அன்பர்கள்மட்டும் …

மனப்பூர்வமாக அன்றி உயிருக்கு பயந்தோ , தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனால் அங்கீகரிக்கப்படாது " குர் ஆன்.

இஸ்லாமியத்தை முன்னிட்டு நபிகள் காலத்திலேயே பல போர்கள் ,கிட்டத்தட்ட 70 முதல் 80 போர்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும் அது உண்மையில்லை.ஏனெனில் தனது எதிரிகளால் அங்கே தங்க முடியாத நிலையில் , கி பி 622 ல் மெக்காவில் இருந்து மெதினா சென்றார்.பத்து ஆண்டுகள் கழித்து 630 ல் மெக்காவை வெற்றி கொண்டார்.இரண்டு ஆண்டுகள் கழித்து கி பி 632 ல் மரணம் எய்தினார்.இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது அந்த பத்து ஆண்டுகளில் வருடத்திற்கு எட்டு போராவது நிகழ்த்தி இருக்க வேண்டும்.அது யாராலும் இயலாத காரியம்..

மெதினாவில் இருந்த அரேபியர்கள் மிகவும் வறுமையில் இருந்தவர்கள்.அப்பாவி மக்கள்.அவர்கள் நபிகள் நாயகத்தின் பேச்சு மற்றும் அவரது எளிமையான வாழ்க்கை (இடுகாட்டுப்பகுதியில் குடிசையில் வாழ்ந்தார்.)இவற்றின் மூலம் கவரப்பட்டார்கள்.அவர்களுடன் கலந்திருந்த யூதர்களின் வழிபாட்டு முறைகளின் தவறுகளை ஏசு சுட்டிக் காட்டி இறைவன் ஒருவனே என்று போதித்தது போல ,இவரும் இறைவன் ஒருவரே என்று போதித்தது யூதர்கள் கூட இவரை திரும்பி பார்க்க வைத்தது..படிப்பறிவில்லாத இவரது வார்த்தைகள் இறையால் அருளப்பட்டதாக நம்பினர்..அவரது போதனைகளை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாமியர்களாக மாறினர். உடல் வலிமையுடன் இருந்த அம்மக்கள் சிறந்த ராணுவ வீரர்களாக நபிகளால் மாற்றப்பட்டனர்.

பழங்கால பாலஸ்தீனம்.

இவரது காலத்தில் சிறிய போர்கள் மூன்று நடைபெற்றன.

  1. பத்ரு 2. உஹத் 3. ஹூனைன்.

முதலாவது போரில் இவரை எதிரியாக பாவித்த குரைஷிகளுக்கும் இவரது படைகளுக்கும் இடையே நடந்த போர்.இதில் குறைஷிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம்.நபிகளின் படையினர் 313 பேர் மட்டுமே.இருந்தாலும் குரைஷிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

எனவே இவரை பழிவாங்கும் விதமாக மீண்டும் ' ,''உஹத் 'என்ற இடத்தில் போர் தொடுத்து நபிகளின் படையை வெற்றி கொண்டனர்.

இதன் பிறகு மெக்கா முஸ்லிம்களின் பகைவரான ஹவாஸின் என்ற அரபு இனத்தவரின் தலைவரான , மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்பவர் தலைமையில் வலிய நடத்திய தாக்குதலில் முகமதுவின் படையினர் வெற்றி பெற்றனர்.

மெக்கா போர்:

நபிகளார் கி பி 630 ல் மெக்கா மீது நடத்திய போர்.கத்தியின்றி ரத்தம் இன்றி மாபெரும் வெற்றி பெற்றது. இப்போரே இஸ்லாம் அதி வேகமாக பரவ காரணமாக இருந்தது.இவர் மெக்கா மீது படையெடுத்த போது தனது வீரர்களுக்கு " இது சாதாரணமாக மனிதர் ,தம் எதிரிகளிடம் நடத்தும் போர் அன்று.மெக்காவிலுள்ள ' கா ' அபா இறைவனின் வீடு.அதனுள்ளே செல்லவும் ,தொழுகை செய்யவும் எல்லோரையும் போலவே முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு" என்று கூறியிருந்தார்.

