தமிழக மக்களை பெயரின் பின்னால் குடி (சாதி) பெயரை நீக்கவைத்தது தமிழகத்தில் வாழும் பிறமொழி மக்களின் சூழ்ச்சி என்றும் பிரித்தாளும் தந்திரம் என்றும் சொல்கிறார்களே. அதை பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் சாதி ஒழிப்பு (அ) சமத்துவத்தை விரும்புகிறீர்களா?
முதலில் ஒன்றினைத் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். சாதி என்பதும் குடி என்பதும் ஒன்றல்ல. அவையிரண்டும் வெவ்வேறானவை. முதலில் சாதியினைப் பார்ப்போம்.
தமிழர்களிடம் சாதியின் வரலாறு :
சாதி (Caste) என்பது பிறப்பிலடிப்படையிலான தொழிற் பாகுபாட்டினையும், அக மணமுறையினையும் கெட்டியாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மக்களின் குழுக்களைக் குறிக்கும். இங்கு பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை, மதப்பின்புலம் என்பன சாதியின் அடிப்படைக் கூறுகளாகும்.
“தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?” என்ற கேள்விக்கான பதில் சாதி என்ற சொல்லிலேயே உண்டு, அதாவது சாதி என்ற சொல்லே தமிழல்ல. அது ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே (ஜாதகம்- சாதகம் போன்று).
ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி/ சாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை (குலம், குடி போன்ற தமிழ்ச்சொற்களின் பொருளினைப் பின்பு பார்ப்போம்).
சொல்லின் பொருளைப் பார்த்தோம். இப்போது இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம். சாதி என்பது பிறப்பினடிப்படையிலானது என முன்னரே பார்த்தோம். இந்த நிலையில் பின்வரும் குறளினைப் பாருங்கள்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – (குறள் 972)
இக்குறளானது பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.
அடுத்ததாக சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.
“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”
இப்பாடலானது தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை.
இந்த ஒரு பாடல் மட்டுமன்றி சங்கப் பாடல்களில் பலவற்றிலும் {எ.காட்டு- குறுந்தொகை 167 ‘முளிதயிர் பிசைந்த’ , கலித்தொகை 107 ‘அன்னை நோதக்கதோ இல்லைமன் நின் நெஞ்சம்’,….} ஒரு ஆயத்திலுள்ள தலைவியினை ஆயத்திற்கு வெளியேயிருந்து வரும் ஒரு தலைவனே விரும்புகிறான், அதனால் சங்ககாலத்திலிருந்தது புறமணமுறையே என பேரா .கா.சிவத்தம்பி “சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்” எனும் நூலில் 85-86 பக்கங்களில் நிறுவுகிறார்.
சங்க காலத்தில் புற மணமுறை காணப்பட்டதனை மேலே பார்த்தோம். அதே போன்று பிறப்பிலடிப்படையிலான தொழிலினை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஐங்குறுநூறுவில் இடம்பெறும் பின்வரும் பாடல் காட்டுகின்றது.
‘முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
பாணன் போலப் பல பொய்த்தல்லே.’ – (ஐங்குறுநூறு 47)
இப் பாடலில் பாட்டுப்பாடும் பாணரே மீன்பிடித்து ஊரில் கொண்டு சென்று, மீனுக்கு நிகர் பயறோ, நெல்லோ கொடுத்துப் பண்டம் மாற்றிக்கொண்ட நிகழ்வினை ஐங்குறுநூறு காட்டும்.
அதே போன்று நக்கீரப்புலவரிற்கோ புலவர் பணி, தந்தைக்கோ கணக்காயர் பணி; புலவரான சீத்தலைச் சாத்தனாரின் தந்தை கூலவாணிகம் தொழில் செய்பவர். இவ்வாறு பல சான்றுகள் சங்ககாலத்தில் பிறப்பிலடிப்படையிலான தொழில் காணப்படவில்லை என்பதனை எடுத்துக்காட்டும்.
மேற்கூறியவற்றை உற்றுப் பார்த்தால் சங்ககாலத்தில் நிலவிய குடி / குலம் என்பதற்கும் இன்றைய சாதி முறைக்குமுள்ள வேறுபாட்டினை அறிந்துகொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் பழங்கால குடிகளிடம் அகமணமுறையோ / கட்டாய பிறப்பிலடிப்படையிலான தலைமுறைத் தொழில்முறையோ இல்லை.
தமிழர்களிடம் சங்ககாலத்தில் காணப்பட்ட குலக்குழுக்கள் (tribes), குடிகள் என்பவற்றைச் சாதியுடன் போட்டுக்குழம்பத்தேவையில்லை, ஏனெனில் அவை உலகெங்கும் பழங்குடி மக்களிடையே காணப்பட்ட பிரிவுகள் போன்றனவையே. அவற்றில் அகமணம், பிறப்பிலடிப்படையிலான தொழில் கட்டாயம் என்பனவில்லை. இதுவே சாதிக்கும்-குடிக்குமுள்ள வேறுபாடாகும். உலகில் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் குடி, குலம் என்பன காணமற்போய்விட்டன. அவற்றினை மீள் உருவாக்கம் செய்ய முடியாது. அதற்கான தேவையுமில்லை.
இலக்கியச் சான்றுகளையும் விட முதன்மையானது அகழ்வாய்வுச் சான்றுகளாகும். கீழடி அகழ்வாய்வில் முதல் நான்கு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட 12,000 -இற்கும் மேற்பட்ட பொருட்களில் எதுவுமே சாதி – மத அடையாளத்தைக் குறிக்காமலிருப்பது, நமது ‘சங்க காலத்தில் சாதி இல்லை’ என்ற கூற்றினை வலுப்படுத்துகின்றது.
