சிந்து சமவெளி நாகரிகத்தை போல், மெசொப்பொத்தேமியன் நாகரிகத்தை போல், சீனாவின் நாகரிகத்தை போல் எந்த ஒரு தொன்மையான நாகரிகத்தையும் மங்கோலியா கொண்டிருந்ததில்லை, தொன்மையான பல நாகரிகத்தில் உள்ள பல பிரம்மாண்டமான கட்டிடங்களோ கலைகளோ மங்கோலியாவில் இருந்ததில்லை. துணி நெய்யும் கலையோ, உலோகத்தை கையாளும் அறிவோ, மண் பாண்டங்கள் செய்யும் திறனோ, ஓவியங்கள் வரையும் நிபுணத்துவமோ அவர்களிடம் இருந்ததில்லை. எழுதக்கூட பலருக்கு தெரிந்ததில்லை. இருப்பினும் அத்தனை தொன்மையான நாகரிகங்கள் நிறைந்த பகுதிகளையும் மங்கோலியர்கள் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
சீனா முதல் (பசிபிக் கடல் முதல்) மத்திய தரைக்கடல் கடல் (Mediterranean sea) வரை அவர்களின் ஆட்சி படர்ந்திருந்தது. 400 வருட காலத்தில் ரோமானியர்கள் கைப்பற்றிய பகுதியை விட அதிகமான பகுதிகளை மங்கோலியர்கள் 25-தே வருடத்தில் கைப்பற்றினார்கள்.
இத்தகைய குடிலில் வசித்த ஒரு இனம்
எப்படி இத்தகைய கோட்டை கட்டும் அளவுக்கு அறிவு பெற்ற ஒரு இனத்தை
File:Engelsburg und Engelsbrücke abends.jpg
File:Persepolis east side at spring.jpg
(உலோகத்தை கையாளும் திறன் கொண்ட) இத்தகைய கவசங்களுடன் போரிட்ட சாம்ராஜ்யங்களை எதிர்த்து
50-தே வருடத்தில் எப்படி இத்தகைய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது?
செங்கிஸ் கான் காலத்தில் இன்றைய மங்கோலியா என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளவர்கள் புல்வெளி பழங்குடி மக்களாக (steppe tribe) பல பிரிவுகளாக இருந்தனர்.
பட உதவி:கூகிள் தேடல்
பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும், பெண்ணின் பெற்றோருக்கு ஆண்கள் வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் அங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் வசதி குறைந்த ஆண் மகன்கள் பிறரின் மனைவியை அபகரித்துக்கொண்டு வருவதும், பெண்களும் பழைய கணவன்மார்களை மறந்து கயவனை கணவனாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த நிகழ்வுகளும் அங்கு உண்டு.
செங்கிஸ் கானின் தாயாரும் திருமணத்திற்கு பிறகு, யேசுகை (Yesugei) என்பவரால் அபகரிக்கப்பட்டவரே. செங்கிஸ் கானின் மனைவியான Börte என்பவரும் திருமணத்திற்கு பிறகு அபகரிக்கப்பட்டார், பின்னர் செங்கிஸ் கான் Börte-ஐ கயவர்களிடம் இருந்து மீட்டுக்கொண்டு வந்த வேளையில் அவர் கர்ப்பம் தரித்திருந்தார். Börte-யின் முதல் புதல்வனான ஜோச்சி (Jochi) தனக்கு பிறந்தவரா என்ற ஐயம் செங்கிஸ் கானுக்கு கடைசி வரை இருந்தது. இருப்பினும் அவர் ஜோச்சியை தனது மகனாகவே பாவித்தார்.
ஒவ்வொரு இனமும் ஒருவருக்கொருவர் பெண்ணையும், பொன்னையும் களவாடியவேளையில், செங்கிஸ் கான் சில புதிய நடைமுறைகளை புகுத்தினார்.
- செங்கிஸ் கான் கால் ஊன்றிய காலம் முதல், பெண்களை களவாடும் முறைக்கு தடை விதித்தார்.
- கைப்பற்றிய இனத்தின்/ பகுதியின்/ ராஜ்யத்தின் முக்கிய தலைகளை மட்டும் கொன்றுவிட்டு, ஏனையோரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
- பிற தேசத்து பெண்களை தனது தேச மக்கள் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டனர். இதன் மூலம் புதிய உறவுகள் தோன்றியது.
- பெரிய நாட்டை/ பகுதியை தன்னுடன் இணைத்த வேளையில், அந்நாட்டின் பெண்களை செங்கிஸ் கான் திருமணம் செய்துகொண்டார்.
- தனது குடும்பத்தினருக்கு பதிவிகளை வழங்குவதை விட, தகுதியின் அடிப்படையில் தனது நாட்டில் உள்ள மக்களுக்கு பதவிகளை வழங்கினார்.