சாதாரண படையாக இருக்கும் என நினைத்த மெக்கா குரைஷிகள் , கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை பார்த்ததும் , பயந்து நடுங்கி 'க'அபாவிலுள்ள சிலைகளின் பின் புறம் ஓடி ஒழிந்தனர். "யாரையும் எதிரியாக நினைக்கவோ கைது செய்யவோ அல்லது கொல்லவோ கூடாது "என்று கட்டளை இட்டார்.

". நமது குடியரசில் தம்மை இணைத்துக் கொள்ளும் யூதர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.அவர்கள் முஸ்லிம்கள் போலவே சம உரிமை படைத்தவர்கள்.யூதர்கள் தமது மத வழக்கப்படி வாழ எந்த தடையும் இல்லை.அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினா வாழ் யூதர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது " என்றார்.

மத நல்லிணக்கத்தை இவரை விட இவ்வாறு யாரும் பின்பற்றியதில்லை.இதற்கு முன் தங்கள் இனக்குழுவை தங்கள் அடையாளமாக பயன் படுத்திய இவர்கள் தம்மை 'முஸ்லிம் ' என்ற ஒரே வார்த்தையில் தம்மை அடையாளப்படுத்தினர்.

நபிகளார் இறந்த பிறகு அவருடைய தோழர் அபு பக்கர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்த பிறகு 'உமர் ' ஆட்சிக்கு வந்தார்.முதன் முதலில் ஜெருசலேமில் கால் வைத்த முஸ்லிம் மன்னர் இவரே.(கி பி 638) மிக மிக எளிமையானவர்.

பழங்கால ஜெருசலேம்.

புதிய ஆடைகள் அணியாமல், துண்டு துண்டாக துணிகளை சேர்த்து , கையால் தைத்த ஆடையை உடுத்தினார் .பால் கறத்தல்.வயதான பெண்களின் வீடுகளுக்கு சென்று பாத்திரம் துலக்கி துணி துவைத்தல் போன்ற வேலைகளை செய்து கொடுத்தார்.

பைசாந்தியர் மீது போர்:

இதன் பிறகு எகிப்தின் பைசாந்தியர்கள் என்ற இன கிறித்தவர்கள் மீது படையெடுத்தார்.இது மிகப்பெரிய கடுமையான யுத்தமாக இருந்தது."இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக ஒரு ஆளுநரை நியமிக்கிறேன்.இவரது கடமை உங்கள் மார்க்கத்தை பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறுமின்றி பாதுகாப்பது மட்டுமே".எனக் கூறி அம்மக்களை யும் அரவணைத்தார்.

யூதர்கள் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் அனைவருமே இப்ராஹிமின் (ஆப்ரஹாம்) வழியாக வந்தவர்கள் தான். எனவே அனைவரும் சண்டை இன்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆனால் இஸ்லாமியர்கள் அல்லாத பிற இனத்தவரை பேரரசின் எல்லைக்குட்பட்ட கடலோரங்களிலும் ,மெக்கா ,மெதினா ஆகிய இடங்களில் இருந்து இவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி , வேறு இடங்களில் வசிக்க நிர்பந்தப்படுத்தினார் என்றும் கூறுகின்றனர்.இதற்கான காரணம் அறிய முடிய வில்லை.

சிலுவைப் போர்.

இதெல்லாம் கி பி எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு நிலைமை மாற ஆரம்பித்தது.லஞ்சம் அதிகமாக காணப்பட்டது.முஸ்லிம் அல்லாதோர் திம்மிகள் என்று அழைக்கப்பட்டனர்.அவர்கள் மீது வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டது.கடைகளும் வீடுகளும் முஸ்லிம்களின் வீடுகளை விட , கடைகளை விட பெரிதாக இருக்கக்கூடாது.ஆனால் கிறித்தவ தேசங்களில்் யூதர்கள் பட்டதை விட இது பலமடங்கு மேல் என் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சிலுவைப்போர்.:

யுத்தத்தின் மையம்.

ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல.கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் அதாவது பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த இப்போர் கி. பி 1095 முதல் கி பி 1250 வரை நடைபெற்றது.கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற இப்போர் கிறித்தவர்களின் புனித இடமான ஏசு கிறிஸ்து பாடுபட்டு மரித்த இடமான ஜெருசலேமை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடத்தப்பட்டது.இவ்வீர்கள் தங்களை அடையாளப் படுத்த கைகளில் சிலுவைகளை ஏந்தி இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.முஸ்லிம்களுக்கு நபிகளார் வானதூதர் மூலம் வானுலகம் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வந்து இறங்கிய இடமாதலால் புனிதத்துவம் பெறுகிறது.யூதர்களுக்கு அவர்களது மூதாதையரான ஆப்ரஹாம் (இப்ராஹிம்) மற்றும் அவரது வழிவந்தோர் வாழ்ந்த இடம்.எனவே அவர்களுக்கும் இது புனித இடம்.அக்கால பாலஸ்தீனம் என்பது யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக புனித தவம்.

காரணங்கள்:

கிறித்தவ மதம் பரவ ஆரம்பித்ததும் லட்சக்கணக்கான ஐரோப்பிய கிறித்தவர்கள் தங்களது இறைவன் இயேசுவின் கல்லறை இருக்கும் இடத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆண்டு கணக்கில் நடந்து வந்து தரிசித்து சென்றனர்.வழியிலுள்ள இடங்கள் எல்லாம் இஸ்லாம் ராஜியங்களாக இருந்தன.அங்கே கிறித்தவர்கள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தங்களது மன்னர்களிடம் கொண்டு சென்றனர்.ஐரோப்பியாவிலுள்ள திருச்சபைகள் கூடி இது குறித்து விவாதித்தன.இதற்கு யுத்தத்தால் மட்டுமே முடியும்.கிறித்தவர்களுக்கான புனித இடத்தை மீட்டே ஆக வேண்டும்.என அப்போதைய போப் 'அர்பன் 2 ' அனைத்து ஐரோப்பிய மன்னர்களுக்கும் 1095 ல் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் குடும்த்திற்கு தேவையான பணம்.கடன் தள்ளுபடி மற்றும் குடும்ப பாதுகாப்புக்கு உறுதி அளித்தார்.வீரர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.சொர்க்கம் உறுதி.அவர்களது பெயர் கிறித்தவம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்றும் கூறினார்.அரசியல் , மதம் , பொருளாதார ரீதியாக பல கிறிஸ்தவர்கள் போரிட முன்வந்தனர்.இவர்கள் தங்களது கைகளில் சிலுவையை ஏந்தி போரிட்டதால்' சிலுவைப்போர்' எனப்பட்டது.

முதலாம் சிலுவைப்போர் :

முதலாம் சிலுவைப்போரின் தலைவர் பீட்டர்.

கி பி 1096 ஆம் ஆண்டு பீட்டர் என்ற பாதிரியார் தலைமையில் படை திரண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர்.போகும் வழியில் கண்ணில் கண்ட முஸ்லிம்களையும் , யூதர்களையும் கொன்று குவித்தனர். அவர்களது இடங்கள் நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.ஜெருசலேம் நோக்கி முன்னேறிய படைகளை சிறிதும் எதிர்பாராத அப்போதைய சுல்தான் 'அல் முஸ்தசீர் பிலாஹ் ' தனது படைகளை சிறிது சிறிதாக பிரித்து அனுப்பினார்.யாரையும் கொல்லாமல் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.அங்காங்கே செல்லும் வழியில் இவரது படைகளை அவர்கள் எதிர்கொண்டனர். இறுதியில் சிலுவைப்போர் வீரராகளால் மாபெரும் வீரர் என தருதப்பட்ட தளபதி 'ரெஜினால்ட் ' உட்பட பலர் சரணடைந்தனர்.எனவே மற்றவர்கள் தப்பி ஓடினர் கடைசியாக .இப்போரில் தோல்வியும் அவமானமுமே மிஞ்சியது.இப்போரில் கலந்து கொண்டவீரர்கள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தனித் தனி குழுவாக புறப்பட்டு வந்து ஆங்காங்கே போரிட்டனர்.ஒருங்கிணைப்பு இல்லாததும் தோல்விக்கு ஒரு காரணம்.