சாதி என்ற சொல்லே சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.
“நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “-(வேனில் காதை41)
அடுத்ததாக மணிமேகலையில் இடம்பெறுகின்றது.
“நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”- (சமயக்கணக்கர் 23).
சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை. பார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது.
குடிகள் சாதிகளாக்கப்பட்ட வரலாறு :
தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன. மனிதர்களின் ஆதித்தொழிலான வேட்டையினைச் செய்தவர்கள் வேடர்கள். அந்தவகையில் பார்த்தால் நமது முன்னோர்கள் யாவருமே வேடர்கள்.
முல்லையில் மேய்ச்சல் வாழ்வில் ஆடு மாடுகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நமக்குப் பெயர் கோனார். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் குறவர்கள். நமது முன்னோர்கள் அத்தனை பெரும் குறவர்களாக இருந்தவர்கள் தான். காட்டிற்கும் மலைக்கும் இடையிலே வாழ்கின்றவர்களிற்கு இடையர்கள் என்று பெயர். மருத நிலத்தில் வேளாண்மை செய்யும் போது அங்கு மேட்டுப் பாங்கான நிலத்தில் குடில்களை அமைத்துக்கொண்டு, பள்ளத்தில் இறங்கி வேலை செய்தோர் பள்ளர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் பள்ளு என்றால் உழவு என்ற பொருள் உண்டு. பின்னரே உழவர்கள் வேளாளர்கள் எனப்பட்டனர். பறையோர் என்பது அரசரின் தூதுவர்களையே குறிக்கும்.
இன்றும் ஈழத்தில் பறைதல் என்றால் பேசுதல் என்ற பொருள் உண்டு. அரசரின் ஆணைகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், தூது செல்லல், போரில் முன்னின்று பறை முழங்கிப் போரினைத் தொடக்கி வைத்தல் எனப் பல சிறப்பான பணிகளை ஆற்றுவோரே ‘பறையர்’ எனப்பட்டார்கள். இத்தகைய சிறப்பான பணிகளை மேற்கொண்டமையாலேயே புறநானூற்றுப் பாடலில் (புறம்335) ‘பறையர் சிறந்த குடி’ எனப் பாடப்படுகின்றது. பறைக்கு பலியிடப்படுவதன் மூலம் தெய்வத்திற்கு நிகராகப் பறை கருதப்பட்டதனை சங்ககால பத்திற்பத்தில் இடம்பெறும் பின்வரும் பாடலில் காணலாம்.
“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்”- (பதி. 17: 6-7)
சங்கமருவிய காலத்தில் கூட சிலப்பதிகாரத்தில் பறையின் பெருமை பேசப்படுகின்றது.
“பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்” – நடுகல் காதை வரி 76-77 {பொருள்- சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது}.
மேற்கூறியவை எல்லாம் குடிகளே தவிர, சாதிகளன்று.
இத்தகைய தமிழ்க் குடிகளினையே, பார்ப்பனியமானது தனது நான்கு வர்ணக் கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு சாதிகளாக்கியது. இத்தகைய மாற்றம் ஒரே நாளில் இடம்பெறவில்லை. மாறாக பல நூற்றாண்டுகள் கடந்தே இப் படிமுறை மாற்றம் ஏற்பட்டது.
முடிவுரை:
மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தமிழர்களிடம் `சாதி`யினைக் கொண்டு வந்து சேர்த்ததே வேற்றினத்தவர்கள் என்பது தெளிவாகின்றது. இன்னொரு செய்தி யாதெனில் பழந்தமிழர்களின் பெயர்களில் எதுலுமே சாதிப் பின்னொட்டு காணப்படமாட்டாது. இதனை நீங்கள் சங்க காலப் புலவர்கள், பழைய மன்னர்கள் ஆகியோரின் பெயர்களையும் கீழடியில் வெளிவந்த பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பழந் தமிழ்ப் பெயர்களில் ஊரினையோ அல்லது வேறு சிறப்பியல்புகளோ முன்னொட்டாகவே காணப்படும் {மதுரைக் கணக்காயர் , கணியன் பூங்குன்றனார்}. இவற்றிலிருந்து சாதிப் பின்னொட்டு (வால்) என்பது இடைக்காலத்தில் திணிக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவாகின்றது. அது வெட்டப்படவேண்டிய ஒன்று. வெட்டியது நல்ல செயலே. எனவே அதனை யார் செய்தாலும் (தமிழர்/ பிறர் ) அது வரவேற்கப்படவேண்டியதே. இந்தியாவிலேயே சாதி வால் (சாதிப் பெயர்) இல்லாதவர்களாக தமிழர்கள் இருப்பது பெருமையே. எம்மைப் பார்த்து ஏனையோரும் மேலேறி வரவேண்டுமே தவிர, நாம் இறங்கிப் போய் அவர்களுடன் இணைய வேண்டியதில்லை. ஏனெனில் நாம் எல்லோரும் உயர இன்னமும் இடமிருக்கின்றது.
சாதி ஒழிப்பு என்பது பிரித்தாளும் தந்திரமல்ல, மாறாக சாதி அமைப்பு முறை தான் பிரித்தாளும் தந்திரமாகும். சாதி ஒழிப்பு என்ற சமத்துவத்தை மனித இயல்பு படைத்த யாருமே விரும்புவார்கள். அதனையே நானும் விரும்புகின்றேன்.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இளங்கநாதன் குகநாதன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!
No comments:
Post a Comment