- பிற நாட்டை கை பற்றும் வேளையில், ஒவ்வொரு வீரரும் பொருள்களை கொள்ளை அடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினர். இதனால் எதிரிகள் தப்பித்து, பின்னர் மீண்டும் தாக்க வந்தனர். ஆனால் செங்கிஸ் கான் இந்த வழக்கத்தை மாற்றி அமைத்தார். முதலில் எதிரிகளை முற்றிலுமாக துவம்சம் செய்யப்பட்டனர், பின்னர் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. எந்த ஒரு போரையும் ஒரு முறைக்கு மேல் புரியக்கூடாது என்பதில் செங்கிஸ் கான் தெளிவாக இருந்தார்.
- பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் செங்கிஸ் கானின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. தனது பங்கை எடுத்துக்கொண்ட பின், அனைத்தும் சமமாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் மக்களும் படை வீரர்களும் விசுவாசமாக இருந்தனர்.
- போரில் இறந்த வீரர்களின் விதவை பெண்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் தனது காலத்திற்கு பின்பும் செங்கிஸ் கான் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வார் என்ற எண்ணம் போர் வீரர்களிடம் ஏற்பட்டது. குடும்பத்தை மறந்து மன்னருக்காக போரிட வீரர்கள் தயாராக இருந்தனர்.
ராணுவ முறை:
10 நபர் = 1 குழு (Squad)
10 குழு = 1 கழகம் (Company)
10 கழகம் = 1 பட்டாளம் (Battalion)
10 பட்டாளம் = 1 டுமேன் (Tumen)
10 நபர் கொண்ட குழுவில் பல இன மக்களை இடம்பெற செய்தார். அவர்கள் ஒன்றாக வசிக்க வேண்டும், ஒன்றாக பயிற்சி பெறவேண்டும், போர் களத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கழகத்திலும், பட்டாளத்திலும், Tumen-யிலும் உள்ள படை வீரர்களின் உறவினர்கள் செங்கிஸ் கானின் கீழ் இருந்த ஒரு Tumen-னில் இருந்தனர். இதனால் மற்ற படை பிரிவுகளில் என்ன நடக்கிறது என்ற விஷயம் செங்கிஸ் கானின் காதுகளுக்கு எளிதில் எட்டியது. ஒவ்வொரு படை வீரரின் உறவினரின் எவரோ ஒருவர் செங்கிஸ் கானின் நேரடி படை பிரிவில் இருப்பதால் வீரர்கள் அனைவரும் ஆளுமைக்கு கட்டுப்பட்டு இருந்தனர்.
மங்கோலிய வீரர்கள் அணியும் ஆடையில், முன் புறம் மட்டுமே அம்பு துளைக்காத வகையில் திடமான மூலப்பொருளால் செய்யப்பட்டிருக்கும், பின் புற ஆடை அம்பு துளைக்கும் வகையில் இலகுவாகவே இருக்கும். எவரும் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பதே காரணம்.
இரவு பொழுதில் மலையில் தங்கும் ஒவ்வொரு படைவீரரும் 5 camp fire ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கமும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் படையின் எண்ணிக்கை மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டது. எதிரிகளின் உறுதியையும் குலைக்க உதவியது.
குதிரையும் போர் தந்திரங்களும்:
மனிதர்களை விட மங்கோலியாவில் குதிரைகளே அதிகம் இருந்தது. (ஒரு நபருக்கு சுமார் 10 குதிரைகள்) போரில் குதிரைகளையே மங்கோலியர்கள் பயன்படுத்தினர் என்பது பலர் அறிந்ததே. குதிரைக்கு புல் (உணவு முக்கியம்) ஆதலால் ஒரு நாட்டின் மீது படையெடுக்க போகும் முன், ஒரு சிறு குழு, எதிரி நாட்டின் எல்லை வரை சென்று படையெடுப்புக்கான வழி தடத்தை (புல்வெளி நிறைந்த பகுதிகளாக) தயார் செய்துகொள்வர்.
வழியில் விவாசகிகள் எவராவது வசித்துவந்தால், குடும்பத்துடன் அவர்களை தீர்த்து கட்டி விடியவர். சில நாட்களில் பயிர்கள் இறந்து புல் முளைக்க ஆரம்பித்து விடும். அதே போல் படையெடுப்புக்கு போவதற்கு ஒரு வழியும், திரும்ப வருவதற்கு மற்றொரு வழியையும் ஏற்படுத்திக்கொள்வர். (புல் தான் காரணம்)
மங்கோலியர்கள் ஒரு ராஜ்யத்தை தாக்கும் முன், அவர்களின் மன வலிமையை முதலில் தகர்த்துவிடுவார். அருகில் இருக்கும் சிறு சிறு ஊர்களை முதலில் சூறையாடி, மக்களை கொடுமைப்படுத்தி, அவர்களை ஓட விடுவார். மங்கோலியர்களின் அடுத்த இலக்கை நோக்கி ஓடும் இம்மக்கள், தங்களுடன் அந்த கோர நிகழ்வுகளின் நினைவுகளையும் எடுத்து செல்வர்.