இரண்டாம் சிலுவைப்போர் ;

முதலாம் போர் அவமானகரமாக முடிந்ததும் மீண்டும் ஒரு பெரிய படை ஜெருசலேம் நோக்கி அனுப்பப்பட்டது.ஆனால் அவர்கள் ஐரோப்பாவின் ஹங்கேரியைத் தாண்டும் முன்பே குடி கேளிக்கைகள் என் கொண்டாடி மகிழ்ந்தனர்.இவர்களது கீழ்தரமான நடவடிக்கைகளைத் கண்ட மக்கள் அவர்களை அடித்து கொன்றனர்.

இரண்டு முறை தோல்வி அடைந்ததால்..இம்முறை பிரான்ஸ் , இங்கிலாந்து , ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் பயிற்சி பெற்ற படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஏழரை லட்சம் வீரர்கள் ,கண்ணில் கண்ட அனைவரையும் வெட்டி சாய்த்தனர்.இவர்களில் யூதர்களும் அடங்குவர்.முஸ்லிம்களால் மட்டுமே ஆபத்து என நினைத்த யூதர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் துருக்கியின் 'ஆன்டியோக் ' என்ற கோட்டை முற்றுகையிடப்பட்டது.கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் முற்றுகை நீடித்தது.கோட்டைக்குள் ஒரு ஆண்டுக்கு தேவையான அனைத்தும் இருந்தன.அந்த இடைப்பட்ட காலத்தில் சுல்தான் புதிதாக படைகளை உருவாக்கி பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்.ஆனால் வெளியே நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. வரலாற்று ஆசிரியரான மில் ஜான் ஸ்டூவர்ட் என்பவர் கூறுகிறார்.அதாவது உணவில்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று பிணத்தை புசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கோட்டையின் தளபதி' ஃபிரஸ் என்பவன் வெளியே இருந்த அதிகாரிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கோட்டை கதவைத்திறந்து மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் இழைத்தான்.யாரும் அதுவரை கண்டிராத கொடுமை நிகழ்த்தப்பட்டது.கிட்டத்தட்ட 70,000 ஜெருசலேமியர்கள் கொல்லப்பட்டனர்.இதில் அங்கு வாழ்ந்த கிறித்தவர்களும் அடக்கம்.

மிஷாட் Nafed Khaled mishad என்ற ஆசிரியர் நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலத்தின் வாயிலாக இப்படி கூறுகிறார்."கொல்லப்பட்டவர்களது ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் ஆழத்தில் குதிரை கடிவாளத்தை எட்டி நின்றது."

இத்தகைய கொடூரமான படுகொலை நிகழ்த்தப்பட்டதற்கு திருச்சபைகளின் தலைவரான 'போப் ' பா ? அல்லது கிறித்தவ மதத்தின் மீது கொண்ட வெறியா ? இத்தனைக்கும் முகமது நபிகள் முதற்கொண்டு அவர் வழி வந்தோர் ,அனைத்து மதங்களும் ஒன்று.அனைவரும் ஆப்ரஹாம் என்ற இப்ராஹிமின் வழிவந்தோரே..அனைவருக்கும் பொதுவான புனிதத் தலம் ஜெருசலேம் , என்ற எண்ணத்தை விதைத்து ,அனைவரின் வழிபாட்டுக்கும் பாதுகாப்பு வழங்கவே செய்தனர்.பின்னும் எப்படி இப்படி ஒரு வன்மம்?ஒரே காரணம் புனிதத் தலம் ஜெருசலேம் தமக்கு மட்டுமே என்ற எண்ணம்.