கல் சுவர் நிறைந்த கோட்டைகளை தகர்ப்பதற்கு பதிலாக, நெருப்பு கல் குண்டுகளை வீசிவிட்டு, தாக்குதல் நடத்தபோவதை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு. கோட்டைக்கு முன் (அம்பு பாயும் தூரத்திற்கு அப்பால்) குடில் அமைத்து சில நாட்கள் இருந்து, பின்னர் குடில்களை காலி செய்து விட்டு கிளம்பியதை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அருகில் பதுங்கி இருப்பர். காலியாக இருக்கும் குடிலை பரிசோதிக்கவும், அதில் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க ஒரு சிறு குழு கோட்டையின் கதவை திறந்து வெளியே வரும்போது, மங்கோலியர்கள் கோட்டைக்குள் புகுந்து துவசம் செய்துவிடுவார். சில சமயம் பாயும் ஆற்றின் வழியை கோட்டையை நோக்கி திருப்பி விடுவதும் உண்டு.
காலாட்படை, குதிரைப்படை என்று பல நாடுகள் தனது படைகளை வைத்திருக்கும் வேளையில், மங்கோலியர்கள் குதிரையை மட்டுமே நம்பி இருந்தனர். எண்ணிக்கையில் அதிகமான அளவில் உள்ள நாட்டின் மீது படையெடுக்கும் போது, எதிரியை சீண்டிவிட்டு குதிரையில் ஓட ஆரம்பித்துவிடுவர். துரத்தி செல்லும் எதிரியின் குதிரைப்படை, குதிரையின் வேகத்திற்கு ஏற்றவகையில் சிதறி ஓடும், படையின் அடர்த்தி குறையும்.
File:ArmeriaPalacioRealMadrid.JPG - Wikimedia Commons
இத்தனை கவசங்களுடன் (அதிகமான எடையுடன்) எதிரி நாட்டு குதிரையின் வேகம் குறையும், குதிரைகளும் எளிதில் களைப்படையும். வெற்றி உறுதி என்று மங்கோலியர்களை துரத்தி ஓடும் படை, நேரப்போக்கில் எடையை குறைக்க கவசங்களை கழற்றி எரியும்.
முன்னரே போர்க்களத்தை தேர்வு செய்து காத்திருக்கும் மங்கோலிய படைக்குமுன் சிறிது சிறிதாக வந்து சேரும் எதிரிகள் சுலபமாக களையெடுக்கப்படுவர்.
பின்னர் இந்த துரத்தல் பணி திசை மாறும், தோல்வி பயத்தில் கோட்டையை நோக்கி ஓடும் எஞ்சி இருக்கும் படைகளும் துவம்சம் செய்யப்படும். கோட்டையில் குறைவான எண்ணைக்கையில் உள்ள படைகளும் அழிக்கப்பட்டு, ராஜ்ஜியம் மங்கோலியர்களின் கையில் அகப்படும்.
சில சமயம் துரத்தி வரும் படையை அனைத்து திசைகளிலும் மங்கோலியர்கள் முற்றுகை செய்துவிடுவர். மறதியாக ஒரு பாதையை மட்டும் முற்றுகை இட மறந்ததை போல் ஒரு தோற்றத்தை எதிர்க்கு ஏற்படுத்துவர். இதனை பயன்படுத்தி தப்பிக்கும் எதிரிகள் சுலபமாக களையப்படுவர்.
மோஹி போர் - ஹங்கேரி நாட்டு படைகளுக்கு எதிராக போர் நடந்த இடம். (செங்கிஸ் கானின் மறைவுக்கு பின்னர் நடந்த போர்)
மரக்கோட்டை (மரத்தினால் ஆன கோட்டை):
வழியில் கிடைக்கும் மரங்களை சாய்த்து, அதன் துணையுடன் கோட்டை சுவரை ஒட்டி (அம்பு பாயும் தொலைவுக்கு அப்பால்) உயரமான (மர) சுவரை மங்கோலியர்கள் அமைத்துவிடுவர். சுவருக்கு இந்தப்பக்கம் (மங்கோலியர்கள் பக்கம்) என்ன நடக்கிறது என்பது எதிரி நாட்டுக்கு தெரியாது. சில நாட்களில்/ மாதங்களில் கோட்டையின் உணவு/ நீர் இருப்பு குறைந்து விடும். (அண்டை கிராமங்களை முன்னரே தகர்த்ததால் அந்த கிராம மக்களின் ஜனமும் இந்த கோட்டையில் தான் தஞ்சம் புகுந்திருக்கும்). உணவு தட்டுப்பாடுடன் (கிராம மக்கள் கொண்டு சேர்த்த கதை) பீதியும் இணைத்த தருவாயில், நெருப்பு கல் ஏறி குண்டுகளும், புகையை ஏற்படுத்தும் பொருட்களும் கோட்டைக்குள் வீசப்படும் வீசப்படுவதன் மூலம் மேலும் குழப்பம் எழும். இதனை கைப்பற்றி மங்கோலியர்கள் எளிதில் கோட்டையை கைப்பற்றி விடுவார்.
தோற்கும் நாட்டில் தனக்கு தேவையானவர்களை (பொற்கொல்லர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், etc etc) மங்கோலியர்கள் எடுத்துக்கொண்டு, எதற்கும் உதவாதவர்களை, அடிமையகளாக எடுத்துக்கொள்வார், மர கோட்டை அப்புறப்படுத்தப்படும், அடிமைகளின் துணையுடன் அடுத்த போர்க்களத்திற்கு அவைகள் எடுத்துச்செல்லப்படும்.
ஒரு ராஜ்யத்தில் தொடுக்கப்படும் போர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும் (more than 2 front), இதனால் மூன்றவது இடத்தில் உள்ள இளவரசரால் தனது ஆளுமைக்கு உட்பட்ட இடத்தை விட்டு, போர் புரிந்துகொண்டிருக்கும் இரு இளவரசர்களும் உதவி புரியமுடியாது. மீறி சென்றால் மூன்றவது இடம் தாக்கப்படும். இந்த முறையில் எதிரியின் பலத்தை பிரிப்பதன் மூலம் மங்கோலியர்கள் வெற்றி சுலபமாகும்.
செங்கிஸ் கானின் சிறப்பு: நாடு பிடிப்பதை விட தனது வீரர்களின் உயிரின் மீதே செங்கிஸ் கானுக்கு அதிக அக்கறை இருந்தது. ஒரு சாம்ராஜ்யத்தை தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவர தூதர்கள் அனுப்பி வைக்கப்படுவர், இசைந்த நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றுக்கொண்டு மங்கோலியப்படை பாதுகாப்பு அளிக்கும். தூதர்களை கொன்றவர்களை செங்கிஸ் கான் அழிக்காமல் விட்டதில்லை.
சீனா முதல் அராபிய வரை உள்ள பகுதிகளை தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவந்திருந்தாலும், இரு முனைக்கும் இடையே பாதுகாப்பான முறையில் சுமுக வர்த்தகம் ஏற்படும் வழித்தடத்தை (பட்டுப்பாதை) செங்கிஸ் கான் உறுதிப்படுத்தினார்.
பெருட்கள் பல கிடைத்தாலும், குடில் வாழ்கை முறையையே செங்கிஸ் கான் இறுதிவரை வாழ்ந்து வந்தார். உயிருடன் இருக்கும் போது தனக்கென்று ஒரு பிரம்மாண்ட கோட்டையோ, இறந்த பின் ஒரு கல்லறையையோ அவர் அமைத்துக்கொள்ளவில்லை. செங்கிஸ் கான் உறைவிடம் இன்று வரை கண்டறியப்படவில்லை.
சிந்து நதி வரை படை எடுத்து வந்த மங்கோலிய படை, மேலே தொடர முடியாமல் தோற்கடிக்கப்பட்டது. இந்தியாவின் வெப்பம் காரணமாகவும், காற்றில் உள்ள ஈரப்பத்தினாலும் மங்கோலியர்களின் வில் வலுவிழந்தது, அதனால் அம்பின் (இலக்கின்) துல்லியமும் பாதித்தது.
செங்கிஸ்கான்(பிறப்பு:கி.பி. 1162 - இறப்பு :ஆகஸ்ட் 18, 1227 )
செங்கிஸ்கான் மங்கோலியப் பேரரசை அமைத்த மங்கோலிய பேரரசர். 1206-ல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் கட்டமைத்தார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதில் உலகளவில் பாராட்டப்பட்டவர்.உலகை ஆண்ட பெரும் சாம்ராஜ்யத்தில் செங்கிஸ்கானுடையதும் ஒன்று.
தனது பத்து வயதில் தன் உடன் பிறந்த சகோதரனையே கொலை செய்தான் செங்கிஸ்கான்.தனது 16வது வயதில் செங்கிஸ்கான் போர்டே எனும் மங்கோலிய மலைவாழ் இன பெண்ணை திருமணம் செய்துக் கொண்டான். இதற்கு பிறகு எண்ணற்ற பெண்களை இவன் திருமணம் செய்து கொண்டாலும், போர்டே தான் இவன் ஆட்சியில் பேரரசியாக இருந்தாள்.