இப்போது அவர்களது இறைவன் இருந்த ஜெருசலேம் அவர்கள் கையில்..இதன் பிறகு மேலும் திரிபோலி ,டைர் , சிடான் முதலிய இடங்களையும் கைப்பற்றினர்.எப்படியும் தாங்கள் தாக்கப்படுவோம் என்று எதிர்பார்த்த முஸ்லிம்கள் கிளம்பிச் சென்று விட , தங்களுக்கு எதுவும் ஆகாது என்று நினைத்து தங்கியிருந்த யூதர்கள், இவர்கள் வருவதை அறிந்து கோவில்களில் குடும்பத்துடன் பயந்து ஒளிந்து கொண்டிருந்தனர்.அங்கேயும் கோவிலுக்குள் நுழைந்து பெண்கள் , குழந்தைகள் என அனைவரையும் கொன்று கோவிலுக்குள் குவித்து தீ வைத்து கோவில்களை எரித்தனர்.மற்ற இடங்களில் இருந்த கிறிஸ்தவர் அல்லாதோர் கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாட அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பிறகு வந்த புதிய கலீஃபா முகமது படைகளை திரட்டி 1103 முதல் 1109 வரை ஆறு ஆண்டுகள் , சிறிது சிறிதாக முன்னேறி ஜெருசலேமைக் கைப்பற்றினார்.மீண்டும் படையெடுப்பு நிகழ்ந்தது.அதாவது ஒரு படை வந்து விட்டுச் சென்றால் அவர்களின் இடத்தை நிரப்ப அடுத்த படை .. இப்படியே வந்த வண்ணம் இருந்தார்கள்.

மூன்றாவது சிலுவைப்போர்;

கி பி 1182 ல் அப்போதைய சுல்தான் சலாவுதீன் குறு நில மன்னர்.ஜெருசலேமை மீட்க படையெடுப்பபை நிகழ்த்தினார்.மிகச்சிறந்த வீரரான இவரிடம் மத்திய ஆசியா முழுவதும் மண்டியிட்டு சரணடைந்தன.1187 ல் சிரியாவின் 'டைபிரியஸ்' என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் 10,000 கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர்.பின் ஒவ்வொன்றாக கைப்பற்றி ,கடைசியாக ஜெருசலேத்தை அடைந்தார்.புனித பூமியாக கருதிய அங்கே ரத்தம் சிந்த விரும்பாத சுல்தான் அனைவரும் சரணடைந்து விட்டால் மட்டும் போதும்.யாருக்கும் எந்த துன்பமும் நேராது.மாறாக தனது நிலத்தையும் , பணத்தையும் அனைவருக்கும் வழங்கி விட்டு தான் திரும்பி போய் விடுவதாக வாக்களித்தார்.

இப்படியும் ஒரு மன்னன் இருக்க முடியுமா? என அங்கிருந்த மக்கள், .சிலுவைப்போரில் பங்கேற்ற வீரர்கள் முதற்கொண்டு ஆச்சரியம் அடைந்தனர்.வீரர்களும்.மக்களும் இதை விரும்பினாலும் ஆட்சியில் உள்ளோர் மறுத்து விட்டதால் போர் தவிர்க்க முடியாததாகிப் போனது.யுத்தம் ஆரம்பித்து சிறிது காலம் தாக்குபிடித்தால் , ஐரோப்பிய படைகள் உதவிக்கு வந்துவிடும் என நினைத்திருந்தனர்.பல மாதங்கள் முற்றுகை தாக்கு பிடித்தும் , எதிர்பார்த்த படைகள் வராததால் அமைதி தூது அனுப்பினார்கள்.