மேற்கித்ஸ் என்பவர்கள் போர்டேவை கடத்தி சென்றனர். கேரீத் என்பவர்களது உதவியோடு போர்டேவை காப்பாற்றி வந்தான் செங்கிஸ்கான். இதன் பிறகு தான் செங்கிஸ்கானின் முதல் மகன் பிறந்தான்.
செங்கிஸ்கான் ஒரு ஆணின் வலிமை அவனது குழந்தைகள் பால் என்ற மனப்பான்மை கொண்டிருந்தான். இவனுக்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மனைவிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பல குழந்தைகள் இருந்தனர்.ஆசியாவில் இருக்கும் 8% ஆண்கள் செங்கிஸ்கான்-ன் வழிதோன்றல்கள் என ஓர் புள்ளிவிவரம் கூறுகிறது.
மத்திய ஆசிய இடமாக இருந்த சீன மற்றும் ரஷ்யா-விற்கு மத்தியில் இருந்த நிலப்பரப்பை அங்கிருந்த மலைவாழ் இனத்தினரின் உதவியோடு கைப்பற்றி. மங்கோலிய பேரரசை நிறுவினான் செங்கிஸ்கான்.மங்கோலிய பேரரசு பசிபிக் கடலில் இருந்து கிழக்கு ஐரோப்பியா வரை கைப்பற்றி உலகின் மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது.
ஹிட்லரை விட பலமடங்கு மக்களை படுகொலை செய்திருக்கிறது செங்கிஸ்கானின் இராணுவம். ஒரு சில நாடுகளை கைப்பற்றும் போது ஒட்டுமொத்த மக்களையும் கொன்று குவித்துள்ளான் செங்கிஸ்கான். இவனது ஆட்சிக்கு கீழ் 40 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
பல போர்கள், வெற்றி என தொடர்ந்து சண்டையிட்டு வந்த செங்கிஸ்கான் 1227-ம் ஆண்டு மரணமடைந்தான். ஒருசில கூற்றுகள் இவன் குதிரையால் தூக்கியெறியப்பட்டு இறந்தான் என கூறினாலும் செங்கிஸ்கானின் மரணத்தை பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.
உலகினில் ஆண்ட மன்னர்களுள் மிகவும் வலிமையானவராக இவரை கூறலாம்.
" பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.."
800 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வரிகளுக்கு பொருத்தமாக இருந்த பெயர் செங்கிஸ் கான். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா வரை படையெடுத்து சென்று பல இடங்களை சூறையாடியவர்.
பாம்பை கண்டால் மட்டுமல்லாது, செங்கிஸ் கான் வருகிறார் என்று கேட்டால் மற்ற அரசர்களின் படைகளும் நடக்குமாம்.
காரணம் இவருடைய போர் முறைகள். இவருடைய வாழ்க்கையையே மர்மங்களின் கலவை என்று கூறுகிறார்கள்.
அதனால் பிறந்தது, வளர்ந்தது, மங்கோலியாவை நிறுவியது, ஆட்சிப்பகுதியை விரிவு படுத்தியது, கைப்பற்றிய பகுதிகள் போன்றவற்றை விட்டுவிட்டு சில சுவாரஸ்யமான மற்றும் அந்த மர்மமான கதைகளை மட்டும் எழுதுகிறேன்.
செங்கிஸ் கான் பற்றிய தகவல்கள்:
- ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர்.
- இவருக்கு சிறிய வயதில் நாய் மீது அதிக பயம் இருந்ததாம். மங்கோலிய நாய்கள் மனிதர்களை கொல்லும் அளவிற்கு மூர்க்க தனம் நிறைந்தவை என்று கூறுகிறார்கள்.
- இவர் 9 வயதாக இருக்கும் போதே இவருடைய தந்தை இவருக்கு, இவரை விட ஒரு வயது மூத்த பெண்ணான போர்ட்டே என்பவருக்கு திருமணம் பேசினாராம்.
- செங்கிஸ் கானிற்கு 500 மனைவிகள் என்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் என்றும் கூறுகிறார்கள். (இது மட்டும் அல்ல. இவரை பற்றி எல்லாமே, யார் யாரோ கிளப்பி விட்ட புரளிகளாக இருக்குமோ என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.)
- ஆசியாவில் உள்ள 8% ஆண்கள் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறதாம்.
- ஹிட்லரை விட பல மடங்கு மக்களை படுகொலை செய்திருக்கிறார். 40 மில்லியன் மக்கள் ( உலகின் 11% மக்கள்) இவருடைய ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
- ஆச்சரியப்படும் விதமாக இவருக்கு மத சகிப்புத்தன்மை இருந்தது எனவும் எல்லா மதங்களின் மீதும் இவருக்கும் மதிப்பு எனவும் கூறப்படுகிறது.
- பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.( அதனால் தான் அத்தனை திருமணமா அல்லது இது புரளியா என தெரியவில்லை)
- இவரிடம் தோற்ற அரசர்களை(உயிருடன் இருந்தால்) இவருடைய ராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்
பூமியின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்ததில் பிரிட்டிஷ் அரசுக்கு அடுத்ததாக செங்கிஸ் கான் தலைமையிலான மங்கோலிய பேரரசு இடம் பெற்றுள்ளது.
"என்னடா மர்மம் மர்மம் னு மேல இருக்கு. இன்னும் ஒன்னும் வரலையே" என்று நினைக்காதீர்கள். இதோ உள்ளது. அவருடைய இறப்பிற்கு பின் பகுதி தான்.
1227-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கிஸ் கான் இறந்தார். அப்போது அவருக்கு வயது 65 என்று சிலர் சொல்கிறார்கள். 72 வயதில் இறந்தார் என்றும் சொல்கிறார்கள்.
எந்த வயதில் இறந்தார் என்பது போலவே, அவர் எப்படி இறந்தார் என்பதும் மர்மம்.
- சீனாவின் மேற்கு ஜியா பேரரசோடு போர் புரிந்து வெற்றி பெற்றபோது, போரில் ஏற்பட்ட காயத்தால், இன்சுவான் என்ற இடத்தில் தன் குதிரையிலிருந்து விழுந்து இறந்தார் என்கிறார்கள்.
- 'மங்கோலியர்களின் ரகசிய வரலாறு' எனும் பழைமையான நூல், வேட்டைக்குச் சென்றபோது ஏற்பட்ட காயத்தால் செங்கிஸ் கான் இறந்தார் என்கிறது.
- வரலாற்றுப் புகழ்பெற்ற வெனிஸ் யாத்ரீகரான மார்க்கோ போலோ, 'கடைசிப் போரின்போது செங்கிஸ் கான் உடலில் துளைத்த அம்பு ஒன்றினால் ஏற்பட்ட காயம் ஆறவே இல்லை. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார்' என எழுதியிருக்கிறார்.
- 'கடைசிப் போரில் மேற்கு ஜியா நாட்டின் இளவரசியை செங்கிஸ் கான் அபகரித்து வந்தார். ஓர் அந்தரங்கமான தருணத்தில் அவள் குறுவாளால் செங்கிஸ் கானைக் குத்திக்கொன்றாள்' என 17-ம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்கிறது.
- மின்னல் தாக்கி இறந்ததாகவும் சொல்கிறார்கள்.
உயிரோடு இருந்தபோது பேரராசாக இருந்த செங்கிஸ் கான், இறந்த பிறகு தன் கல்லறை யார் கண்ணிலும்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதற்காகத் தன் மகன்களிடமும் நெருக்கமான தளபதிகளிடமும் சத்தியம் வாங்கியிருந்தார்.
"என் கல்லறையில் என்னுடன் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள், மரணத்துக்குப் பிறகான பயணத்தில் என்னை வழிநடத்தட்டும்" என்று கேட்டிருந்தார். பூனைகளை மட்டுமல்ல. செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் கல்லறையில் அவருடன் புதைக்க முடிவெடுத்தார்கள். அந்தக் கல்லறையை படு ரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுத்தார்கள்.
அவரின் இறுதி ஊர்வலம் ஒரு படுபயங்கர பயணமாக தொடங்கியது. செங்கிஸ் கானின் சடலத்தை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆயிரம் வீரர்களும் ஏராளமான அடிமைகளும் கிளம்பினார்கள்.
மற்ற பகுதிகளில் கொடூரமானவராக இருந்தாலும் அவருடைய நாட்டு மக்களுக்கு நல்லவராக இருந்திருப்பார் போலும். அந்நாட்டு மக்கள் 'நம் பேரரசரின் சடலத்தைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்கிறார்கள்' என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாவம் அவர்களுக்கு தங்கள் விதி என்ன ஆகும் என்பது முன்பே தெரிந்திருக்கவில்லை.
'இந்த வழியாகத்தான் செங்கிஸ் கானின் சடலத்தை எடுத்துப் போனார்கள்' என்று சொல்வதற்குக்கூட ஆள் இருக்கக் கூடாது என முடிவெடுத்து ஊர்வலத்தை பார்த்த அத்தனை பேரையும் கொன்று விட்டனர்.
தற்செயலாக அந்தப் பாதையில் எதிர்ப்பட்டவர்களுக்கும் இதே நிலை தான். மங்கோலியாவில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவு. ஓர் ஊரைத் தாண்டினால் அடுத்த கிராமம் மிக நீண்ட பயணத்துக்குப் பிறகே வரும். அதனால், சில நூறு பேரை மட்டுமே கொன்றுவிட்டு, செங்கிஸ் கானின் பயணம் தனது இலக்கை அடைந்தது.