மனம் இறங்கிய சுல்தான் மக்களுக்கு பல சலுகைகளை வழங்கினார்.இனி ஜெருசலேம் சுல்தானின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.ஆனாலும் அனைத்து மக்களும் சமமாக வாழ உரிமை உண்டு.மதவித்தியாசம் பார்க்கப்படாது என்றதுடன் அங்கிருந்த மன்னன்., அவரது மனைவி மற்றும் சிலுவைப்போரில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களையும் மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.அவ்வாறு கிளம்பிச் சென்ற வீரர்கள் அவர்களின் குடும்பத்தினரை எந்த இடத்திலும் , கிறித்தவர்கள் பகுதிகளில் கூட யாரையும் உள்ளே நுழைய விட வில்லை.பலர் பசியாலும் குளிராலும் இறந்ததைக் கேள்விப்பட்ட சுல்தான் , அவர்கள் 'டைர்',ல் தங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்.

ஆனால் நன்றி மறந்த அவர்கள் மீண்டும் படை திரட்டி போரிட முடிவு செய்தனர்.போப் ஆண்டவரின் உத்தரவின் பேரில் ஜெர்மனியின் மன்னர் 'ஃரடரிக் பார்பரோஸா 'இங்கிலாந்து மன்னர் 'முதலாம் ரிச்சர்டு 'பிரான்ஸ் மன்னர் 'பிலிப் அகஸ்டஸ் 'என கூட்டாக படையெடுத்து வந்தனர்.

மூன்றாவது சிலுவைப்போர் என வர்ணிக்கப்பட்ட கொடுமையான இப்போர் சிரியாவின்'ஏக்ர் 'என்னும் கோட்டை முற்றுகையுடன் ஆரம்பித்தது.மிகப்பெரும் அரசர்கள் மூவர் இணைந்த மிகப்பெரிய படையை தனிஒருவராக எதிர்கொள்ள தீர்மாணித்தார்.இந்நிலையில் ஜெர்மனியின் மன்னர் ஒரு ஆற்றில் விழுந்து இறந்ததும்.அவரது இடத்தில் 'ஹென்றி 'என்ற மாவீரனை ஜெர்மனி அனுப்பி வைத்தது. வெற்றி தோல்வி இன்றி நடந்த இந்த யுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

கோட்டை மீது சிலுவைப் போர் வீரர்கள்.

இதை பயன்படுத்தி மேலும் கப்பல்களில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் மன்னர் இருவரும் காய்ச்சலால் அவதிப்படுவதை கேள்விப்பட்ட சலாவுதீன்.. அவர்களுக்கு அசதியைப் போக்க மூலிகைச்சாறும்.காய்ச்சலைப் போக்க மருந்தும் கொடுத்தனுப்பினார்..

உடல்நலம் தேறியதும் மீண்டும் யுத்தம். ஆரம்பமானது.சுல்தானுக்கு தனது படைவீர்கள் மீண்டும் மீண்டும் உயிரிழப்பதை விரும்பாமல் "ஒருவரையும் கொல்ல மாட்டோம்" என்று உத்திரவாதம் தந்தால் 'ஏக்ர் 'கோட்டையை விட்டுக் கொடுப்பதாக் கூறினார்.அவர்களது சம்மதத்துடன் ஏக்ர் கோட்டை சிலுவைப்போர் வீரர்கள் வசமானது.ஆனால் உள்ளே நுழைந்து கோரமான படுகொலைகளை நடத்தினார்கள்.அனைத்து வீரர்களையும் நிற்க வைத்து அவர்களது தலைகள் சீவப்பட்டன.

இந்நிலையில் இங்கிலாந்து மன்னருக்கு இவ்வளவு அன்பு நிறைந்த மன்னருடன் சண்டையிட மனமில்லாது , ஒரு கட்டத்தில் மன்னர் ரிச்சர்டின் விதவை சகோதரியை ,சலாவுதீன் சகோதரரான 'சைபுதின் 'திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் சேர்ந்தே ஜெருசலேமை ஆளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இது மட்டும் நடந்திருந்தால் சரித்திரத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்.கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ வழி பிறந்திருக்கும்.