கல்லறைக்கான பள்ளத்தை அடிமைகள் தோண்டி முடித்தனர். பேரரசரின் அடக்கம் முடிந்ததும், அத்தனை அடிமைகளும் கொல்லப்பட்டார்கள். பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட அந்தக் கல்லறையை ரகசியமாக்கிவிட்டு, புதிதாக மண்ணைத் தோண்டிய தடயம் தெரியக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் ஆயிரம் குதிரைகளை ஓடவிட்டு, எல்லா இடங்களையும் ஒரே மாதிரி சமப்படுத்தினார்கள் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஆயிரம் வீரர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர் என மங்கோலிய வரலாறு கூறுகிறது.
ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியைச் சில மணி நேரங்கள் வேறு திசையில் திருப்பிவிட்டு, அந்த நதியின் பழைய பாதையில் கல்லறையை அமைத்து முடித்து, நதியை பழையபடி தன் பாதையில் ஓடவிட்டார்கள் என்று ஒரு தகவல் கூறுகிறது.
கல்லறை:
2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மங்கோலியாவின் ஜியாங்கு மன்னர்களுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள் விநோதமானவை. தரைக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஒரு குட்டி அரண்மனைபோல கல்லறையை அமைப்பார்கள். நடுவில் மன்னரின் உடல் வைக்கப்படும். அவர் அணிந்திருந்த நகைகள், பயன்படுத்திய பொருள்கள், பயணித்த தேர் என அனைத்தையும் அந்தக் கல்லறையில் வைத்து மூடிவிட்டு, அந்தக் கல்லறை அமைந்த இடத்தில் தரைக்கு மேலே சதுரக் கற்களை அடையாளத்திற்காக வரிசையாக நட்டு வைப்பார்கள்.
செங்கிஸ் கான் கல்லறையில் இந்த நடைமுறைகளை எல்லாம் செய்துவிட்டு, தரைக்கு வெளியில் சதுரக் கற்களை மட்டும் வைக்கவில்லை. அதனால்தான், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜியாங்கு மன்னர்களின் கல்லறைகள் எல்லாம் கிடைத்துள்ளன. அதன் பிறகு ஆட்சி செய்த செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்..
தேடல்:
அமெரிக்க தங்க வியாபாரியான மௌரி கிராவிட்ஸ், 40 ஆண்டுகளாக செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடும் முயற்சியில் இருந்தார். "ஒவ்வொரு நாட்டையும் வென்ற பிறகு, அங்கிருந்து பெரிய மாட்டு வண்டிகளில் தங்கதந்தையும் விலையுயர்ந்த கல் நகைகளையும் சூறையாடி வருவது செங்கிஸ் கானின் வழக்கம். அவர் வைத்திருந்த வாளின் கைப்பிடிகூட தங்கத்தால் ஆனது. இப்படி ஏராளமான ஆயுதங்கள் செங்கிஸ் கானின் அரண்மனையில் இருந்தன. பல நாடுகளிலிருந்து வண்டி வண்டி யாகக் கொண்டுவந்த எந்தப் பொக்கிஷமும் இப்போது மங்கோலியாவில் இல்லை. இங்கிருந்து வெளியில் போகவும் இல்லை. அப்படியானால், அவை அந்தக் கல்லறையில் தான் புதைக்கபட்டிருக்கும்" என்கிறார்.
அவர் ஓக்லோக்சின் கெரெம் என்ற இடத்தில் தேடினார். அப்போது அவருக்கு விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தேடுதல் குழுவில் இருந்தவர்கள் சிலர், திடீரென பாம்பு கடித்து இறந்து போனார்கள். மலைப்பாதைகளில் சில வாகனங்கள் தானாகவே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. மங்கோலிய எதிர்க்கட்சிகள் இந்தக் குழுவின் தேடலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், அரசு இவர்களை வெளியேறச் சொல்லிவிட்டது.
செங்கிஸ் கானின் கல்லறையை இரண்டு மைல் நீளமுள்ள ஒரு சுவர் பாதுகாக்கிறது என்றும் இந்தச் சுவர் கற்களால் கட்டப்படவில்லை, முழுக்க முழுக்க பாம்புகள் பிணைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை நெருங்கும் யாரையும் இந்தப் பாம்புகள் உயிரோடு விட்டு வைக்காது எனவும் அப்போது ஒரு புரளி பரவியது.
இந்தப் பொக்கிஷங்களுக்காகப் புதையல் வேட்டைக்காரர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பல இடங்களில் தேடினர். நீண்ட மணல் பரப்புகளும், நிறைய மலைகளுமாக இருக்கும் மங்கோலியாவில் இந்தக் கல்லறையைத் தேடுவது என்பது, வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போன்றது என்று சிலர் கூறினர்.
செங்கிஸ் கானின் கல்லறை, கென்டி மலைப் பகுதியில் இருப்பதாகவும் ஒரு புரளி உள்ளது. இளம் வயதில் போரில் தோற்று தலைமறைவாக இருந்தபோது செங்கிஸ் கான், "என் இறுதிக்காலத்தில் இங்கு தான் வருவேன்" என்று சொல்லியிருந்தாராம். அதனால், இந்த பகுதியிலும் ஒரு கும்பல் தேடி வருகிறது.
செங்கிஸ் கான் பிறந்த இடம், புர்கா கால்டுன் மலைப் பகுதி. இங்கு ஓனோன் நதி ஓடுகிறது. அங்கு 'இக் கோரிக்'(மங்கோலிய மொழியில் இதற்கு ‘பேசக் கூடாத பெரிய இடம்’ என அர்த்தம்) ஒரு இடம் உள்ளது. அந்த நதிக்கு அடியில் கல்லறை உள்ளது என்றும் இதைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதால்தான் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஜப்பானிய தொல்பொருள் நிபுணர்களும் மங்கோலிய தொல்பொருள் துறையும் இணைந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தி, கடந்த 2004-ம் ஆண்டு செங்கிஸ் கானின் அரண்மனையைக் கண்டறிந்தார்கள். அரண்மனை இங்கே இருக்கிறது என்றால், பக்கத்தில் தான் கல்லறை இருக்கும் என்று தேடினார்கள்.
ஆனால், மங்கோலியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முயற்சி நிறுத்தப்பட்டது. ஆனாலும் ரகசியத் தேடலில் ஒரு பெரிய கும்பல் இறங்கியுள்ளது.
இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்பர்ட் லின் யு-மின் என்பவர், செயற்கைக்கோள் படங்கள், தரையைத் துளைத்துப் பார்க்கும் ரேடார் பதிவுகள் ஆகியற்றின் மூலம் இந்தக் கல்லறையைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மங்கோலிய மக்கள், மரணம் குறித்துப் பேசுவதைப் பாவச் செயலாகவே கருதுகிறார்கள். இறந்தவர்களைப் புதைத்த இடத்தைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும் செங்கிஸ் கானை, தங்கள் இனத்தின் வீரத்தை உலகத்துக்கு உணர்த்திய தலைவராக அவரைப் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் செங்கிஸ் கானின் ஓவியத்தை வைத்து வழிபடுகிறார்கள். சாக்லேட் முதல் ரூபாய் நோட்டு வரை எல்லாவற்றிலும் செங்கிஸ் கானின் உருவம் இருக்கும். மங்கோலிய மக்கள் எல்லோருமே தங்களை செங்கிஸ் கானின் குழந்தைகளாக நினைக்கிறார்கள்.
‘செங்கிஸ் கானின் கல்லறையை யாராவது கண்டுபிடித்துத் திறந்துவிட்டால், அதுவே இந்த உலகத்தின் கடைசி நாள்’ எனவும் நம்புகிறார்கள். கடந்த 1941-ம் ஆண்டு மங்கோலிய அரசர் டாமர்லேன் என்பவரின் கல்லறையை சோவியத் ரஷ்யாவின் தொல்பொருள் ஆய்வாளர்கள் திறந்தபோது, இரண்டாம் உலகப் போர் மூண்டது. நாஜி படைகளின் தாக்குதலால் ரஷ்யா பெரும் சேதத்தைச் சந்தித்தது என்பதை முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள்.
மிருகத்தனமான தாக்குதல்கள் நடத்தி பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த மன்னனாக வரலாறு அவரை உலகிற்கு அடையாளப்படுத்துகிறது. ஆனால் இந்த வரலாற்றை வேறுவிதமாக பார்ப்பவர்களும் உண்டு.
" அலெக்ஸாண்டரையும், சீஸரையும், நெப்போலியனையும் மாவீரர்களாக மேற்கத்திய உலகம் கூறுகிறது. அவர்களும் போர்களில் கொல்லத் தான் செய்தார்கள். உலகையே ஆள நினைத்தார்கள். அவர்களை விட அதிக நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் செங்கிஸ் கான். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து, முதன்முதலில் இந்த உலகை ஒருங்கிணைத்தவர் அவர். இரண்டு கண்டங்களுக்கும் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றமும் இவரால் தான் நிகழ்ந்தது. மதச் சுதந்திரம் மக்களுக்குக் கிடைத்தது. நிலப்பிரபுகளின் அதிகாரத்தை ஒழித்தார். சீனாவிலிருந்து காகிதம் ஐரோப்பாவுக்குப் போவது அவரால் தான் சாத்தியமானது. காகித கரன்சி, தபால் முறையை எல்லாம் அறிமுகம் செய்தார். அவர் உலகை நாகரிகப்படுத்தியவர்" என்கிறார்கள் மங்கோலியர்கள்.
அதனால் தான் உலகமே செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடினாலும், அதைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என மங்கோலிய மக்கள் நினைக்கிறார்கள்.
No comments:
Post a Comment