இதனை திருச்சபையும் ,போப்பும் கடுமையாக எதிர்த்தனர்.வேறு வழியில்லாமல் மீண்டும் யுத்தம் ஆரம்பமானது.சுல்தானின் படைகளை வெல்ல முடியாது என்ற நிலை இருந்தது.எனவே ரிச்சர்ட் "ஜெருசலேமை மட்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.நாம் நண்பர்களாக இருக்கலாம் "என்றார்.. சுல்தான் மறுத்து விட்டார்".நண்பர்களாக இருக்கலாம்.ஆனால். ஜெருசலேம் கிடையாது.'

கடைசியாக :

இதன்பின் சுல்தான் சலாவுதீன் மரணமடைந்தார்.முன்பு போல சிலுவைப்போரில் அரசுகளுக்கு விருப்பம் இல்லை..சிறு சிறு போர்கள் நடை பெற்றாலும் சொல்லிக் கொள்ளும் படி எதுவும் நடக்கவில்லை.ஒன்றை மறந்து விட்டோம்.இத்தனை யுத்தங்கள்.மரணங்கள் இம்மண்ணில் நடத்தும் , யூதர்கள் மட்டும் எங்கோ தலை மறைவாகி விட்டனர்.இத்தனைக்கும் அவர்களை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் அவர்களை நல்லபடியாகவே நடத்தினர்.ஆபத்தான நேரத்தில் கை கொடுக்காமல் மறைந்து கொண்ட யூதர்களை முஸ்லிம்கள் வெறுக்கும் நிலை உருவானது .இவ்வேளையில் மங்கோலிய ர்களது வலிமை பொருந்திய படைகள் பல நாடுகளை துவம்சம் செய்து கொண்டிருந்தன..அவர்களின் வருகைக்காக மத்திய ஆசியா காத்திருந்தது.

இதுவரை நடந்தது மட்டுமே புனிதப்போர்.அதாவது புனிதம் என்ற பெயரில் காட்டு மிராண்டித் தனத்தை கட்டவிழ்த்து விட்ட போர். மதத்திற்கான சண்டை அல்ல.புனிதத்தலமான ஜேருசலேம் உரிமையை மீட்டெடுப்பதற்கான சண்டை பற்றியது.

இதன் பிறகு மதத்தை பரப்புவதில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன.

" பிரசாரங்களில் சாமர்த்தியத்தால் கிறிஸ்தவம் பரவியது.வாள் முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்ற கருத்து உருவாகும் அளவுக்கு உலகம் மாறிப்போனது.

தற்போது வரை மதத்தின் பெயரால் நடைபெறும் 'ஜிஹாத் ' போன்ற மனிதாமானமற்ற செயல்களால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் காரணமே இல்லாமல் கடுமையான விளைவுகளை சந்தித்துக் கொண்டிருப்பதோடு மிகப்பெரிய விலை கொடுத்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இவை கண்டிப்பாக இறைவனால் விரும்பப்படாதது…எந்த ஒரு மதமும் வன்முறையை தூண்டுவதில்லை.அப்படி தூண்டினால் அது சரியான மதமாக இருக்க முடியாது.

இவை மதங்கள் சார்ந்தவை என்று கருதாமல் வெறும் தீவிரவாத செயல்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை விதைத்து உலகையே அச்சுறுத்தி வரும் பல குழுக்கள் தேடி தேடி கருவறுக்கப்பட வேண்டியவை.

கண்டிப்பாக எந்த மதத்திற்கும் ஆதரவாக பதிவு செய்யப்பட்டதல்ல.வரலாற்றில் நடந்தவை மட்டுமே பதியப்பட்டுள்ளது..

பொறுமையாக படித்த அன்பர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.தவறுகளை சுட்டிக் காட்டலாம்.

படங்கள் Getty images.

மூலக்கருத்து ' நிலமெல்லாம் ரத்தம்.'


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. ராங்கன் அருணாச்சலா அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!

No comments:

Post a Comment